புதுடில்லி : "தேசிய புலனாய்வு நிறுவனம் அமைத்தது நமது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகளை ஓரம் கட்டும் செயல்' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி புகார் கூறியுள்ளார்.டில்லியில் நேற்று நடந்த முதல்வர்கள் மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது:தேசிய புலனாய்வு நிறுவனம் அமைத்ததன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் பொறுப்பை மத்திய அரசே கையில் எடுத்துக் கொண்டுள்ளது.
மாநில அரசுகளை ஓரங்கட்டியுள்ளது. இந்த விவகாரம் நமது கூட் டாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்றாலும், இப்புதிய பணியில் வெற்றி பெற மத்திய அரசை நான் வாழ்த்துகிறேன்.சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் 1967, சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் மூலம் அச்சட்டம் மேலும் பலவீனமாகியுள்ளது. பயங்கரவாதிகள் எளிதில் ஜாமீன் பெற முடியும். திருத்தப் பட்ட சட்டம் போலீசாருக்கும், புலனாய்வு நிறுவனத்தினருக்கும் போதுமான அதிகாரம் வழங்கவில்லை.இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
மாநாட்டில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில், "பயங்கரவாதம் அல்லாத இதர வழக்குகளை தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,) விசாரிக்க தடை விதிக்க வேண் டும்.மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமல், அதுபோன்ற வழக்குகளை என்.ஐ.ஏ., விசாரிக்கக் கூடாது' என்றார்.