
மதுரை : திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. தேர்தல் சுமூகமாக நடக்க செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா மதுரையில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது : திருமங்கலம் இடைத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமில்லாமலும், தயக்கமில்லாமலும் ஓட்டளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு வீடியோகிராபர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஓட்டுச்சாவடிகளில் நடப்பதை படம்பிடிப்பார். ஓட்டுப்போடுவது ஒரு புனிதமான உரிமை. எனவே மக்கள் யாருக்கு தங்கள் ஓட்டை அளிக்கிறார்கள் என்பது படம்பிடிக்க மாட்டாது. இவ்வாறு அவர் கூறினார்.
கடைசி நாள் :
திருமங்கலத்தில் அனல்பறக்கும் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கட்சித் தலைவர்களின் முற்றுகையால் திருமங்கலம் திக்குமுக்காடி நிற்கிறது. கும்பிட்ட கை அசையாமல் போட்டி போட்டுக் கொண்டு கட்சியினர் மேற்கொண்டு வரும் ஓட்டு வேட்டை கடும் குளிரிலும் சூடுபிடித்தது. 12ம் தேதி காலை ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
வெளியேற்றம் :
திருமங்கலத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்வடைவதை ஒட்டி , வாக்காளர்கள் அல்லாதவர்கள் அனைவரும் இன்று மாலையுடன் வெளியேற்றப்படுகின்றனர். வெளியாட்கள் வெளியேற வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது. இதற்காக சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.