பெங்களூரு : வளர்ச்சிப் பணிகளை குறித்த காலத்தில் நிறைவேற்றாத அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை வார்த்தைகளால் காய்ச்சி எடுத்து விட்டார், கர்நாடக முதல்வர் எடியூரப்பா.கர்நாடகாவில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் நடந்தது. வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் நடந்த இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அமைச்சர்களுடன் முதல்வர் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
இதில், எம்.எல்.ஏ., தொகுதி நிதியின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள் தாமதமாவது குறித்து அறிந்த எடியூரப்பா மிகவும் கோபம் அடைந்தார். குறிப்பாக, பிஜப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகள் மிகவும் தாமதமாக நடப்பது அவருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. உடனடியாக அந்த மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்ட அவர், "தயவு செய்து இதற்கு வேறு ஏதாவது காரணத்தை கூறாதீர்கள். நீங்கள் எல்லாம் அங்கு அமர்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள் என எனக்கு தெரியவில்லை. வளர்ச்சி பணிகளை நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார்.
அதேபோல், சிகாரிபூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணி தாமதமாவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த அதிகாரிகள்,"சில அதிகாரிகளின் தொந்தரவுகளால், சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் பணியை நிறைவேற்ற முடியாத நிலையில் உள்ளார்' என்றனர். இதைக் கேட்ட எடியூரப்பாவுக்கு கோபம் தலைக்கேறியது. "யார் அந்த அதிகாரி. அவர் இங்கு இருக்கிறாரா. ஒப்பந்தம் எடுத்தவர் பணியை நிறைவேற்ற மாட்டேன் என்று சொல்ல முடியுமா. இதுபோல் மீண்டும் கூறாதீர்கள்' என்றார்.இதுபோல், வளர்ச்சி பணிகளை சரியாக நிறைவேற்றாத சில அமைச்சர்களையும் எடியூரப்பா கண்டித்தார். எடியூரப்பாவின் இந்த அதிரடி நடவடிக்கையை அடுத்து, அதிகாரிகளும், அமைச்சர்களும் ஒருவித நடுக்கத்தில் உள்ளனர்.