லக்னோ : உ.பி.,யில் ஏழைகளுக்கான மருத்துவ வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக துணை ஜனாதிபதி அமீது அன்சாரி தெரிவித்தார்.உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் அமைந்துள்ள சத்ரபதி சாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழக நான்காவது பட்டமளிப்பு விழாவில் பேசிய துணை ஜனா திபதி அமீது அன்சாரி கூறியதாவது:ஒருவர் சராசரியாக உயிர்வாழும் ஆண்டுகள் கேரளாவில் 74 ஆண்டுகளும், உ.பி.,யில் 56 ஆண்டுகளாகவும் உள்ளது.
கேரளாவில் 85 சதவீதம் பேர் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பைப் பெறுகின்றனர். 96.6 சதவீதம் பேருக்கு மருத்துவமனையில் பிரசவம் நடக்கிறது.ஆனால், உ.பி.,யில் 11 சதவீதம் பேர் மட்டுமே பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பைப் பெறுகின்றனர். 11.3 சதவீதம் பேருக்கு மட்டுமே மருத்துவமனையில் பிரசவம் நடக்கிறது.மருத்துவச் செலவுகளே கிராமப்புற மக்கள் கடன் வாங்குவதற்கான இரண்டாவது முக்கிய காரணம். நாட்டில் மருத்துவச் செலவுகளால் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்ட மக்கள் 25 சதவீதம் பேர்; ஆனால், அதே உ.பி., யில் 34 சதவீதமாக உள்ளது.கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ வசதி அளிக்க முடியாததற்கு முக்கிய காரணம், டாக்டர்கள் கிராமங்களில் சேவை செய்ய மறுப்பது தான். இம்மாநிலத்தில் 800 செவிலியர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இவ்வாறு அமீது அன்சாரி கூறினார்.