சென்னை: சந்தனக் கட்டையின் தேவை சந்தையில் சரிந்ததால் விற்பனை குறைந்து, வனத்துறைக்கான மொத்த வருமானம் பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தின் 2006-07 மற்றும் 2007-08ம் ஆண்டுக்கான பொருளாதார நிலவரம் பற்றிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கால்நடை, மீன்வளம் மற்றும் வனத்துறை பற்றி கூறப்பட்டுள்ளதாவது: தேசிய அளவில், பால் உற்பத்தியில் தமிழகம் எட்டாவது இடத்தில் உள்ளது. 2005-06ல் 54.74 லட்சம் டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2006-07ல் 55.60 லட்சம் டன்னாகவும், 2007-08ல் 55.86 லட்சம் டன்னாகவும் உயர்ந்தது. தனி நபர் பால் அளவு நாள் ஒன்றுக்கு 233 கிராம் என உள்ளது. கால்நடைகளை கவனிக்க, தமிழகத்தில் 1207 மருந்தகங்களும், 139 மருத்துவமனைகளும், 55 நடமாடும் கால்நடை மையங்களும், 22 மருத்துவ மையங்களும், ஆறு பாலிகிளினிக்குகளும் செயல்படுகின்றன.
கறி உற்பத்தி 2005-06ல் 499.11 லட்சம் கிலோவில் இருந்து 2006-07ல் 586.64 லட்சம் கிலோவாகவும், 2007-08ல் 638.23 கிலோவாகவும் உயர்ந்துள்ளது. முட்டை உற்பத்தி 2005-06ல் 62 ஆயிரத்து 230 லட்சத்தில் இருந்து 2006-07ல் 80 ஆயிரத்து 440 லட்சமாகவும், 2007-08ல் 83 ஆயிரத்து 940 லட்சமாகவும் உயர்ந்தது. மொத்த மீன் உற்பத்தியும் 2005-06ல் 5.46 லட்சம் டன்னாகவும், 2006-07ல் 5.52 லட்சம் டன்னாகவும், 2007-08ல் 5.58 லட்சம் டன்னாகவும் உயர்ந்தது. உள்நாட்டு மற்றும் கடல்மீன் ஆகியவற்றின் உற்பத்தி விகிதாச்சாரம் 30:70 என்ற அளவில் உள்ளது. தனிநபர் மீன் நுகர்வு 2005-06ல் 13.52 கிலோவில் இருந்து, 2006-07ல் 13.70 கிலோவாக உயர்ந்துள்ளது.
வனத் துறையின் மொத்த வருமானம் 2005-06ல் 144 கோடியே 48 லட்சம் ரூபாயாக இருந்தது. இது, 2006-07ல் 82 கோடியே 34 லட்சமாக குறைந்தது. 2007-08ல் மேலும் குறைந்து வெறும் 46 கோடியே 85 லட்சம் ரூபாயானது. இதற்கு முக்கிய காரணம், சந்தையில் சந்தனக் கட்டை வாங்குதல் குறைந்தது, விற்பனை குறைந்தது மற்றும் பாதுகாப்பு சார்ந்த வனம் என்பதை பின்பற்றுவதால், வனப்பகுதியில் இருந்து தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களின் சப்ளை மிகவும் குறைந்தது ஆகியவை தான். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |
வனத்துறை வருமானம் சரிவு: நம்மவர்களுக்கு சட்டம் ஒன்றேதான் குறி. என்று அதன் படி நடப்பதாக நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் இழந்து நம்மையும் அழித்து விடுவார்கள். இவர்களும் நினைக்க மாட்டர்கள் சொன்னாலும் புரிந்து கொள்ளவும் மாட்டர்கள். ஏதாவது சொன்னால் இவனுக்கு இதில் என்ன லாபம் என்று நினைத்து நம்மை அவமானப்படுத்தியோ அல்லது சிறைக்கோ அனுப்பிவிடுவார்கள்? தனிப்பட்ட ஒரு மனிதன் ஜோசியம், கைரேகை என்று பல கோடி சம்பாதிக்கும்போது மிகப் பெரிய காட்டைத் தன் வசம் கொண்ட இவர்களால் என் லாபம் ஈட்ட முடியவில்லை? இவர்கள் அரசிடம் சண்டையிட்டு லாபம் சம்பாதிக்கும் திட்டங்களை அமல் படுத்தவேண்டும் இல்லை என்றால் கோர்ட்டுக்கும் சென்று அமல் படுத்த வேண்டும். முதலில் நீங்கள் வைத்து இருக்கும் '' இது வனப்பகுதி அனுமதி இல்லை ''என்ற பலகையை அப்புறப்படுத்த வேண்டும். இன்று மக்கள் விரும்பி வளர்க்க ஆர்வ மாக இருக்கும் ராசி, நட்சத்திர மரங்களை வளர்த்து அதன் கன்றுகளை விற்கலாம், காட்டு மிருகங்களை வீடுகளில் வளர்க்க அனுமதி அளித்தல், இயற்கையோடு வாழ விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்காக குடில் அமைத்துத் தந்து வாடகை வசூலித்தல், இதன் மூலம் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருவார்கள் வருமானமும் பெருகும். காட்டு மிருகங்களை வீடுகளில் வளர்தாளால் எந்த ஒரு பேரிழப்பும் வராது என்பதால் அதற்க்கு முன்னிரிமை தரவேண்டும். இதன் மூலம் பல கோடி ருபாய் வருமானம் கிடைக்கும், அவைகளின் எண்ணிக்கையும் பெருகும். இது போன்ற பல அறிய திட்டங்களை அமல் படுத்தி வனத்துறையினர் வளர வேண்டுகிறேன். Lion Dr S Sekar India
|
by Ln Dr S Sekar,Chennai,India 11/7/2009 10:15:34 AM IST |