சென்னை: பாட நூல்களை அச்சிட மீண்டும் விண்ணப்பங்களை வரவேற்று, பாடநூல் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. "கடந்த ஜூன் மாதம் இறுதி செய்யப்பட்ட விலையை ஏற்று அச்சிட விரும்புபவர்கள், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பள்ளி பாடநூல்களை அச்சிடுவதற்கான ஒப்பந்தம், நான்கு மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு, ஜூன் கடைசியில் இறுதி செய்யப்பட்டது. பாடநூல்களை அச்சிடுவதற்கான விலை கட்டுபடியாகாததால், விலையை அதிகரித்து நிர்ணயிக்க வேண்டும் என்று, அச்சக உரிமையாளர்கள் கோரினர். இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வி அமைச் சர் தங்கம் தென்னரசு முன்னிலையில், கடந்த 2ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதனால், பாடநூல்களை அச்சிடுவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில், பழைய விலையை ஏற்று, பாடநூல்களை அச்சிடுவதற்கு அச்சக உரிமையாளர்கள் தயாராகி விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, பாடநூல்களை அச்சிட இரண்டாவது முறையாக விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக, பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. "ஜூன் மாதம் இறுதி செய்யப்பட்ட விலையை ஏற்று, பாடநூல்களை அச்சிட விரும்புபவர்கள், வரும் 20ம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்' என்று பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
முன்னணி அச்சக நிறுவனங்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம், புதிய அச்சக நிறுவனங்களுக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இதில், அதிகமான நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும், அனுபவம் வாய்ந்த பழைய அச்சக நிறுவனங்களே பாடநூல்களை அச்சிடும் என்றும் கூறப்படுகிறது.பாடநூல் கழக வட்டாரங்கள் நேற்று கூறுகையில்,"எல்லாப் பிரச்னையும் தீர்ந்து விட்டது.
பழைய விலையில் அச்சிடுவதற்கான உத்தரவுகள், ஓரிரு நாளில் அச்சக உரிமையாளர்களுக்கு வழங்கப்படும். விலையில் எந்தவித மாற்றங்களும் கிடையாது' என்று தெரிவித்தன. இதன் மூலம், பாடநூல் கழக பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. எனினும், பள்ளி திறப்பதற்குள் பாடநூல்கள் அச்சிட்டு முடிக்கப்படுமா, பள்ளி திறந்ததும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படுமா என்பது ஏப்ரல், மே மாதங்களில் தான் தெரியும்.
| வாசகர் கருத்து |