புதுச்சேரி: அரசு புனர்வாழ்வு மருத்துவ மையத்தின் செயற்கை அவயங்கள் தயாரிப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென, இந்தியன் ஆர்தோஸ்டிக் அண்ட் பிராஸ்தடிக் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்க செயலர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:
உடல் ஊனமுற்றோருக்கு செயற்கை அவயங்கள் தயாரிப்பதற்காக, சென்னை கே.கே., நகரில் அரசு புனர்வாழ்வு மருத்துவ மையம் தனியாக செயல்பட்டு வருகிறது. செயற்கை அவயங்கள் தயாரிப்பு பிரிவில் 48 பேரும், மாவட்ட துணை மையங்களில் 32 பேரும் பணிபுரிகின்றனர். கடந்த 1998 மற்றும் 2002ம் ஆண்டு முதல் செயற்கை அவயங்கள் பிரிவில் காலியான எந்த பதவிகளும் நிரப்பப்படாததால், சென்னையில் மட்டும் மொத்தமுள்ள 48 பதவிகளில், 29 பதவிகள் காலியாக உள்ளன;
19 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால், ஊனமுற்றோருக்கான உபகரணங்கள் பொருத்துவதில் சிரமமும், தாமதமும் ஏற்படுகிறது. வெளிநாட்டு மற்றும் தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் பயன் பெறுகின்றன. ஊனமுற்றோர் பெரும் செலவு செய்து, உபகரணங்களை தனியாரிடம் வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர். இந்தியாவிலேயே முதலாவதாக 1972ம் ஆண்டு துவங்கப்பட்ட ஊனமுற்றோர் உபகரணங்கள் தயாரிப்பு பயிற்சி பள்ளியில் ஏழு பதவிகள் நிரப்பப்படாமல், ஒரே ஆசிரியரை மட்டும் கொண்டு செயல்பட்டு வருகிறது
. இரண்டாண்டு பட்டயப் பயிற்சியில் ஆர்வமுடன் சேரும் மாணவர்கள் ஆசிரியர் இல்லாததால், பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடுகின்றனர். தமிழகத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்பட்ட மற்ற மாநிலங்களில், பட்டயப் படிப்பில் இருந்து பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு மையங்களாக வளர்ச்சியடைந்துள்ளன. தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு பயிற்சி பள்ளியும் மூடப்படும் நிலையில் உள்ளதால், எதிர்காலத்தில் ஊனமுற்றோர் சிரமப்படும் நிலை உருவாகும். இப்பயிற்சி பள்ளியில் படிப்பு முடித்தவர்களுக்கு அரசின் வேலைவாய்ப்பு இருந்தும் அது நிரப்பப்படாததால் பாதிக்கப்படுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |
அவயம் என்றால் அடைகலம், அடைகலம் புகுவோன் அவயவம் என்றால் உடல் உறுப்பு
|
by T Riki,India,India 11/7/2009 12:40:16 PM IST |