கோவை: கோவை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால், நோயை கட்டுப்படுத்த வீடு,வீடாக சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சையளிக்கப்பட்டு, சிலர் குணமடைந்து திரும்பி விட்டனர். சிலர் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரத்தில், ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சரண்யா( 22) என்ற கர்ப்பிணி பன்றிக் காய்ச்சலால் அரசு மருத்துவமனையில் இறந்தார். சத்தி ரோட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்நோய் தாக்கி கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக தகவல் பரவியுள்ளது.
பரவி வரும் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தவும், மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதியைப் போக்கவும் மாநகராட்சி நகர் நலத்துறையும், பொது சுகாதாரத் துறையும் இணைந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளன. வீடு வீடாக சோதனை: அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளின் பட்டியலைப் பெற்று, அவர்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு, சுகாதாரம் மற்றும் நகர் நலப்பிரிவைச் சேர்ந்த செவிலியர்கள் நேரில் சென்று வீடு, வீடாகச் சோதனை மேற்கொள்கின்றனர்.
இதுவரை 20 வார்டு பகுதிகளிலும், 10 பள்ளிகளிலும் முழுமையான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் சுமதி கூறியதாவது: நகர் நலப்பிரிவு சுகாதார செவிலியர்களை கொண்டு வார்டுதோறும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நகர் நல மையங்களில் சிகிச்சைக்கு வந்துள்ள நோயாளிகளின் பட்டியலைப் பார்த்து, யாருக்கேனும் பன்றிக் காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், அந்த முகவரிக்கு நேரில் சென்று விசாரிக்கிறோம்.
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்துள்ளவர்களின் பட்டியலைப் பெற்று, அந்த முகவரியில் யாருக்கேனும் நோய் அறிகுறியிருந்தால் பரிசோதித்து முறையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து வருகிறோம். இவ்வாறு சுமதி கூறினார். சுகாதாரத்துறை சார்பில் புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில், பன்றிக் காய்ச்சல் குறித்த பரிசோதனைகள் வீடு, வீடாக நடத்தப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை துணை இயக்குனர் துரை கண்ணன் கூறினார்.
| வாசகர் கருத்து |
good ,keep it up . continue ur job.we must want public co-operation.
|
by v harshetha,kovai,India 11/8/2009 9:47:09 AM IST |