காட்டுமன்னார் கோவில்: வீராணம் ஏரியில் தண்ணீர் நிரம்புவதால் வெள்ளியங்கால் ஓடை, சேத்தியாதோப்பு அணைக்கட்டு, ஜீரோ பாயின்ட் மற்றும் சென்னைக்கு என, நான்கு வழிகளில் வினாடிக்கு 1,958 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த 28ம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை துவங்கி, கடந்த நான்கு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வீராணம் ஏரியின் முழு கொள்ளளவான 1,465 மில்லியன் கன அடியில் நேற்று, 684 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. பெரம்பலூர், அரியலூர் மற்றும் வீராணம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்யும் கன மழை காரணமாக செங்கால், பாப்பாகுடி, பாளையங்கோட்டை, ஆண்டிப்பாளையம் ஓடைகள் வழியாக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2,000 கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும், தண்ணீர் வரத்து அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள அபாயத்தை போக்கும் பொருட்டு, இந்த ஆண்டு முதன் முறையாக வெள்ளியங்கால் ஓடை வழியாக வினாடிக்கு 1,000 கன அடியும், சேத்தியாதோப்பு அணைக்கட்டில் வெள்ளாற்றில் 633 கன அடியும், ஜீரோ பாயின்ட்டில் 250 கன அடியும், சென்னை மெட்ரோ வாட்டருக்கு 75 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
ஏற்கனவே மணவாய்க்கால் வழியாக வரும் தண்ணீர் வெள்ளியங்கால் ஓடைக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், மொத்தம் 11 ஆயிரம் கன அடி நீர் வெள்ளியங்கால் ஓடையில் ஓடுகிறது. வீராணம் ஏரி மற்றும் மணவாய்க்கால் வழியாக வரும் தண்ணீரும் வெள்ளியங்கால் ஓடை வழியாகச் செல்வதால், வீராநத்தம், திருநாறையூர், நந்திமங்கலம், குமராட்சி, சிரகிழந்தநல்லூர், மேலபருத்திக்குடி, கீழபருத்திக்குடி உள்ளிட்ட 15 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
| வாசகர் கருத்து |