'எவரெஸ்ட்' ஏற துடிக்கும் சென்னை வாலிபர்
பிப்ரவரி 01,2010,00:00 IST
சென்னை:குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் முதல்முறையாக, "எவரெஸ்ட்' சிகரம் ஏறி சாதிக்க உள்ளார்.சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(26). "இன்ஜினியரிங்' பட்டதாரியான இவர், சிங்கப்பூரில் ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார்.
உலகின் உயரமான, "எவரெஸ்ட்' சிகரம் நோக்கிய தனது பயணம் குறித்து இவர் கூறியதாவது:சிறுவயதில் இருந்தே மலையேறுவதில் ஆர்வம் உண்டு. அந்த ஆர்வம் மற்றும் முயற்சியின் பலனாக கடந்த இரண்டு ஆண்டுகளில், ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரமான, "கிளிமன்ஜாரோ' முதல், திபெத்தில் உள்ள, உலகின் ஆறாவது உயர்ந்த சிகரமான, "சோ ஓயு' வரை நிறைய மலைகள் ஏறியுள்ளேன். வரும் 6ம் தேதி, நியூசிலாந்தில் உள்ள, "மவுன்ட் குக்' மலையிலும் ஏற உள்ளேன்.
இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தாற்போல, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், வரும் மார்ச் 29ம் தேதி, "எவரெஸ்ட்' சிகரம் நோக்கிய சாதனை பயணத்தை துவங்க உள்ளேன். சென்னையிலிருந்து முதல்முறையாக, "எவரெஸ்ட்'டில் ஏற உள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன்."மவுன்ட்டைன் கைட்ஸ்' என்ற நிறுவனத்தின் உதவியுடன், 65 நாட்கள் மேற்கொள்ள உள்ள இந்த பயணத்திற்கு, நேபாள அரசின் அனுமதி, மலையேறுவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவற்றிற்கு 30 லட்சம் ரூபாய் தேவை.
பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகளுக்கு மறுவாழ்வு தந்துவரும், "துளிர்' போன்ற அமைப்புகளுக்கும் உதவ எண்ணி உள்ளேன். என் முயற்சி வெற்றிபெற, "கார்ப்பரேட்' நிறுவனங்கள், தனிநபர்களிடம் நிதி உதவியை எதிர்பார்க்கிறேன்.நிதியுதவி அளிப்பவர்களை கவுரவிக்கும் விதமாக, அவர்களின் அஞ்சல்தலை அளவிலான புகைப்படம் பொருந்திய பதாகையை எனது பயணத்தின்போது, "எவரெஸ்ட்'டிற்கு எடுத்து செல்ல உள்ளேன். உதவ விரும்புவோர் www.climbeverestwithme.comஎன்றஇணையதளம், climbeverestwithme@gmail.comஎன்ற மின்னஞ்சல் மற்றும் 9176432897 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு சந்தோஷ் குமார் கூறினார்.