சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வன அலுவலகத்தில் சந்தனக்கட்டை விற்கப்படுகிறது. ஒருவருக்கு அதிகபட்சமாக மூன்று கிலோ மட்டுமே தரப்படும்.தமிழகத்தில் சத்தியமங்கலம், சேலம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே வனத்துறை சார்பில் சந்தனக்கட்டை "டிப்போ' உள்ளது. இங்கு ஏலம் முறையில் சந்தனக்கட்டை விற்பனை செய்யப்படுகிறது.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் போட்டிபோட்டு சந்தனக்கட்டையை ஏலம் எடுப்பர். சமீபகாலமாக சந்தனக்கட்டை உற்பத்தி குறைந்துவிட்டது.
இதன் காரணமாக சந்தனக்கட்டை ஏலமும் குறைந்துகொண்டே வருகிறது.சில ஆண்டுக்கு முன், மூன்று மாதத்திற்கு ஒரு முறை சந்தனக்கட்டை ஏலம் விடப்பட்டது. தற்போது ஆண்டுக்கு ஒரு முறை கூட ஏலம் விடுவதில்லை. சந்தனக்கட்டை இருப்பு இல்லாததே காரணம்.அதே சமயம் பொதுமக்களுக்கும் மற்றும் கோவிலுக்கும் தேவைப்படும் சந்தனக்கட்டை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வன அலுவலகத்தில் சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் சந்தனம் என்று கூறி வில்வம் மற்றும் வேறு சிலமரத்தூள் அரவையுடன் செயற்கை சந்தன வாசனை சேர்க்கப்பட்ட கலவையை வாங்குவதை தவிர்க்க வாய்ப்பாக அமையும்.
"ஜாக்போக்கல்' என்ற இரண்டாம் தர சந்தனக்கட்டை ஒரு நபருக்கு குறைந்தது 50 கிராம் முதல் அதிகபட்சமாக மூன்று கிலோ வரை விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 7,425 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் 12.5 சதவீதம் விற்பனை வரி சேர்க்கப்பட்டுள்ளது.ஐயப்ப பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அதிகமாக சந்தனக்கட்டை வாங்குகின்றனர். சந்தனக்கட்டை வாங்கும் பொதுமக்கள், விண்ணப்பம் எழுதிக் கொடுக்க வேண்டும். கோவிலுக்கு தேவைப்பட்டால் கோவில் நிர்வாக அதிகாரிகளிடம் இருந்து சந்தனக்கட்டை வேண்டி விண்ணப்பம் தர வேண்டும்.இத்தகவலை சத்தியமங்கலம் சந்தனக்கட்டை விற்பனை அதிகாரி வனத்துறை ரேஞ்சர் மணி கூறினார்.
| வாசகர் கருத்து |