திருத்தணி:20 கோடி செலவில் முருகன் கோவிலுக்கு புதிய தங்க விமானம் விரைவில் அமைக்கப்படும் என அறங்காவலர்கள் பதவி ஏற்பு விழாவில் அறங்காவலர் குழுத் தலைவர் தெரிவித்தார்.திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நான்காம் ஆண்டு அறங்காவலர்கள் தேர்தல் இந்து அறநிலைத்துறை உதவி ஆணையர் அசோக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இதில், நான்காவது முறையாக கோவில் அறங்காவலர் குழுத் தலைவராக மு.ஈஸ்வரப்பன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், ஏ.வி.சக்கரப்பன், கு.பாலகிருஷ்ணன், உஷாரவி மற்றும் பொன்குணசேகர் ஆகிய நான்கு அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டது. பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று காலை 11 மணிக்கு மலைக்கோவில் வள்ளி மண்டபத்தில் நடந்தது.
கோவில் நிர்வாக அதிகாரி பரஞ்ஜோதி தலைமை வகித்தார். உதவி ஆணையர் அசோக்குமார் புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் அறங்காவலர் குழுத் தலைவர் மு.ஈஸ்வரப்பன் பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் கோவிலில் கோவிலில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்துள்ளன. பக்தர்களின் பல ஆண்டுகள் கனவாக இருந்த 9 நிலை ராஜகோபுரம் ஆறு கோடியில் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.இன்னும் பத்து மாதத்தில் இப்பணி முடிவு பெறும். மாவட்டத்தில் உள்ள எந்த கோவிலுக்கும் இல்லாத தங்கவிமானம் 20 கோடி செலவில் இந்தாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும்.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சரவணப் பொய்கையில் உள்ள நான்கு புதை குழிகள் அகற்றப்பட்டு, தற்போது 25 லட்சம் செலவில் திருக்குளத்தில் வளர்ச்சி பணிகள் செய்யப்படுகின்றன. இதன் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளன.அதே போல, முருகன் கோவிலின் துணை கோவில்களான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர், திருப்பாச்சூர் நாதேஸ்வரர் மற்றும் கரிம்பேடு ஈஸ்வரன் கோவில்களில் இந்தாண்டு திருமண மண்டபம் திறப்பு மற்றும் கும்பாபிஷேகம் நடத்தப்படுமென அவர் தெரிவித்தார்.விழாவில், தி.மு.க., நகர செயலர் சந்திரன், ஒன்றிய செயலர்கள் அகூர் மாணிக்கம், பள்ளிப்பட்டு ரவீந்தரநாத், ஆர்.கே.பேட்டை சுப்பிரமணி உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
| வாசகர் கருத்து |
நல்ல செய்தி. வரவேற்கத்தக்கது. திருத்தணி முருகா எங்களுக்கு வாழ்வும் வசதியும், வளமும் தருவாய். ப. மாதவன், தலைவர், மகிழ்ச்சி நகர் II நில உரிமையாளர் சங்கம், என்.282 & 283, மகிழ்ச்சி நகர் II, கொள்ளாள குப்பம்.
|
by B Madhavan,chennai 119,India 06-02-2010 07:26:29 IST |