சென்னை: துரைப்பாக்கம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வாலிபர் கழுத்தை அறுத்து, எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர். கொலை செய்தவர்களில் ஒருவர் விட்டுச் சென்ற பைக், அவர்களை காட்டிக் கொடுத்துள்ளது.
இவ்வழக்கில், தலைமறைவான மேலும் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர். துரைப்பாக்கம், கண்ணகி நகரில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு உள்ளது. இதில் காலியாக இருந்த ஒரு வீட்டில், துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், போலீசாரிடம் புகார் செய்தனர். வெளிப்பக்கம் பூட்டியிருந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போலீசார், அங்கு வாலிபர் கழுத்து அறுக்கப்பட்டு, எரிந்த உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர், மயிலாப்பூர் ஆர்.ஏ., புரத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகன் வினோத்(21) எனத் தெரிந்தது.
பெயின்டரான வினோத், துரைப்பாக்கம் கண்ணகி நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, கண்ணகி நகரைச் சேர்ந்த சிலருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில், கண்ணகி நகரைச் சேர்ந்த வைரவனின் மகன் சுரேஷ்(24) வேணுகோபாலின் மகன் நித்யானந்தம்(23) ஆறுமுகத்தின் மகன் எழிலரசன்(23) தவமணியின் மகன் அருள்தாஸ்(25) மற்றும் செம்பரம்பாக்கம் பழஞ்சூரைச் சேர்ந்த சோகாவின் மகன் ரூபன்(25) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
நித்யானந்தம் பல்வேறு குற்ற வழக்குகளில் சிறை சென்றவர். குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறை சென்றிருந்த நித்யானந்தம், சில தினங்களுக்கு முன் விடுதலையானார். சம்பவத்தன்று, வினோத், சுரேஷ், நித்யானந்தம், எழிலரசன், அருள்தாஸ், ரூபன், செங்கா, கணேஷ் ஆகியோர் கண்ணகி நகர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் காலியாக இருந்த வீட்டில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது, வினோத்திற்கும், மற்றவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
நித்யானந்தமிடம், "இப்போது வேண்டுமானால் நீ பெரிய ரவுடியாகியிருக்கலாம். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் அடி வாங்கியவன் தானே நீ' என வினோத் கூறியுள்ளார். ஆத்திரமடைந்த நித்யானந்தம் மற்றும் நண்பர்கள், வினோத்தை அடித்து உதைத்தனர்.இதில், வினோத்தின் வாயிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. உடனே வினோத், "என்னையே அடித்து விட்டாயா? போலீசில் உன்னைப் பற்றிய உண்மைகள் எல்லாவற்றையும் கூறி மாட்டி விடுகிறேன்.
நீ செய்த தவறுகள் அனைத்தையும் போலீசில் கூறப் போகிறேன். உன்னை மீண்டும் சிறைக்கு அனுப்புகிறேன்' எனக் கூறியுள்ளார். இதையடுத்து, நித்யானந்தம் மற்றும் நண்பர்கள் கத்தியை எடுத்து வினோத்தின் கழுத்து உட்பட பல இடங்களில் குத்தினர். பலத்த காயமடைந்த வினோத், அந்த இடத்திலேயே இறந்தார். வினோத்தின் உடலை எரித்து விட்டால், கொலை வழக்கிலிருந்து தப்பி விடலாம் என நண்பர்கள் முடிவு செய்தனர். உடனே சுரேஷ், வீட்டின் அருகே நிறுத்தி வைத்திருந்த நித்யானந்தம் பைக்கிலிருந்து பெட்ரோலை எடுத்து வந்தார்.
அந்த பெட்ரோலை, வினோத்தின் மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில், வினோத்தின் உடல், முழங்கால் வரை எரிந்தது. பின் கொலை செய்த ஏழு பேரும் சம்பவ இடத்திலிருந்த தப்பினர். நித்யானந்தம் தனது பைக்கை, "ஸ்டார்ட்' செய்ய முயன்றார். பெட்ரோல் இல்லாததால், பைக் "ஸ்டார்ட்' ஆகவில்லை. பைக்கை அந்த இடத்திலேயே விட்டு விட்டு ஓடி விட்டார்.
கொலை நடந்த இடத்திற்கு அருகே தனியாக நிற்கும் பைக்கை கண்டுபிடித்த போலீசார், அது யாருடையது என விசாரித்தபோது, நித்யானந்தனுக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து, நித்யானந்தம், அவனது கூட்டாளிகள் சுரேஷ், எழிலரசன், அருள்தாஸ், ரூபன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் செங்கா, கணேஷ் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
| வாசகர் கருத்து |
அருமையா சொன்னீங்க சதீசு! இன்னொரு காரணமும் இருக்கு! என்னன்னா, நம் முதல்வர் கத்தி விற்பனை செய்ய தடை கொண்டு வரல! அப்படி கொண்டு வந்திருந்தா இந்த பசங்களுக்கு கத்தி கிடைச்சிருக்காது. அந்த கொலையும் நடந்திருக்காது. ஹி.. ஹி... ஹி ...
|
by sanjay,chennai,India 11/4/2009 4:38:44 PM IST |
எல்லோரும் இருபது வயதை அடைந்தவர்கள் ,, இதற்கு மூல காரணம் நம் முதல் அமைச்சர். புரியேலையா?? மது. சரக்கை வுள்ளே போட்டா பின்னர் என்ன நடக்குதுன்னு யாருக்கு தெரியும் ??அந்த ஐவரின் வாழ்க்கை இனி அதோ கதி தான் ,,இது போலே ஆயிரக்கணக்கான இளைநர்களின் வாழ்வு படு கேவலமாக போகிறது ..முடிவு???
|
by k sathish,cbe,India 11/4/2009 3:49:13 PM IST |