புதுடில்லி: ""கடந்தாண்டு மும்பையில் நிகழ்ந்தது போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள் ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுக்க வேண்டும்,'' என ராணுவத் தளபதி தீபக் கபூர் நேற்று எச்சரித்துள்ளார்.
டில்லியில் நடைபெற்ற ராணுவ விழா ஒன்றில் பங்கேற்ற, ராணுவத் தளபதி தீபக் கபூர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மும்பைத் தாக்குதல் போன்ற தாக்குதல் மீண்டும் நடைபெறாமல் தடுக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அத்தகைய தாக்குதல் மீண்டும் நடைபெறாது என, கூற முடியாது. சமீபத்தில், தெற்காசிய பகுதி பயங்கரவாத தாக்குதலுக்கு ஆட்பட்டுள்ளது.
இந்தியா, ஆப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் என, எந்த நாடாக இருந்தாலும், பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து கூட்டாக சேர்ந்து போராட வேண்டும். சமீப காலங்களாக, பாகிஸ்தானும், பயங்கரவாத தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. அத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் என்னை கேட்டுக் கொண்டனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளதாக, பாகிஸ்தான் ராணுவம் சமீபத்தில் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்குள் பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவிற்கு இல்லை. பாகிஸ்தான் அமைதியாகவும் நிலையாகவும் இருக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம்.இவ்வாறு தீபக் கபூர் கூறினார்.
| வாசகர் கருத்து |
ராணுவம் ஆயத்தமாக இருக்க வேணும். முன்னதாகவே கூட்டுசதியை தகர்க்க வேண்டும்
|
by T S vaidya,sydney nsw 2212,India 11/4/2009 9:08:40 AM IST |