காக்கிநாடா: ஆந்திராவில் இரண்டு நாள் முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்துள்ளதால், அப்பகுதியில் விடுதலைப் புலிகள் ஊடுருவல் மற்றும் வன்முறை நடக்கலாம் என, உளவுத் துறையினர் எச்சரித்ததால், ஆந்திர போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாவட்டங்களில் அவர்களுக்கு எதிராக "கிரீன் ஹன்ட்' என்ற வேட்டையை போலீசார் துவங்கியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திராவில் இரண்டு நாள் முழு அடைப்புக்கு மாவோயிஸ்ட்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த முழு அடைப்பின் போது, மாவோயிஸ்ட்கள் உள்ள பகுதிக்கு விடுதலைப் புலிகள் ஊடுருவலாம் அல்லது பயங்கரவாதிகள் ஊடுருவலாம். அப்படி ஊடுருவும் பயங்கரவாதிகள் மும்பையில் கடந்த ஆண்டு நடந்தது போன்ற தாக்குதலை நடத்தலாம் என, உளவுத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
அதனால், ஆந்திர போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: கோலாலம்பூரில் இருந்து 12 க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகள், கடந்த சில நாட்களுக்கு முன், விசாகபட்டினம் வந்துள்ளனர். இவர்கள் எல்லாம் குண்டுகள் தயாரிப்பதிலும், அவற்றை குறிப்பிட்ட இடத்தில் வைத்து வெடிக்கச் செய்வதிலும் கைதேர்ந்தவர்கள். இதேபோல மேலும் பல புலிகள் ஊடுருவலாம் என்பதால், அதைத் தடுக்கும் வகையில், துறைமுகங்களில் தீவிர கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
| வாசகர் கருத்து |