கூடலூர்: கூடலூர் பாண்டியர் டான் டீ தேயிலை தொழிற்சாலைக்கு, புதிய மெஷின் என்ற போர்வையில், பழைய மெஷினை சப்ளை செய்த தனியார் நிறுவனத்தை, டான் டீ அதிகாரிகள் "பிளாக் லிஸ்டில்' சேர்த்தனர்.
மாநில அரசின் நிறுவனமான டான் டீக்கு சொந்தமாக கூடலூர் பகுதியில் ஏழு தேயிலை தோட்டங்களும், 4 தேயிலை தொழிற்சாலைகளும் உள்ளன. இதில், பாண்டியார் தேயிலை தொழிற்சாலைக்கு தேவையான சில புதிய மெஷின்களை சப்ளை செய்ய டெண்டர் கோரப்பட்டது. இதற்கான டெண்டரை, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது. டெண்டர் பெற்ற அந்த நிறுவனம், கடந்த வாரம் லாரி மூலம் மிஷின்களை பாண்டியார் தேயிலை தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்தது.
மிஷின்கள் பழையது போன்று இருப்பதாக சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள், இது குறித்து தொழிற் சங்கத் தலைவர்களுக்கு தெரிவித்தனர். தகவலறிந்த டான் டீ நிர்வாக இயக்குநர் கணேஷ், பொது மேலாளர் திப்பனா டாங்கே, பாண்டியார் தொழிற்சாலைக்கு சென்று, தனியார் நிறுவனம் சப்ளை செய்த மெஷின்களை ஆய்வு செய்த போது, அவை பழைய மெஷின்கள் என தெரிந்தது. இதனால், அந்த மெஷின்களை அந்த நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பவும், நிர்வாகத்தை ஏமாற்றிய அந்த தனியார் நிறுவனத்தை "பிளாக் லிஸ்டில்' கொண்டு வர டான் டீ அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணனிடம் கேட்ட போது, "இது போன்ற தவறுகள் இனி ஏற்படுவதை தடுக்க, டெண்டர் மூலம் கோரப்படும் பொருள்களை டான் டீ அதிகாரிகள் சான்று பெற்ற பின் இறக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். ஏ.டி.பி., கூடலூர் பகுதி செயலர் விஜயகுமார் கூறுகையில், "நிர்வாகத்தை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்ட இந்த தனியார் நிறுவனம், ஏற்கனவே டான் டீக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலைகளுக்கு இது போன்ற மெஷின்களை சப்ளை செய்திருந்தால், அதையும் ஆய்வு செய்ய வேண்டும்' என்றார்.
| வாசகர் கருத்து |