திண்டுக்கல்: திண்டுக்கலில் பஸ்சில் வந்த வைர நகை வியாபாரியிடம், 28 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர நகைகளை திருடிய பெண்ணை, போலீசார் தேடி வருகின்றனர். கும்பகோணம், நாராயணா ஜுவல்லர்ஸ் நிறுவனத்தார், மும்பையில் வைர நகை வாங்கி, தமிழகம் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.
இந்த கடை ஊழியர், மயிலாடுதுறை திருக்கோவிலூரைச் சேர்ந்த இந்தரேஷன்(26). இவர், 190 வைர நகைகளை பையில் வைத்து, திண்டுக்கலில் உள்ள ஒரு நகைக் கடைக்கு, "ஆர்டரின்' பேரில் கொண்டு வந்துள்ளார். திருச்சியில் நேற்று காலை 11 மணிக்கு பஸ் ஏறியுள்ளார். மணப்பாறைக்கு பஸ் வந்த போது ஒரு பெண், கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறியுள்ளார். அந்த பெண்ணிற்கு பஸ்சில் உட்கார இடம் கொடுத்து விட்டு, இவர் எழுந்து நின்றுள்ளார். அப்போது அந்த பெண்ணின் காலடியில், இவரது நகை பை இருந்துள்ளது.
இதில், இருந்த 97 வைர நகைகள் பிளேடால் கிழித்து திருடப்பட்டது. இவற்றின் மதிப்பு 28 லட்ச ரூபாய். பின், அந்த பெண் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் இறங்கியுள்ளார். இந்தரேஷன், பஸ் ஸ்டாண்ட்டில் பையை பார்த்தபோது வைர நகை திருடப்பட்டது தெரிய வந்தது. அவர், திண்டுக்கல் நகர் வடக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் நகை திருடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
| வாசகர் கருத்து |