கோவை: கோவையில், மர்மக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலியானார். இது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுக்கு மாநகராட்சியினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆர்.எஸ்.புரம்., சிவசுப்ரமணியம் ரோட்டைச் சேர்ந்தவர் கென்னடி ராஜ். எட்டு மாத கர்ப்பிணியான இவரது மனைவி சரண்யா(
22), கடந்த அக்.,30 அன்று உடல் வலி, தொண்டை எரிச்சலோடு காய்ச்சலுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 3 ம் தேதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி அவர் இறந்தார். மேலும் ஒரு பெண் பலி: ரத்தினபுரி கணேஷ் வீதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுலோச்சனா(27). காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், சத்தி ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி சேர்க்கப்பட்டார்.
கடந்த 6ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் இறந்தார். இயற்கை மரணம் என்பதால் பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரினர். மருத்துவமனை நிர்வாகிகள், "சந்தேக மரணம் என்பதால் போலீஸ் விசாரணைக்குப் பின்பு ஒப்படைப்போம்' என்றனர். போலீசார் மற்றும் தனியார் மருத்துவமனை அறிக்கைகள் பெறப்பட்டு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தனியார் மருத்துவமனை அளித்த அறிக்கையில்,"" நான்கு நாட்கள் காய்ச்சல் இருந்தது. டெங்கு காய்ச்சலாக இருக்கும் என்ற அடிப்படையில் சிகிச்சை மேற்கொண்டதாக,'' குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சி உதவி நகர் நலத்துறை அலுவலர் சுமதி கூறுகையில், ""எளிதில் தொற்றும் எந்த வியாதியாக இருந்தாலும், அதற்கு சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் குறித்த தகவல்களை மாநகராட்சி நகர் நலத்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரியப்படுத்தாத நான்கு மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டும், லைசன்சை ஏன் ரத்து செய்யக்கூடாது என்று கேள்வி எழுப்பியும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இறந்த பெண் வசித்த தெருவில் வசிக்கும் மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தெருவில் மருந்து தெளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
| வாசகர் கருத்து |