திருப்பூர்: திருப்பூர் வணிக வரி துறை அலுவலகத்தில், பனியன் கம்பெனிக்கு பதிவு சான்றிதழ் வழங்க, 3,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய பதிவு எழுத்தரை நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் வாங்கியதில் தொடர்புள்ளதாக, உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் ஆதில்(35). இவர், அண்மையில், புதிய பனியன் கம்பெனியை துவக்கியுள்ளார். அதற்காக, வணிகவரி துறை அலுவலகத்தில், பதிவுச் சான்றிதழ் மற்றும் வரி செலுத்துவோருக்கான அடையாள எண் கேட்டு, தேவையான ஆவணங்களுடன், 500 ரூபாய்க்கான வங்கி வரைவோலையையும் இணைத்து விண்ணப்பித்திருந்தார்.
இது தொடர்பாக, ஆதில், வணிக வரி உதவி ஆணையர் முத்துசாமியை அலுவலகத்தில் சந்தித்து, சான்றிதழை கேட்டார். அப்போது, உதவி ஆணையர் முத்துசாமி, பதிவு எழுத்தர் ஜனார்த்தனனை அழைத்து, இது தொடர்பாக ஆதிலிடம் பேசும்படி தெரிவித்துள்ளார். ஜனார்த்தனன்," சான்றிதழ் வழங்க, 3,500 ரூபாய் லஞ்சமாகக் கொடுக்க வேண்டும்' என ஆதிலிடம் நேற்று முன்தினம் கேட்டார். ஆயிரம் ரூபாய் தருவதாக, ஆதில் கூறியுள்ளார். ஆனால் ஜனார்த்தனன், "கண்டிப்பாக 3,500 ரூபாய் தர வேண்டும், மேலதிகாரிக்கும் அதில் பங்கு தரவேண்டும்' என தெரிவித்தார். இது தொடர்பாக, கோவை லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆதில் புகார் தெரிவித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொண்டனர். ஆதிலிடம், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.
விடுமுறை தினமான நேற்று, வணிக வரி அலுவலகத்தில் ஜனார்த்தனன் மற்றும் சில ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆதில் ஜனார்த்தனனிடம், 3,500 ரூபாயை கொடுத்தார். அதை வாங்கிக்கொண்ட ஜனார்த்தனன், "இரண்டு தினங்களில் சான்றிதழ் தயாராகிவிடும்' என்றார். அப்போது அங்கு அதிரடியாக நுழைந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., சண்முகபிரியா தலைமையிலான போலீசார், வணிகவரி அலுவலகத்தில் புகுந்து, ஜனார்த்தனனை, கையும் களவுமாகப் பிடித்தனர். லஞ்சம் வாங்கியதில் தொடர்புள்ளதாக, வணிக வரி துறை உதவி ஆணையர் முத்துசாமி மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
| வாசகர் கருத்து |