சென்னை:""இலவச கலர் "டிவி' வழங்குவதற்காக 7.48 லட்சம் "டிவி'கள் சப்ளை செய்வதற்கான ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1.27 லட்சம் கலர் "டிவி'க்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சிகள், துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்,'' என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். "ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் கருணாநிதி குடும்பம் பெற்றது, 20 ஆயிரம் கோடி ரூபாய்' என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார்.
சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்துக்கு முதல்வர் அளித்த பதிலுரை:உணவு பாதுகாப்புக்காக, பொது வினியோகத் திட்டம் மூலம் இலவச அரிசி வழங்கப்படுமென தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். இதை, இலவசம் எனக் கூறி மக்களிடம் ஓட்டுகளை பறிக்கும் திட்டமாக கருதவில்லை.பெண்கள் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே, திருமண உதவித் திட்டத்தில் பட்டப்படிப்பு, பட்டயம் முடித்த பெண்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், தாலிக்கு தங்கமும் வழங்க உத்தரவிட்டோம். இந்த உதவிகளில் குறை கண்டுபிடித்து, தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தான் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக, பொத்தாம் பொதுவாக கூறுகின்றனர். தாங்கள் இலவசம் வழங்கிய போது, மக்கள் வரிப்பணம் பாழாக்கப்படுவதாகவும், மக்களை சோம்பேறிகளாக்குவதாகவும் விமர்சித்த எதிர்க்கட்சியினர், பத்திரிகைகள், இவற்றை மட்டும் பாராட்டுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.இலவசங்கள் என்பதும், வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது என்பதும் வேறு வேறு. எந்த எல்லை வரை அது மனிதவள மேம்பாடு என்றும், எந்த எல்லையை தாண்டினால் அது இலவசம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
தி.மு.க.,வினர் ஏழைகளுக்கு வழங்கியதை இலவசம் என்று கூறி கொச்சைப்படுத்தி, அவற்றை பெற்ற ஏழைகள் ஓட்டுப் போடுவர் என்ற இறுமாப்பில் இருந்தனர். இதற்கு இலவச கலர் "டிவி' திட்டம் சிறந்த எடுத்துக்காட்டு. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், "டிவி' இல்லாத குடும்பங்களுக்கு இலவச கலர் "டிவி' அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆட்சி வந்ததும், கலர் "டிவி'க்கள் இல்லாத குடும்பங்களுக்கு 14 அங்குல, "டிவி'க்கள் வழங்கப்படுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கலர் "டிவி' வழங்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த தி.மு.க., ஆட்சியில் 1.64 கோடி இலவச கலர் "டிவி'க்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 1.40 கோடி குடும்பங்கள் தான் இருந்தன. இதில், 56 லட்சம் குடும்பங்கள், ஏற்கனவே "டிவி' வைத்திருந்தன. எவ்வளவு பேரிடம், "டிவி' இல்லை என்ற கணக்கு இல்லை.மக்கள் தொகை உயர்ந்திருந்தாலும், 1.64 கோடி குடும்பங்கள் கலர் "டிவி' இல்லாத குடும்பங்களா? கணக்கெடுப்பு எதையும் முந்தைய அரசு எடுக்கவில்லை. கலர் "டிவி' கேட்டு எந்த விண்ணப்பமும் மக்களிடம் பெறவில்லை. ஒரு குழு தயாரித்த பட்டியலின் அடிப்படையில், "டிவி' கொடுத்தனர். எனவே, சொந்த கார் வைத்திருந்தவர்கள் கூட, காரில் வந்து கலர் "டிவி' வாங்கிச் சென்ற நிலை இருந்தது.இது மக்களுக்கு பயன்பெறக் கூடிய திட்டமா? அல்லது ஆட்சியாளர்களுக்கு பயன்படக் கூடிய திட்டமா? கலர் "டிவி'யை பார்க்க கேபிள் கட்டணம் செலுத்த வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளில், கலர் "டிவி' வழங்க, 3,687 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த பணம் மக்களின் வரிப்பணம்.
ஆனால், இந்த கலர் "டிவி'யை பார்க்க கட்டணம் பெற்றது, கேபிள் தொழிலில் கோலேச்சி இருக்கும் கருணாநிதியின் பேரன்கள், கலாநிதி, தயாநிதி, துரை தயாநிதி போன்றவர்கள் தான். கருணாநிதியின் குடும்பத்துக்கு கேபிள் கட்டணமாக, ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் மக்கள் செலுத்தினர்.மக்கள் வரிப்பணத்தில், 3,687 கோடி செலவழித்து, ஆண்டுக்கு 4,000 கோடி தனது குடும்பம் பெற வழி செய்துவிட்டார். ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால், ஐந்து ஆண்டுகளில், கேபிள் கட்டணம் மூலம் அந்த குடும்பம் பெற்றது 20 ஆயிரம் கோடி ரூபாய். எனவே, கலர் "டிவி' வழங்கும் திட்டம், சொந்த நலனுக்காக தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என ஆணித்தரமாக சொல்வேன்.
கடந்த ஜனவரி மாதம், ஆறாவது கட்டமாக 10 லட்சம் கலர் "டிவி'க்கள் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் இதுவரை வழங்கப்படாத 7.48 லட்சம் கலர் "டிவி'க்களின் கொள்முதல் ஆர்டர் ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்து வைக்கப்பட்டுள்ள, 1.27 லட்சம் கலர் "டிவி'க்கள், அனாதை இல்லங்கள், பள்ளிகள், ஊராட்சிகள், அரசு மருத்துவமனைகள், துணை சுகாதார நிலையங்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்.இப்படித்தான் அனைத்து இலவச திட்டங்களும் இருந்தன. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதால், மற்ற திட்டங்கள் பற்றி விளக்கவில்லை.இவ்வாறு முதல்வர் பேசினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
உங்கள் தலைவர் பொய்மையே வாழ்க்கை என வாழ்ந்து வருகிறாரே!அதை விட ஜெயா நூறு மடங்கு மேல்!கனிமொழியைக் காப்பாற்ற ராசாதான் அனைத்து குற்றமும் புரிந்தார் என்று மாற்றி பேசுவதிலிருந்தே உங்கள் தலைவரின் உண்மை முகத்தை காணலாம்!அதையும் விட தன தம்பி என்று அழைக்கப் பட்ட வைகோ மேலேயே கொலைப்பழி சுமத்தி வெளியே அனுப்பியவர்தான் உங்கள் தலைவர்!பொய்,புரட்டு பற்றி பேச உங்கள் தலைவருக்கோ,உங்கள் கட்சியினருக்கோ தகுதி இல்லை!...
அம்மையார் புள்ளி விவரங்களை நன்றாகத்தான் அடுக்குகிறார்! இது தெரிந்துதான் மக்கள் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பி விட்டார்களே! இது போன்றவைகளில் நேரம் செலுத்துவதை விட்டு, ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபட்டால் உங்கள் நேரமும் மிச்சம், மக்களும் பயனடைவார்கள். இவருக்கு முதல் பின்னடைவாக சமசீர் கல்விக்கு ஆதரவான உயர் நீதிமன்ற தீர்ப்பு. அதை மதித்து, தேவையற்றவைகளை நீக்கி, பிடிவாதம் காட்டாமல் இந்த ஆண்டே சமசீர் கல்வியை அறிமுகப்படுத்தினால், மாணவர்கள் பயனடைவார்கள். உங்களின் பெருந்தன்மையை மக்கள் பாராட்டுவார்கள். செய்வீர்களா?
இருவருக்கும் சொம்பு அடிக்காமல் எனது கருத்துக்கு ( கருணா & ஜெயா இருவருமே அரசியலை விட்டு ஒழிந்தால் தான் தமிழ் நாடு முன்னேறும் )1023 பேர் Thumps up உயர்த்தி இருக்கிறார்கள் என்றால்..... அதுதான் பெரும்பான்மை மக்களின் விருப்பம், தமிழகத்திற்கு நல்லது செய்யவேண்டும் என இவர்கள் நினைத்தால் அரசியலை விட்டு விலகுங்கள், தமிழகத்தில் புதிய ஒரு அரசியல் கலாச்சாரம் மலரட்டும்.
எல்லா ஊழலின் மதிப்பும் மிகைப்படுத்தப்படுகிறது . அரசில் ஆதாயத்திற்கு எதை வேண்டுமானாலும் பேசலாம். எந்த ஊழல் குறித்தும் தெளிவான கணக்குகளை மக்களாகிய எங்கள் மத்தியில் வைத்தால் தான் உங்களின் நேர்மையும் பாராட்டப்படும். இல்லை என்றால் உங்கள் மீதான நம்பிக்கையும் பொய்யாகிவிடும் . குற்றச்சாட்டுகளில் கவனமாக இருங்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.