சென்னை அண்ணா சாலையில், முன்னாள் பிரதமர் இந்திராவின் சிலை அமைக்கும் பணி பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. இந்த சிலை அமைக்கும் பணியில் ஈடுபடும் காங்கிரஸ் தலைவர்கள், மரணம் அடைகின்றனர் என்று கிளப்பிவிடப்பட்ட வதந்தியே முக்கிய காரணம். எந்த பிரச்னையாக இருந்தாலும், போஸ்டர் ஒட்டி பூதாகரமாக்குவது காங்கிரஸ் தொண்டர்களின் பிரதான வேலை. அந்த வகையில் இந்த பிரச்னையையும் வெளிப்படுத்தும் வகையில்," பீடம் இங்கே; சிலை எங்கே என்று தலைப்பிட்டு காங்கிரசார், போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அமிதாப்பச்சன் ரசிகர் மன்றத்தின் தலைவராக பணியாற்றியவர் ஏசய்யா. காங்கிரஸ் பிரமுகரான இவர், கடந்த 1989ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலை மற்றும் பின்னிசாலை சந்திப்பில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா சிலையை வைப்பதற்கான அனுமதியை, அரசிடம் பெற்றார். சில ஆண்டுகள் கழித்து அந்த இடத்தில் சிலை அமைப்பதற்காக பத்து அடி உயரத்தில் பீடமும் கட்டி முடிக்கப்பட்டது. இந்திராவின் சிலையை அமைப்பதில், மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அக்கறை செலுத்தினார். தலைவர்களின் சிலைகளை வடிக்கும், சென்னையை சேர்ந்த பிரபல சிற்பி ஒருவரிடம் இந்திராவின் சிலை அமைக்க ஒப்பந்தமும் செய்தார். எட்டு அடி உயரத்தில் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலம் சில மாடல் உருவாக்கப்பட்டது. அந்த மாடல் சிலையை, மூப்பனார் வந்து பார்த்தார். மூக்கு, தலைமுடி வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மூப்பனார் துவக்கியதும், அக்கட்சி மீது அவர் கவனம் செலுத்தினார். பின், அவரும் மரணம் அடைந்தார். இதற்கிடையில், சிலை வைக்க அனுமதி பெற்ற ஏசய்யாவும் மரணம் அடைந்தார். மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும், மற்றொரு சிற்பியிடம் இந்திரா சிலை அமைக்க ஆர்டர் கொடுத்தார். தனது முயற்சியால் சிலை உருவாக வேண்டும் என கருதிய வாழப்பாடி ராமமூர்த்தியும் காலமானார். தொடர்ந்து தலைவர்கள் மறைந்ததால், அந்த சிலையை திறப்பதற்கு, தமிழக காங்கிரஸ் தலைவர்களாக பணியாற்றிய தலைவர்களும் அக்கறை காட்டவில்லை. தமிழக காங்கிரஸ் தலைவராக கிருஷ்ணசாமி பணியாற்றிய போது, சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தில், சத்தியமூர்த்தியின் மார்பளவு சிலை அமைக்க ஆர்வம் காட்டினாரே தவிர, இந்திரா சிலை பற்றி கண்டுகொள்ளவில்லை. சத்தியமூர்த்தி சிலை வைக்க அவர் போட்ட திட்டம் நிறைவேற்றுவதற்கு முன், அவரது தலைவர் பதவியும் பறிபோனது. அடுத்து தலைவராக தங்கபாலு வந்ததும், சத்தியமூர்த்தி பவன் கட்டடத்தில் சில இடங்களை வாஸ்து பார்த்து புதுப்பித்தார். ஆனால், சிலை அமைப்பதற்கு அவரும் முயற்சிக்கவில்லை. மூப்பனாரின் சிலை அந்தியூரில் திறந்த போது, அந்த சிலை உருவாக்கும் பணி சென்னையில் நடந்தது. அந்தசிலையை பார்வையிட வந்த மத்திய அமைச்சர் வாசனிடம், இந்திரா சிலை பற்றி சிற்பி ஞாபகப்படுத்தினார். அதற்கு வாசனும், "பார்க்கலாம்' என கூறிவிட்டு, சிலை விவகாரத்தை சுதர்சனத்திடம் ஒப்படைத்தார். அவரும் சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் கிடைக்கவில்லை. சுதர்சனம், சட்டசபை தலைவராக பணியாற்றிய போது மறைந்து விட்டார். இதற்கிடையில், இந்திரா சிலை அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் தலைவர்கள் மரணம் அடைகின்றனர் என்ற வதந்தி, காங்கிரசார் மத்தியில் பீதியாக கிளம்பியது.
இது குறித்து கவிஞர் ஜோதிராமலிங்கம் கூறும்போது, "அண்ணா சாலையில் இந்திரா சிலை வைக்க தலைவர்கள் பயப்படுகின்றனர். யாரோ கிளப்பிவிட்ட வீண் வதந்திக்கு பயந்து, இந்திரா சிலை அமைக்கும் முயற்சியில் தலைவர்கள் அக்கறை காட்டுவதில்லை' என்றார். கடந்த 31ம் தேதி, இந்திராவின் 27வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை நகரில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களில், "அன்னையே தங்களை அண்ணாசாலை - பின்னி சாலை சந்திப்பில் சிலையாக காண்பது எப்போது? தாமதம் ஏன்?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். இந்த போஸ்டரால், சிலை வருமா, காங்கிரசாரின் மரண பீதி தெளியுமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பு.
-நமது சிறப்பு நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தலைவர் கலைஞர், அன்னை சோனியாவின் சிலைகளை தமிழகம் முழுவதும் நிறுவ வேண்டும். கலைஞர் ஆட்சி வரும்போது, மதுரையில் அண்ணன் அழகிரிக்கு மிக பெரிய சிலை நிறுவப்படும். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊரை செழிப்பாக்கிய நல்ல அரசியல் தலைவர்களின் சிலைகளை நிறுவத்தால், எதிர்காலத்தில் குழந்தைகளின் பொது அறிவு பெருகும். சேலத்திற்கு வீரபாண்டி ஆறுமுகம், விழுப்புரத்தில் பொன்முடி, திருச்சிக்கு நேரு, சென்னையில் ஸ்டாலின், திருவாரூரில் கனிமொழி, நீலகிரியில் ராஜா. இச்செயல் எதிர்கால் சந்ததியினரின் பொது அறிவை வளர்க்க உதவும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.