பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில், ஊழல், விலைவாசி உயர்வு, லோக்பால் மசோதா, ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட 45 பிரச்னைகளை, ஒத்திவைப்புத் தீர்மானம் உட்பட பல வழிகளில் எழுப்பி, அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதனால், பார்லிமென்டின் குளிர்காலக் கூட்டத்தொடரில் புயல் வீசும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடர், வரும் 22ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி, டில்லியில் நேற்று, அனைத்துக் கட்சி பார்லிமென்ட் தலைவர்களின் கூட்டத்தை, சபாநாயகர் மீராகுமார் கூட்டியிருந்தார். பார்லிமென்ட் அனெக்சில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அரசு தரப்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் பங்கேற்றனர். இதுதவிர, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், தமிழக கட்சிகள் சார்பில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பிதுரையும், தி.மு.க.,வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு மற்றும் பல கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
விலைவாசி உயர்வு மற்றும் பல்வேறு ஊழல் பிரச்னையில், மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திணறிவரும் நிலையில், அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை அவ்வாறு இல்லை. குறிப்பாக அரசுக்கு பெரும் சங்கடத்தை கொடுக்கும் வகையில், நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர எதிர்க்கட்சிகள் தயாரில்லை. நேற்றைய கூட்டத்தில், இந்த தீர்மானம் கொண்டு வருவது பற்றி எந்தவொரு சின்ன அறிகுறியும் காணப்படவில்லை. இருந்தாலும், ஒத்திவைப்பு தீர்மானம் உட்பட வேறு பல வழிகளில் அரசுக்கு நெருக்கடி கொடுக்க அவர்கள் திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.
கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய, சபாநாயகர் மீராகுமார், ""இன்றைய (நேற்றைய) கூட்டம் பயனுள்ள வகையில் நடந்தது. பார்லி கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தருவதாகத் தெரிவித்துள்ளனர். மசோதாக்களை நிறைவேற்றுவது உட்பட அனைத்து அலுவல்களையும், சபை நடக்கும் 21 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதில், அனைத்து தலைவர்களும் ஆர்வமாக இருந்தனர். 45 பிரச்னைகள் குறித்து, சபையில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. சபை நடக்கும் நாட்கள் குறைவாக இருப்பதாக, சில தலைவர்கள் கூறினாலும், அமர்வுகளைக் கூட்டும்படி யாரும் கோரிக்கை விடுக்கவில்லை,'' என்றார்.
" அரசுக்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மானம் ஏதும் கொண்டு வரப்பட்டால், அதற்கு அனுமதியளிக்கப்படுமா' என்று கேட்டபோது, "முதலில் அதுபோன்ற தீர்மானம் கொண்டு வரப்படுகிறதா என்று பார்ப்போம். தீர்மானம் குறித்த கோரிக்கை வரட்டும். அதன் பிறகு பார்க்கலாம்' என்றார்.
எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், "" ஊழல் மற்றும் கறுப்புப் பண விவகாரத்தை எங்கள் கட்சி தீவிரமாக கையில் எடுக்கும். சுவிஸ் வங்கிகளில் பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்கள் சிலரது பெயர்களை, அந்நாட்டு அரசு, மத்திய அரசிடம் அளித்துள்ளது. அந்த விவரங்கள் வெளியிடப்படவேண்டும். அரசு, அதை மறைக்கப் பார்க்கிறது. இதை விடமாட்டோம். தெலுங்கானா பிரச்னையையும் சபையில் கிளப்புவோம். காங்கிரஸ் அல்லாத மாநில அரசுகளை, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. எங்களது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், வரும் 21ம் தேதி காலை நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில், பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் எங்களது நடவடிக்கைகள் பற்றி இறுதி செய்யப்படும்,'' என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறும்போது, ""பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்த நிலையில் உள்ளது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே இதற்கு காரணம். தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இதை எதிர்த்து குரல் கொடுப்போம். இந்த கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதாவை கொண்டு வர வேண்டும். மேலும், அரசின் தோல்விகள் பற்றி விவாதிக்க, எங்கள் கட்சி ஒத்திவைப்புத் தீர்மானத்தை கொண்டு வரும்,'' என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத் யாதவ் கூறுகையில், ""நாங்களும், மற்ற சில கட்சிகளும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்னையை எழுப்புவோம். இந்த விஷயத்தில், மத்திய அரசு அளித்த உறுதி காப்பாற்றப்படவில்லை,'' என்றார்.
உதாசீனப்படுத்துவதா? அ.தி.மு.க., ஆவேசம் : நேற்றைய கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் தம்பிதுரை, ""மாநில அரசுகளை ஏதோ முனிசிபாலிடிகளை போல, மத்திய அரசு நடத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர் எழுதும் கடிதங்கள் கூட, அலட்சியப்படுத்தப்படுகின்றன. முதல்வருக்கு பதில் எழுதுவதை பிரதமர் உதாசீனமாக நினைக்கிறார். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்து, கடந்த கூட்டத்தொடரில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தியும்கூட, உரிய பதிலை வெளியுறவு அமைச்சர் தரவில்லை. எனவே, அது முடிவடையவில்லை. அந்த பிரச்னையை இம்முறையும் எழுப்புவோம். பந்தல்கண்ட்,மேற்குவங்கம் ஆகியவற்றுக்குத்தான் சிறப்பு நிதி அளிக்க வேண்டுமா. நிதிநெருக்கடியுள்ள தமிழகத்திற்கும் அளிக்க வேண்டும். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்வதை கண்டித்து குரல் எழுப்புவோம்,'' என்றார்.
தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு,""இந்திய அரசு அளித்த நிதியுதவியை, இலங்கை அரசு தவறாக பயன்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய் சேரவில்லை. தமிழர்களுக்கு அந்த நிதியுதவி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவுப்பொருட்கள் மீதான பணவீக்கம் அதிகமாக உள்ளதால், அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயங்களை சபையில் எழுப்புவது குறித்து தி.மு.க., சார்பில் நோட்டீஸ் அளித்துள்ளோம்,'' என்றார்.
தெலுங்கானா எம்.பி.,க்கள் ராஜினாமா நிராகரிப்பு : ""தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் உட்பட தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 12 எம்.பி.,க்களின் ராஜினாமா கடிதங்களை நிராகரிப்பது என, முடிவெடுத்துள்ளேன்,'' என்று, சபாநாயகர் மீராகுமார் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எட்டு பேர், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த தலா இரண்டு பேர் என, மொத்தம் 12 பேர் தங்களின் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளனர். அவற்றை எல்லாம் நான் முழுமையாக ஆய்வு செய்தேன். அதன்பின், ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்வதில்லை என, முடிவு செய்துள்ளேன். லோக்சபா விதி 240ன் கீழ் இந்த முடிவை எடுத்துள்ளேன். இவ்வாறு மீராகுமார் கூறினார்.
எம்.பி.,க்களின் ராஜினாமா கடிதங்கள் முறைப்படி இல்லை என்பதால், அவை சபாநாயகரால் நிராகரிக்கப்பட்டதாக, பார்லிமென்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ராஜினாமாவுக்கான காரணங்களையும் எம்.பி.,க்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிடவில்லை என்றும் கூறின.
-நமது டில்லி நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
எல்லாருமே ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான். பி ஜே பி தானும் வேலை பார்க்க மாட்டாங்க, அடுத்தவங்களையும் வேலை பார்க்க விட மாட்டேங்க .. சும்மா அடுத்தவங்களை குறை மட்டும் சொல்லுவாங்க .. அவங்களா ஒரு பிரைச்சனைய கிளப்ப மாட்டாங்க .. யாராவது கிளப்பிவிட்டத வச்சி பேசிகிட்டே இருப்பாங்க ... வருவாங்க போவாங்க ... இதான் அவங்க கொள்கை ... முன்னாடி எப்போடியோ அரசு இருந்துட்டங்க இப்போம் அவங்க ரெடி என்ன வேணும்னாலும் பண்ண .. அனால் இவங்க விட வாங்க மாட்டாங்க .. எல்லாரும் அடுத்த elaction தான் குறியா இர்ருக்காங்க .. யாரும் மக்களுக்காக வேலை செய்ய ரெடி இல்ல ...ஒரு டீம் வொர்க் ஆ பண்ணுவோம் நு யாருக்கும் தெரியல ... எல்லாரும் வேஸ்ட் ... எல்லாத்துக்கும் கொஞ்சம் டைம் கொடுக்கணும் ... அரசு கண்டிப்பா பண்ணும் ... அதும் சோனியா கண்டிப்பா எல்லா பிரச்சனையை முடிச்சி வைப்பாங்க ...அவங்களுக்கு பதவி எல்லாம் முக்கியம் இல்லை ..by இந்தியன்
அதிக எண்ணிக்கையில் பிரச்சினையை கிளப்புவதில் பிரச்சினைகள் தீர்ந்து விடாது. எத்தனை பிரச்சினைகளை தீர்த்து வைக்கிறார்கள் என்பது முக்கியம். இந்த முட்டாள் அரசியல் வாதிகள் நாட்டை குட்டிச்சுவராக ஆக்கிவிட்டார்கள். 2G பிரச்சினையில் கிட்டத்தட்ட இரண்டு கூட்டத்தொடர்கள் வீணடிக்கப்பட்டன. இன்னும் எத்தனை கூட்டத்தொடர்களை வீணடிக்கப்போகிறார்களோ ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
விலைவாசி ஏன் உயர்கிறது? மக்களுக்கு வாங்கும் சக்தி அதிகரித்து விட்டதாலும், மக்கள் நெருக்கம் பெருகிவிட்டதாலும் தான். இதற்கு அன்னை சோனியா என்ன செய்ய முடியும்? உங்களின் சம்பளத்தை குறைக்க சொல்கிறீர்களா? அல்லது ஒரு குழந்தைக்கு மேல் யாரும் பெற்றுக்கொள்ள கூடாது என்று சட்டம் இயற்ற சொல்கிறீர்களா? ஒரு குழந்தை மட்டும் போதும் என்று சொல்லும் இன்றைய கல்யானமாகதவர்கள், ஆனவுடன் பொண்டாட்டி பேச்சை கேட்டு ரெண்டு குழந்தை பெற்று கொண்டு கப்சிப் ஆகிவிடுகிறார்கள். அதனால் அவர்கள் இதற்கு அட்வைஸ் சொல்ல தேவை இல்லை.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.