சட்டசபை பொதுத் தேர்தலின்போது உருவான ஆளுங்கட்சி கூட்டணி, பத்து மாதம் கூட தாக்குப் பிடிக்காமல் உடைந்து போயுள்ளது. சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியை எதிர்த்து, கூட்டணிக் கட்சியாக இருந்த தே.மு.தி.க., களமிறங்கியது; மற்றொரு கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியது. பிரசாரத்தின்போது, ஆளுங்கட்சி மீதான கடுமையான விமர்சனத்தை வைத்து, விஜயகாந்தும் வெளுத்து வாங்கி ஓய்ந்துள்ளார்.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியிலும் திருப்திகரமான அணுகுமுறை இல்லை. இடைத்தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பெரிதாக அக்கறை காட்டவில்லை. இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில், "முழங்கி'த் தள்ளிய, தி.மு.க., எம்.பி.,க்கள், "மத்திய அரசில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை' என, மடங்கிப் போயுள்ளனர். ஐந்து மாநில தேர்தல் முடிவுகளில் காங்கிரசுக்குக் கிடைத்த பின்னடைவு, அவர்களை மிரட்டி மீன் பிடிக்க, தி.மு.க.,வுக்கு வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் மறுபிறப்பு எடுத்துள்ள ம.தி.மு.க., அரசியல் களத்தில் அடுத்த, "ரவுண்டை' துவங்கத் தயாராகிவிட்டது. லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, அந்தக் கட்சியின் செயல்பாடுகள் வேகம் பிடித்துள்ளன.
கைகோக்குமா? அரசியல் கட்சிகளின் மாறுபட்ட நிலைப்பாட்டால், ஏற்பட்டுள்ள இத்தகைய மாற்றங்கள், தமிழக அரசியலில் அடுத்து வரும் காலங்களில் எதிரொலிக்கவுள்ளது. தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் விவாதங்களில், ஆளுங்கட்சியை முழுவீச்சில் எதிர்க்கத் தயாராகவுள்ள தே.மு.தி.க.,வோடு, தி.மு.க., - கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அவ்வாறு சேருமானால், அடுத்து நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில் புதிய கூட்டணிக்கான அச்சாரம் போடப்படும் வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே, சட்டசபையில் இருந்து விஜயகாந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை, தி.மு.க., கண்டித்ததும், மதுரை விமான நிலையத்தில் ஸ்டாலினும், விஜயகாந்தும் ஆலோசனை நடத்தியதும், இரு கட்சிகளும் பரஸ்பரம் பச்சைக் கொடி காட்டுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதாரணம்: ஆனால், இந்த உறவு நிரந்தமானதாக இருக்காது; தொடராது என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். அவர் கூறும்போது, "தே.மு. தி.க.,வை பெரிய கட்சியாக வளர வைக்க தி.மு.க., துணை புரியாது. அதனால், அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. அ.தி.மு.க.,வுக்கு மாற்று தி.மு.க., என்ற பிம்பத்தை அவ்வளவு எளிதாக உடைத்துவிட முடியாது. உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதற்கு உதாரணம்' என்கிறார்.
லோக்சபா தேர்தல் கணக்கு: இடைத்தேர்தல் களத்தில் பிரசாரம் செய்த முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., - ம.தி.மு.க., குறித்து ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. பிரசாரத்தில், தி.மு.க., வும் இதே பாணியைப் பின்பற்றியது. ஆளுங்கட்சி மீதான விமர்சனத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த விஜயகாந்த், தி.மு.க., மீதான விமர்சனத்தைக் குறைத்துக் கொண்டார். இந்த யுத்திகளின் பின்னால், லோக்சபா தேர்தல் தொடர்பான அரசியல் கணக்குகள் உள்ளன. லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகள் எப்படி அணி அமைக்கப் போகின்றன என்பது தெளிவாகாத நிலையில், அ.தி.மு.க.,வைப் பொறுத்தவரை, யாருடைய, "கூட்டும், பொறியலும்' தேவையில்லை என்பதில் உறுதியாக உள்ளது. லோக்சபா தேர்தலிலும், தனித்துப் போட்டியிட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் பிடிக்க வேண்டும். அதன் மூலம், தேசிய அரசியலில், அடுத்து அமையவுள்ள மத்திய ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக மாற வேண்டும் என்பதுதான் முதல்வர் ஜெயலலிதாவின் இலக்காக உள்ளது. அதற்கேற்ப, பொதுக்குழுவில் துவங்கி, அனைத்து நிகழ்ச்சிகளிலும் லோக்சபா தேர்தலுக்குத் தயாராகுமாறு, தொண்டர்களுக்கு, ஜெ., அழைப்பு விடுத்து வருகிறார்.
சாதனைகளே போதும்: லோக்சபா தேர்தலில், கூட்டணிக் கட்சிகளின் ஓட்டு வங்கியை நம்பாமல், சாதனைகள், நலத்திட்டங்கள் மூலம் நேரடியாகப் பொதுமக்களையே கவர்ந்துவிட வேண்டும் என்று, அ.தி.மு.க., நினைக்கிறது. தமிழக அரசுக்கு தற்போதுள்ள பெரிய சிக்கல், மின்வெட்டு பிரச்னை மட்டுமே. லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, மின்வெட்டு விவகாரத்தை சமாளித்தாலே, ஓட்டு மழை பொழியும் என்று ஆளுங்கட்சி நம்புகிறது. எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைச் சமாளிக்க, இந்த பலமான அஸ்திரம் ஒன்றே ஆளுங்கட்சிக்கு போதுமானதாக இருக்கும். எப்படி இருந்தாலும், சங்கரன் கோவிலில் ஆரம்பித்த அரசியல் அனல், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரிலும் எதிரொலிப்பது உறுதி. இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றியின் ருசியோடு, ஆளுங்கட்சியும் இதை சமாளிக்கத் தயாராகவே உள்ளது.
- எஸ். கோவிந்தராஜ் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
மின்வெட்டை தவிர பிரச்சனையே இல்லை என்று சொல்வதிலிருந்து. முன்னாள் ஆட்சியின் போது என்ன பிரச்சனைகள் இருந்தனவோ? அவைகள் அப்படியே தொடருகின்றன. அதுமட்டுமல்ல பால்,பேருந்து கட்டண உயர்வு இனி வரும் மின்சார கட்டண உயர்வு தொடர்ந்து அப்படியே இருந்துவரும் விலைவாசி,சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் , முல்லைபெரியார், கூடங்குளம் மீனவர் பிரச்சனைகள் எல்லாம் அப்படியே தொடர்கின்றன. வெறும் அறிவிப்பு,ஆய்வு என்று நாளேடுகள் பாராட்டலாம். ரேஷன் பொருட்கள் தரம் கூட பழைய நிலைக்கு வந்துவிட்டன. ஊறுகாய் மாதிரி தமிழர் பிரச்சனையை அவவப்போது அதிமுக பேருக்கு தான் தொட்டுக்கொள்ளும் என்பதும் மக்களுக்கு தெரியும்.வேண்டுமானால் அதிமுகவிற்கு மாற்று எது என்று சிந்திப்பதில் தான் சிக்கல் இருக்கிறதே தவிர அதிமுக தனியா நின்றாலும் கூட்டணியில் நின்றாலும் அண்மையில் பெற்ற வெற்றியை இனி பெற இயலாது.
@maria alphonse நீங்கள் கூறியுள்ள கூட்டணி பற்றிய கருத்து மிகவும் சரியானது. இப்போது அரை ராமதாசக இருக்கும் விஜயகாநத் திமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் முழு ராமதாசக மாறிவிடுவார். கிருஷணசாமி சரத்குமார் தமுமுக அதிமுக கூட்டணியில் இருக்கும் ஆனால் சீட் ஒதுக்கப்படாது. 39 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே நிறுத்தப்படுவார்கள். கூட்டணி கட்சியினர் அதிமுகவின் வெற்றக்கு பாடுபடுவார்கள்,
மின்வெட்டு என்பது ஒரு நாளில் தீர்க்கப்படும் பிரச்னை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும்... கடந்த ஆட்சியில் திட்டங்கள் மட்டும் போட்டுவிட்டு அதை கிடப்பில் போட்டுவிட்டு சென்று விட்டனர்.. கடந்த ஆட்சியில் தனியார்&39இடம் கமிசன் பெற்றுக்கொண்டு அவர்களிடம் இருந்து மின்சாரம் வாங்கி கொடுத்தனர்...( அதுவும் உருப்படியா இல....) அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் போர்க்கால அடிப்படையில் மின்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுத்ததன் காரணமாக தற்போது வள்ளூர் மற்றும் மேட்டூர் மின் திட்டங்கள் சோதனை ஓட்டத்தில் இருக்கின்றன.. சோதனை ஓட்டம் முடிந்து செயல்பட தொடங்கி விட்டால் நம்முடைய தேவை பூர்த்தி ஆகிவிடும்... நிச்சயம் நாளை நமதே... நாற்பதும் நமதே.... உடனே என்ன செய்வீர்கள் பால் விலை உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு என்பீர்கள்.. இதெல்லாம் எந்த அளவுக்கு மக்களிடம் எடுபடும் என்று நன்றாக தெரியும்....
தே.மு.தி.கா, தி.மு.க உடன் கூட்டணி அமைப்பது சாத்தியம் இல்லை. இதை கேப்டன் செய்தால் நிரந்தரமாக ராமதாஸ், வை.கோ நிலை தான் அவருக்கு. இதை அவர் ஒரு போதும் செய்ய மாட்டார்... ஆனால் அவர் அ.தி.மு.க உடன் இருக்கவும் வாய்ப்பு இல்லை. அது அம்மையாருக்கே பலம் சேர்க்கும். ஆகையால் இப்போது உள்ள சூழலில் வை.கோ, கேப்டன், ராமதாஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி அமைக்கலாம். ஆனால் இந்த அணியால் வெற்றி அடைய முடியாது. ஒட்டு பிரிக்கவே முடியும். ஆகையால் வை.கோ வேட்டியும் ராமதாஸ் புடவையும் துவைக்கவே வாய்ப்பு உள்ளது. ஆகையால் அம்மையாரின் கணக்கு அவ்வளவு தவறாக இருபதாக தெரியவில்லை. ஆனால் இந்த மின் தடை பிரச்சனையை தீர்வு வராதவாறு தானே தலைவர் பார்துகொள்வார். அதை மத்திய அரசில் இருந்து செவ்வனே செய்து காட்டுவார். காங்கிரசும் கூடங்குளம் இப்போ திறக்கிறோம், அப்போ திறக்கிறோம் என்று அறிக்கை மட்டும் விடுவார்கள். அம்மா, சந்திர பாபு நாய்டு மற்றும் சில கட்சிகள் மூலம் காங்கிரசுக்கு எண்ணிக்கை பலம் அளிதால், காங்கிரஸ், அதீமுக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. இது நடந்தால் மட்டுமே மின் தடை பிரச்சனை தீர்வு அடையும்..
ஒவ்வொருத்தரையும் நம்பி ஏமாந்து போவது தான் தமிழனின் தலைவிதி ஆகி விட்டது. ஒருவரை கெட்டவராக சித்தரித்து பழைய கெட்டவர் இப்போ நல்லவராக ஆகி விட்டார் மக்கள் மனதில். ஆனால் கெட்டவர் என்றுமே கெட்டவர் தான் என்பதை அவர் ஆட்சி கோலம் மக்களுக்கு நிருபித்து வருகிறது.இனி கட்சிகளை நம்பாமல் மக்களுக்காக நல்லது செயும் ஒருவர் கண்டிப்பாக ஒவ்வொரு தொகுதியிலும் இருப்பார். அவரை எந்த சுயேட்சையாக நிற்கவைத்து சட்டசபைக்கு பார்லிமெண்டுக்கு அனுப்ப வேண்டும். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மக்களுக்காக உழைக்கும் ஒரு நல்லவரை முதல் அமைச்சர் அல்லது பிரதமர் ஆக்க வேண்டும் அப்போது தான் எல்லா மாநிலமும் உருப்படும் குறிப்பாக தமிழ்நாடு.தாத்தா பொய் அம்மா வந்தார்கள். தாத்தா கொஞ்சம் மின்சாரம் பிடுங்கினார் அம்மா மிச்சம் உள்ளதையும் பிடுங்கிடாங்க. இனி எதிர்காலத்தில் புதிய கூட்டணி. மக்களை ஏமாத ஒரு புத்ய கூட்டணி உருவாகிறது என்று வெளிப்படையாக எழுத வேண்டியது தானே.மக்கள் இந்த இடை தேர்தலில் பழைய கட்சிக்கு வோட் போடாமல் ஒரு புதிய சகாப்தம் உருவாக்க வேண்டும் அப்போது தான் எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரு பயம் உண்டாகும். மக்களை ஏமாளிகளாக ஆக்க நினைக்கும் அவர்களை மக்கள் இந்த முறை ஏமாற்ற வேண்டும், நடக்குமா? மக்கள் திருந்துவார்களா? பொருது இருந்து பாப்போம்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.