நூறு வருடங்களை தாண்டியது; யுனெஸ்கோவின் புராதன அந்தஸ்து பெற்றது என்று, ஏகப்பட்ட புகழ் கிரீடங்கள் ஊட்டி மலை ரயிலுக்கு உள்ளது. இந்த ரயிலில் பயணம் செய்தால் இயற்கை சூழ்நிலையை அனுபவித்தபடி 208 வளைவுகள் வழியாக வளைந்து, நெளிந்தபடி, 16 குகைகளுக்குள் புகுந்து வெளியேறியபடி, 250 பாலங்களை கடந்து 5 மணி நேரம் அருமையான பயணம் செய்தால் ஊட்டி வரும். இந்த இனிமையான அனுபவத்தை பெற, ஜில்லிடும் குளிரை அனுபவிக்க உலகம் முழுவதும் இருந்து வருகின்றனர்.
ஊட்டிக்கு பயணம் செய்தால் இந்த மலை ரயிலில் பயணம் செய்யலாம் என்பது போய், இந்த மலை ரயிலில் பயணம் செய்வதற்காகவே ஊட்டிக்கு பயணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் இந்த ரயிலில் புறப்படுவது மட்டுமே நிச்சயமான விஷயம்; போய்ச் சேர்வது என்பது நிச்சயமில்லாத விஷயம். எந்த இடத்திலும் எப்போது வேண்டுமானாலும் நின்றுவிடும் என்பதாகவே செய்திகள் இன்றுவரை வந்துகொண்டு இருக்கின்றன.
இருந்தாலும் இந்த ரயில் பயண அனுபவத்தை தவறவிட விருப்பமில்லாமல் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் பயணிக்க பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அந்த வரிசையில் நானும் கடந்த வாரம் இடம் பெற்றேன். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்வது என்பது 5 மணி நேரம் என்றாலும் அது 6 மணி நேரமாகிவிடும். ஆகவே வரும்போது 4 மணி நேர பயணம்தான், அதனால் வரும்போது முயற்சி செய்யுங்கள் என்று பஸ்சில் ஏற்றி நண்பர் அனுப்பிவிட்டார். உண்மையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு போவதற்கான டிக்கெட் எடுக்கமுடியவில்லை என்பதுதான் காரணம்.
பஸ்சில் போய் ஊட்டியில் வேலையை முடித்துக்கொண்டு, திரும்பும்போது மலை ரயிலில் பயணிப்பது என முடிவு செய்தேன். ரயில் 2 மணிக்கு புறப்படுகிறது என்றாலும் அங்கும் கூட்டம்தான். மொத்தம் நான்கு பெட்டிகள் இதில் முதல் வகுப்பு டிக்கெட் எல்லாம் முன்கூட்டியே "ஆன்லைனில்' புக் செய்துவிடுகின்றனர். இதே போல இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகளின் நிலமையும் இப்படித்தான். இது போக இரண்டு பொது பெட்டிகள் ஒன்று குன்னூருடன் நின்றுவிடும். இன்னொன்று மட்டும் மேட்டுப்பாளையம் வரை போகும். இந்த பெட்டியில் பயணிக்கத்தான் அவ்வளவு கூட்டம்.
சாதரணமாக பொருட்காட்சியில் ஒரு நிமிடத்தில் சுற்றிவரும் குழந்தைகள் ரயிலுக்கே 20 ரூபாய் டிக்கெட் கட்டணம் வாங்கும் இந்த காலத்தில் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை சுமார் 4 மணிநேரம் பயணிக்க வாங்கும் கட்டணம் வெறும் 8 ரூபாய்தான். இதனால் சுற்றுலா நோக்கத்தில் பயணம் செய்பவர்களுடன் அன்றாடம் பஸ்சில் போய் வந்து கொண்டு இருந்தவர்கள் கூட, பஸ்டிக்கெட் கட்டண உயர்வு காரணமாக இந்த ரயிலுக்கு மாறியுள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு ஏகப்பட்ட சங்கடங்கள். இது ஒரு சிறப்பு ரயில் இதில் பயணம் செய்வதை வாழ்க்கையில் லட்சியமாகக் கொண்ட பலர் வருகின்றனர். டிக்கெட்டிற்கு நூறு ரூபாய் கூட கொடுக்கத் தயாராக இருக்கிறார்கள். ஆகவே இதனை கருத்தில் கொண்டு ஏதாவது உடனே செய்தாக வேண்டும்.
12 பேர் உட்காரும் இடத்தில் 20 பேர் ஏறிக்கொள்ள ரயில் 2 மணிக்கு புறப்பட்டது. உட்காரவும், நிற்கவும் சிரமமானதால் பயணம் இனிமையாகத் துவங்கவில்லை. ஊட்டியில் லவ்டேல், கேத்தி, அருவங்காடு, வெலிங்டன் வழியாக குன்னூர் வரை டீசல் என்ஜினில் இயங்குவதால் ரயில் சராசரி ரயில் போல வந்து சேர்ந்தது. நெரிசலில் சிக்கி சிரமப்பட்டது போதும் இறங்கி பஸ்சில் போய்விடுவோம் என்று முடிவு எடுப்பதற்குள், என்னைவிட சீக்கிரமாக முடிவெடுத்தவர்கள் பலர் இறங்கி கிடு,கிடுவென இறங்கிவிட, இப்போது உட்கார இடம் கிடைத்தது, சரி இன்னும் கொஞ்சம் போய்த்தான் பார்ப்போமே என்று மனசு சொன்னது.
குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி என்ஜின் என்பதால் அதனை மாட்டுவதற்காக குன்னூரில் கொஞ்சம் கூடுதல் நேரம் ஒதுக்கினார்கள். இந்த நேரத்தில் நிலையத்தில் விற்ற " பர்கர், ஸ்வீட் பன் தான் மதிய உணவு. இங்கே கொஞ்சம் நல்ல உணவு கிடைக்க வழிகாணலாம். குன்னூரில் ஒரு பெட்டி கழட்டிவிடப்பட மீதம் உள்ள மூன்று பெட்டிகளுடன் குன்னூரில் இருந்து கிளம்பிய ரயில் திக்கி, திணறி காட்டேரி, ரன்னிமேடு வழியாக ஹில்குரோவ் வருவதற்குள் ரொம்பவே சலித்துக்கொண்டது. அதனை சமாதானப்படுத்த நிறைய தண்ணீர் பிடித்தார்கள்.
"ரயில் புறப்பட நிறைய சமயம் உண்டு' என மலையாளம் கலந்த தமிழில் பேசியதை அடுத்து, அவர் காலையில் போட்டிருந்த மசாலா வடையையும், டீயையும் வாங்க கூட்டம் ஆளாய் பறந்தது. "ஒன்னும் அவசரம் வேண்டாம் டிரெய்ன் கிளம்பினாலும் "நடந்து' போய் ஏறிக்கொள்ளலாம்; மெதுவா டீ சாப்பிடணும்' எனும்போதே இனி ரயில் எடுக்கும் வேகம் புரிந்து போனது. பெரிதாக பெருமூச்சு விட்டபடி கிளம்பிய ரயில் நிறைய மலைக்குகைகள், பாலங்கள், வளைவுகள் வழியாக அட்டர்லி, கல்லார் வழியாக மேட்டுப்பாளையம் வந்து சேர்ந்தது.
மலைக் குகைக்குள் புகுந்து வரும்போது ரயிலினுள் வெளிச்சத்திற்கு விளக்கு போடுகிறார்கள். அந்த பல்பு கூட நூறாண்டுகள் ஆனது போலும்; மங்கிய நிலையில் எரிகிறது. அதிகாரிகள் நினைத்தால் களையக்கூடிய சின்னச் சின்ன குறைகள் இருக்கின்றன. ஆனாலும் ஊட்டி மலை ரயில் அனுபவம் என்பது அனைவரும் அனுபவித்தே ஆக வேண்டிய பயணமாகும்.
7500 அடி உயரத்தில் இருந்து இனிமையையும், தனிமையையும் கொண்டு, சுத்தமான காற்றை சுவாசித்தபடி மலையின் மடியில் தவழ்ந்தபடி இறங்கிவரும் அனுபவத்திற்கு இணையேதுமில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
RECENTLY I TRAVELED IN THAT TRAIN BETWEEN OOTY AND COONOOR AND BACK. THERE IS A SHUTTLE SERVICE FROM OOTY TO COONOOR AND BACK IN THE MORNING. THE TICKET IS JUST (3X2) SIX RUPEES. I TRAVELED WITH MY FAMILY AND ENJOYED IT. INSTEAD OF WAITING TO TRAVEL BETWEEN METTUPALAYAM AND OOTY, IT IS BETTER TO USE THIS SHUTTLE SERVICE. BUT I SUGGEST THAT THE FARE CAN BE INCREASED TO AT LEAST FIFTY RUPEES EVEN FOR CHILDREN.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.