புதுடில்லி :"பிரணாப் முகர்ஜி ஆதாயம் தரும் பதவி வகிக்கிறார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவரின் வேட்பு மனுவை, நிராகரிக்க வேண்டும்' என, சங்மா தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகாரை, நிராகரித்தார் தேர்தல் அதிகாரி. சங்மா மற்றும் பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுக்களை, அவர் ஏற்றுக் கொண்டார். இதனால், ஜனாதிபதி தேர்தலில், சங்மா மற்றும் பிரணாப் முகர்ஜி இடையே, நேரடிப் போட்டி நிலவுகிறது.
தற்போதைய ஜனாதிபதி பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம், வரும் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 19ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக, முன்னாள் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பா.ஜ., உட்பட சில எதிர்க் கட்சிகளின் ஆதரவுடன், லோக்சபா முன்னாள் சபாநாயகர் சங்மா போட்டியிடுகிறார்.
ஆதாயம் தரும் பதவி :இருவர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, மற்ற சிலர் தாக்கல் செய்த வேட்பு மனுக்களும், நேற்று முன்தினம், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அப்போது, சங்மா தரப்பில், புது குண்டு ஒன்று போடப்பட்டது. அது என்னவெனில், "பிரணாப் முகர்ஜி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பை வகிக்கிறார். அது, ஆதாயம் தரும் பதவி. ஆதாயம் தரும் பதவி வகித்துக் கொண்டு, ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, பிரணாப் முகர்ஜியின் வேட்பு மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, சங்மா தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், இருவரின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையை, தேர்தல் அதிகாரி அக்னி கோத்ரி, ஒரு நாள் தள்ளிவைத்தார்.இதற்கிடையில், "பிரணாப் முகர்ஜி, இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பதவியை, கடந்த 20ம் தேதியே, ராஜினாமா செய்து விட்டார்' என, அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுக்கள் ஏற்பு:இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியும், ராஜ்யசபா செயலருமான அக்னி கோத்ரி, நேற்று நிருபர்களிடம் பேசுகையில், ""பிரணாப் முகர்ஜி மற்றும் சங்மாவின் வேட்பு மனுக்கள், முழுமையாக உள்ளதால், அவர்கள் இருவரின் வேட்பு மனுக்களும், ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவர்கள் இருவர் மட்டுமே, தேர்தல் களத்தில் உள்ளனர். மனுக்களை வாபஸ் பெற, நாளை (இன்று) கடைசி நாள். அது முடிந்த பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்,'' என்றார். அதே நேரத்தில், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக, சங்மா தெரிவித்த ஆட்சேபனைகள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை, அவர் கூறவில்லை. தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெற்ற பின்னரே, அதைத் தெரிவிக்க முடியும் என்றும் கூறினார்.
சொல்ல முடியாது:அக்னி கோத்ரி மேலும் கூறுகையில், ""நான், எனது அதிகாரத்தின் அடிப்படையில் செயல்பட்டுள்ளேன். சங்மாவின் புகார் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை, இப்போதைக்கு சொல்ல முடியாது. நான் என்ன சொல்ல வேண்டும் என்பதை, தேர்தல் ஆணையத்திற்கு எழுதிக் கேட்பேன். அதன் பின்னரே, சொல்வேன். நாங்கள் எதையும் மறைக்க விரும்பவில்லை,'' என்றார். இதன்பின், அக்னி கோத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், "ஜனாதிபதி தேர்தல் மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் சட்டம், 1952ல் உள்ள, வேட்பு மனுக்கள் பரிசீலனை தொடர்பான விதிகளின்படி, நான் விசாரணை மேற்கொண்டேன். தேர்தல் அதிகாரி என்ற முறையில், சங்மா தரப்பில் தெரிவிக்கப்பட்ட புகார்களை நிராகரித்துள்ளேன். பல வழக்குகளில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையிலும், இதைச் செய்துள்ளேன்' என கூறியுள்ளார்.
ராஜினாமா கடிதம்:அதே நேரத்தில், பிரணாப் முகர்ஜி சார்பாக, நேற்று தேர்தல் அதிகாரி முன் ஆஜரான, மத்திய அமைச்சர்கள் பவன்குமார் பன்சால், சிதம்பரம் ஆகியோர், "இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து, பிரணாப் முகர்ஜி, கடந்த மாதம் 20ம் தேதியே, ராஜினாமா செய்து விட்டார். அந்த ராஜினாமா கடிதம், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டது என, தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தோம். அதை, தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார்' என்றனர்.
பிரணாப் - சங்மா என, இருவரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால், ஜனாதிபதி தேர்தலில், நேரடிப் போட்டி உருவாகியுள்ளது. அதனால், வரும் 19ம் தேதி தேர்தல் நடக்கும். அந்தத் தேர்தலில் பதிவாகும் ஓட்டுக்கள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.
விருந்து கொடுத்தார் அகிலேஷ்:லக்னோ: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு, உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், நேற்று தன் அலுவலக இல்லத்தில் விருந்து கொடுத்தார்.நேற்று மதியம், லக்னோ சென்ற பிரணாப், விமான நிலையத்திலிருந்து, நேராக முதல்வர் அகிலேஷ் இல்லத்திற்கு சென்றார். அங்கு, சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், உ.பி., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மத்திய அமைச்சர்கள் சிலர் உட்பட, பலரும் இருந்தனர்.பிரணாப்பிற்கு அளித்த விருந்தில், அவர்களும் பங்கேற்றனர். இது தவிர, வேறு சில சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர். பகுஜன் சமாஜ் மற்றும் பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்கவில்லை. விருந்தில் பங்கேற்ற பிரணாப், "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனக்கு, சமாஜ்வாதி கட்சியினர் ஆதரவு தர வேண்டும்' என, கேட்டுக் கொண்டார். அவர்களும், ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். பின், பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்களையும் சந்தித்து, ஆதரவு திரட்டினார். ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டான, 10.98 லட்சத்தில், உ.பி., மாநிலத்தில் மட்டும், 1.62 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சங்மாவின் வழக்கறிஞர் மற்றும் பா.ஜ., தலைவர் சத்பால் ஜெயின்: இந்திய புள்ளியியல் நிறுவன தலைவர் பதவியில் இருந்து, பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படும் கடிதம், பொய்யாக உருவாக்கப்பட்ட ஒன்று. சட்ட ரீதியான அனைத்து அம்சங்களையும் ஆலோசித்த பின், பிரணாப் முகர்ஜிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி, பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்யும். அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும், வாய்ப்புகள் உள்ளன.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நான் தான் நேத்தே சொன்னேனே... காங்கிரஸ்க்கு சட்டம் தான் தெரியாது, ஆனா அதுல இருக்கும் ஓட்டை நல்லா தெரியும்ன்னு .............................. இப்பவே ஒரு சட்டம், "நாற்பது வயதுக்கு உட்பட்டவர் தான் ஜனாதிபதி பதவியில் போட்டி இட முடியும்ன்னு" சொல்லி பாருங்க.... நாளைக்கே, அவரோட birth certificate ல இருந்து, pan card வரைக்கும் அத்தனையும் மாத்தி, அவருக்கு 39 வயசு தான் ஆகுதுன்னு சொல்லி போட்டி போட வைப்பாங்க.... அதுக்கும் இந்த அக்னி கோத்ரி போன்ற ஆட்கள், எல்லா பதிவேடுகளும் சரியாக உள்ளதுன்னு அனுமதி கொடுத்துடுவாங்க.... ஒரு பலாபழத்த சோத்துல மறைக்கலாம், ஆனா இவங்க பலாமரத்தையே மறைக்கறாங்க.... அதிகாரிகளும் கண்ண மூடிகிட்டு கை எழுத்து போட்டுடுறாங்க.... என்னமோ....
நாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பணிபுரியும் பத்திரிக்கைகள் மக்களிடமிருந்து ஆதரவை திரட்டி, ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் உரிமையை மக்களுக்கு பெற்றுத்தர தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு இந்திய குடிமகனும்/குடிமகளும் கண்டிப்பாக உங்களுக்கு ஆதரவு கரம் நீட்ட காத்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் நல்ல மாற்றத்திற்கு உங்களைப் போன்ற மீடியாக்கள் துணை பெரும் பங்கு வகிக்கும். பொதுமக்களுக்கு இருக்கும் சுய சிந்தனை கூட அரசியல் வாதிகளிடம் இல்லாமல் போனது வெட்கக் கேடான விஷயம்.
சந்தேகமே இல்லை இது பொய்யான ராஜினாமா கடிதம் தான். இந்த அக்னி கோத்ரிக்கு எவ்வளவு பெட்டிகள் கொடுக்கப்பட்டதோ, கடவுளுக்கு தான் வெளிச்சம். சங்மாவின் புகார் நிராகரிக்கபட்டதர்க்கான காரணத்தை ஏன் அக்னி கோத்ரி கூறவில்லை? வெளிப்படையாக, இவருக்கு அளித்த அதிகாரத்தின் அடிப்படையில் முடிவு எடுத்திருந்தால் அந்த காரணத்தை கூறித்தானே ஆகவேண்டும்? அந்த கடிதம் போலியாக உருவாக்கப்பட்டது. எப்படி கலைஞர் தொலைகாட்சிக்கு 214 கோடி ருபாய் கடனாக கொடுக்கப்பட்டது, அதை வட்டியுடன் திரும்ப கொடுக்கப்பட்டது என்பதற்கு ஆவணங்கள் தயார் செய்யபட்டதோ, அதே போல தான் இங்கும் ராஜினாமா கடிதம் தாயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் வேட்பு மனு பரிசீலனை ஒரு நாள் தான் செய்யவேண்டும்.. ஒரு நாள் கூட ஒத்திவைக்க அதிகாரம் இல்லை, அப்படி இருந்தும் இந்த அக்னி கோத்ரி காங்கிரஸ் போலியான ராஜினாமா கடிதம் தயாரிக்க ஒரு நாள் அவகாசம் கொடுத்து வேட்பு மனு ஏற்றுள்ளார். சங்க்மாவும், பிஜேபியும் உடனடியாக சுப்ரீம் கோர்டுக்கு செல்லவேண்டும். நீதிபதிகள் தகுந்த ஆதாரங்களை வைத்து நிராகரித்துவிடுவார். பார்க்கலாம், நாளைக்கு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படலாம்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.