சென்னிமலை: வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கும், புதிய வகை துணி வகைகளை, சென்னிமலை கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்து, சாதனை படைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், 35க்கும் அதிகமான கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இவர்கள் போட்டி போட்டுக்கொண்டு பல வகையான துணி உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். ஆரம்பத்தில் போர்வை, படுக்கை விரிப்பு, தலையணை உறை, துண்டு ரகங்களை மட்டும் உற்பத்தி செய்து வந்த, சென்னிமலை கைத்தறி நெசவாளர்கள், அவை போதியளவு விற்பனையாகாமல், பல நாட்கள் கட்டாய விடுப்பில் தான் பொழுதை கழித்தனர். தற்போது, ஏற்றுமதி துணி உற்பத்தியில் ஈடுபட ஆரம்பித்து, திரைச்சீலைகள், கிச்சன் நாப்கின், மேடப் செட், டாபிமேட், டஸ்டர் கிளாத்... என, பல ரகங்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்து விட்டனர் . இதனால், வேலையில்லை என்ற குறை நிவர்த்தியாகி வருகிறது. உள்நாட்டு விற்பனையையும் தக்க வைக்க பல்வேறு புதிய புதிய ரகங்களை வடிவமைத்து வருகின்றனர்.
புதிதாக வீடுகள், பெரிய தங்கும் விடுதிகள், வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில், வரவேற்பறையை அலங்கரிக்க, "இன்டீரியர் டெக்கரேஷன்' செய்து, வால் பேப்பர்களை ஒட்டி அழகு செய்திருப்பர். இந்த பேப்பர் கொஞ்ச காலத்தில் கலர் மங்கிவிடும். தற்போது, அறைகளை அலங்கரிக்க, கைத்தறி துணியில், ஓவியங்களை பிரின்ட் செய்து விற்பனைக்கு விடுத்துள்ளனர். இதற்கு நல்ல மவுசு உள்ளது. தற்போது, 2/17ம் நம்பர் நூலில் நெசவுசெய்த கெட்டி போர்வைகளை, ராஜஸ்தான் மாநிலம் ரெய்பூருக்கு அனுப்பு, பல வகைகளில் ஓவியங்களை பிரின்ட் செய்து, கொண்டு வருகின்றனர். ஐந்து அடி அகலம், 7.5 அடி நீளம் கொண்ட இந்த வரவேற்பு அறை ஓவியங்கள் மற்றும் பெட்ஷீட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் பல்வேறு மாநில தலைநகரங்களில் நடந்த, கைத்தறி கண்காட்சியில் இவை அமோக விற்பனையாகியுள்ளன. "அரசு தள்ளுபடி போக, இதன் விலை, 180 முதல், 210 ரூபாய் தான். குதிரை, மிக்கிமவுஸ், இயற்கை காட்சிகள், போன்றவற்றை பிரின்ட் செய்து விற்பனைக்கு விடுத்துள்ளோம், வரும் காலங்களில் சிறந்த ஓவியங்கள், மாடன் ஆர்ட் ஆகியவற்றை பிரின்ட் செய்து விற்பனைக்கு விட முடிவு செய்துள்ளோம்' என, கைத்தறியாளர்கள் கூறுகின்றனர்.
சென்னிமலையில் துணி நெசவு செய்தாலும், ரெய்ப்பூரில்தான் பிரின்ட் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு அதிக நாட்களும், சிரமமும் ஏற்படுகிறது. இருந்தாலும், புதுமைகளை பயன்படுத்தி, உலக மக்களை தங்கள் பக்கம் திரும்பி பார்க்க வைப்பதில், சென்னிமலை நெசவாளர்கள் தொடர் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.