ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வர வர, பிரணாப் முகர்ஜியை எதிர்த்து, பிரசாரமும் வலுத்து வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக, ஒரு பதவியை பிரணாப் ராஜினாமா செய்யவில்லை. பிற்பாடு தான் பதவி விலகினார். தவிர, இதற்கான கடிதத்தில் உள்ளது, அவருடைய கையெழுத்தே கிடையாது என்று, பா.ஜ., உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பிரணாப்பும், காங்கிரசும், இதை மறுத்து வருகின்றனர். பிரணாப்பின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை அடுத்து, தேர்தல் முடிந்த உடன், இந்த விவகாரத்தை, உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும், எதிர் வேட்பாளர் சங்மா தயாராகி வருகிறார்.1969ல், வி.வி.கிரி ஜனாதிபதியான உடன், அவரை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், 1970ல், கிரிக்கு ஆதரவாக தீர்ப்பளிக்கப்பட்டது.இன்னொரு பரபரப்பான விஷயமும், காங்கிரசில் அடிபடுகிறது. பிரணாப் முகர்ஜிக்கு எதிரான சமாச்சாரத்தை, எதிரணிக்கு கசிய விடுவது, காங்கிரசார் தானாம்! கட்சியில், பிரணாப்பின் எதிர் கோஷ்டியினர் தான், இதைச் செய்கின்றனராம். பிரதிபா பாட்டீல் ஜனாதிபதி மாளிகையிலிருந்து விடைபெறத் தயாராகி வருகிறார்.23ம் தேதி, அனைத்து எம்.பி.,க்களிடையே, பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் பேசுகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு விருந்தளிக்கிறார்.பிறகு, மீடியாவினரையும் சந்தித்து, நன்றி தெரிவிக்கிறார்.
காத்திருக்கும் தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையத்திற்கு, வழக்கமாக, மூன்று ஆணையர்கள் இருப்பர். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த குரேஷி ஓய்வுபெற்ற பிறகு, அவருக்கு பதிலாக புதிய ஆணையரை, இதுவரை மத்திய அரசு நியமிக்கவில்லை.தற்போது, வி.எஸ்.சம்பத் மற்றும் எச்.எஸ்.பிரம்மா ஆகிய இருவர் மட்டுமே, தேர்தல் பணிகளைக் கவனித்து வருகின்றனர். ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் விவகாரங்களை, இந்த இருவர் மட்டுமே அறிவித்தனர்.தேர்தல் ஆணையர் மட்டுமா? வங்கி சேர்மன் உட்பட, பல பதவிகள் காலியாக உள்ளன. ஆனால், இந்த மத்திய அரசு, எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது என்கின்றனர் அதிகாரிகள். ஆனால், டில்லியில், வேறொரு செய்தியும் அடிபடுகிறது. துணை ஜனாதிபதி அன்சாரிக்கு செயலராக உள்ளவர், ஷம்சேர் ஷெரீப் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி. இவரைத் தான், தேர்தல் ஆணையராக நியமிக்க, அரசு திட்டமிட்டுள்ளதாம். பிறகு ஏன் காலதாமதம்? ஆகஸ்ட் 10ம் தேதி, அன்சாரியின் பதவிக் காலம் முடிவடைகிறது. அவருக்கு, மீண்டும் இந்த பதவியையே தர காங்கிரஸ் விரும்பினாலும்... அன்சாரியின் மனைவி மறுத்துவிட்டாராம். துணை ஜனாதிபதி பதவி வேண்டாம் என்று, கண்டிப்பாக சொல்லி விட்டாராம், அன்சாரியின் துணைவி.இதனால், அன்சாரியின் பதவிக் காலம் முடிந்த பிறகு தான், ஷெரீப் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. சம்பத்தைப் போல, ஷெரீப்பும் வேலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்.
உச்சத்தில் கட்காரி
பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கட்காரியின் மகன் திருமணம், சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்றது. வரவேற்பு, டில்லியில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது. பிரதமர் மன்மோகன் உட்பட, பல அரசியல் தலைவர்கள், கட்சி பேதம் பாராமல், வரவேற்புக்கு வந்தனர். திருமண தம்பதியினர், மன்மோகன் சிங்கின் கால்களை தொட்டு வணங்கினர்.முகேஷ் அம்பானி, சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரத்தோ ராய் என, அனைத்து தொழில் அதிபர்களும், நேரடியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர். தான், யாருக்கும், பா.ஜ.,வில் உள்ள மற்ற தலைவர்களுக்கு சளைத்தவரல்ல என்பதை, இந்த வரவேற்பின் மூலம், தன் கட்சிக்கு, மெசேஜ் கொடுத்துள்ளார் கட்காரி.அரசியலிலும், தொழில் துறையிலும், மும்பை லாபி என்று ஒன்று உண்டு. இந்த மும்பை லாபி முழுவதையுமே, கட்காரி மகன் திருமண வரவேற்பில், காண முடிந்தது.இதன் மூலம், டில்லி அரசியலில், தன்னை ஒரு சிறந்த தலைவராக உயர்த்திக் கொண்டுள்ளார் என, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. கட்காரி ஒரு ஜோக்கர் என கிண்டலடித்த, ஒரு சீனியர் பா.ஜ., தலைவரும், தற்போது, வாய் மூடி அமைதி காக்கிறாராம்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.