தி.மு.க., நடத்திய சிறை நிரப்பும் போராட்டம் முடிந்தும், போராட்டம் குறித்த அவர்களது கட்சி நிர்வாகிகளுக்குள்ளான விவாதங்கள் ஓய்ந்தபாடில்லை. கட்சியின் அடுத்த வாரிசு யார் என்று பலம் பார்க்கும் சோதனை முயற்சியாக, சிறை நிரப்பும் போராட்டம் நடந்து முடிந்துள்ளது என்பது, கட்சியினரின் கருத்தாக உள்ளது.
எதற்காக போராட்டம்?தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலர் மீதும் நில அபகரிப்பு, ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் தொடர்ந்து பதிவான நிலையில், சேலம், அங்கம்மாள் காலனி, வீடுகள் எரிப்புச் சம்பவம் உட்பட, ஆறு வழக்குகளில் கைதான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது, குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. அவருக்கு அடுத்ததாய், மேலும் பலர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துவிடுமோ என்ற அச்சம், தி.மு.க., வட்டாரத்தில் எழுந்தது.அவர்களின் பயத்தை போக்க வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க.,வின் அவசர செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டது. செயற்குழு கூட்டம் குறித்த, தி.மு.க., தலைமை அலுவலக அறிவிப்பில், "வீரபாண்டி ஆறுமுகம் மீது, குண்டர் தடுப்புச் சட்டம், மதுரை மாவட்டச் செயலர் தளபதி மீது தொடர்ந்த வழக்கு, ஆகியவற்றை கண்டித்து, எவ்வகையான போராட்டம் நடத்துவது என்பது பற்றி விவாதித்து முடிவெடுக்க செயற்குழு கூடுகிறது' என, தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஒப்புக்கு காரணங்கள் :அதன்பிறகு நடந்த செயற்குழு தீர்மானத்தில், காவிரி பிரச்னை, விலைவாசி உயர்வு உட்பட ஒப்புக்கு கூறப்பட்ட காரணங்கள் எதுவும், செயற்குழு அறிவிப்பில் இடம் பெறவில்லை. இதை பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டபோது ஏற்காத, தி.மு.க., தலைவர், "பத்திரிகைகள் திரித்து வெளியிடுகின்றன; காழ்ப்புணர்ச்சியை காட்டுகின்றன; பத்திரிகா தர்மத்தை மீறுகின்றன' எனக் கூறியதோடு, "காவிரி பிரச்னை, அரிசி, பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, அனைத்து துறைகளிலும் அரசின் ஊழல் என, பல்வேறு காரணங்களை முன்னிறுத்தியே போராட்டம் நடக்கிறது' என, தெரிவித்தார்.ஆனால், கடந்த 20 ஆண்டுகளாய், "நீண்டு' வளர்ந்துள்ள காவிரி பிரச்னைக்காக இதுவரை, தி.மு.க., சிறை நிரப்பவில்லை. பஸ் கட்டணம், பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவை அரசால் அறிவிக்கப்பட்டபோது, அவசரமாக செயற்குழுவைக் கூட்டி சிறை நிரப்ப அறைகூவல் விடுக்கவில்லை என்பதை, "வசதியாக' மறந்துவிட்டு பத்திரிகைகள் மீது, தி.மு.க., தலைவர் பழி போட்டுள்ளார்.
ஆள் பிடிக்கும் படலம்:போராட்டத்தின் உண்மையான நோக்கத்தை, பொதுமக்கள் உணர்ந்து விடுவார்களோ என்ற பயத்தோடு தான், இதர காரணங்களை, தி.மு.க., தலைவர் பட்டியலிட்டு உடனே படபடத்தார். ஏனென்றால், தி.மு.க., பிரமுகர்கள் மீதான வழக்குகள் குறித்து, எந்த சாதாரண பொதுஜனமும் கவலை கொள்ளவில்லை. மாறாக, தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை பாராட்டவே செய்தனர்.சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்தபின், போராட்டம் வெற்றியடைய தொண்டர்கள் ஒத்துழைப்பார்களா என்ற கவலை ஏற்பட்டதன் விளைவாகவே, "போராட்டத்தில் பங்கு பெறுவோருக்கு மட்டுமே பதவிகள்' என்ற புதிய "கான்செப்ட்'டை அறிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பு, இதர மாவட்டங்களில் மாவட்டச் செயலர்கள் தங்களது பதவியை காப்பாற்றிக் கொள்ள ஆள்பிடிக்கும் வேலையில் இறங்கியது, உள்ளிட்டச் சம்பவங்களும் நடந்தன.
ஆசிரியர் போராட்டம்:தி.மு.க.,வின் போராட்டம் குறித்து பேசிய அரசியல் பார்வையாளர் ஒருவர் கூறியதாவது:எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சிறை நிரப்பும் போராட்டத்தில் கல்லூரி ஆசிரியர்கள் ஈடுபட்டனர். தொடர்ந்து, 16 நாட்கள் மறியல் செய்த ஆசிரியர்களை, 17வது நாளில் கைது செய்து, அன்று மாலையே, காவல்துறை விடுவித்தது. ஆனால், அதன்பின் அவர்களது கோரிக்கைகளையும், அரசு நிறைவேற்றியது.
ஆனால், தாங்கள் வலியுறுத்திய ஒரு கோரிக்கை கூட நிறைவேறாத நிலையில், சிறைப்பக்கமே போகாமல், சிறை நிரப்பும் போராட்டம் வெற்றி பெற்றதாக அறிவித்து திருப்திப்பட்டுள்ளார், தி.மு.க., தலைவர். உணர்வுப்பூர்வமான போராட்டத்தில், கோஷ்டி மோதல், "சரக்கு' பாட்டில் சகிதம் வந்தவர்கள், குத்தாட்டம் போட்டவர்கள், கைதில் இருந்து தப்பித்து போனவர்கள் என, பல வேடிக்கையான சம்பவங்களும் நடந்துள்ளன.இவ்வறு அவர் கூறினார்.
கட்சிக்குள் குழப்பம்:தி.மு.க.,வில் அடுத்த வாரிசுகளாக கருதப்படும் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோரில், யாருக்கு ஆதரவாளர்கள் அதிகம் என்பதை கட்ட, இந்த போராட்டம் பயன்பட்டதாக கருதுகின்றனர் தொண்டர்கள். மத்திய அமைச்சர் என்பதால், அழகிரி போராட்டத்தில் ஈடுபடாத நிலையில், அவரின் ஆதரவாளர்களிடம் சுரத்து குறைந்து இருந்ததாக கூறுகின்றனர், கட்சி நிர்வாகிகள். சென்னை உட்பட சில மாவட்டங்களில் மட்டும் கனிமொழியின் ஆதரவாளர்கள் பலம் காட்ட, ஸ்டாலின் ஆதரவாளர்கள் முன்னிலை பெற்றனர்.
"சிறை நிரப்பும் போராட்டத்தால், கட்சிக்கு வெற்றி கிடைத்ததோ இல்லையோ, ஸ்டாலின் கையில் தான் கட்சி உள்ளது என்பது உறுதிபட்டுள்ளது' என்கிறார், வட மாவட்டத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத, தி.மு.க., பிரமுகர் ஒருவர்.
சவால் விட்டவர், சமரசம் செய்தது ஏன்?தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது நில அபகரிப்பு மோசடி குற்றச்சாட்டு தொடர்பான வழக்குகள் பாய்ந்தது போல், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மீதும், மிரட்டி வீட்டை எழுதி வாங்கிக் கொண்டதாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, அவர் கைது செய்யப்படுவார் என்ற பரபரப்பு எழுந்தது.இந்நிலையில், டி.ஜி.பி., அலுவலகத்தில் தன்னிச்சையாக ஆஜரான ஸ்டாலின், "இது பொய் புகார். கைது குறித்து பயமில்லை' என்று பேட்டியளித்தார். "வழக்கை கண்டு பயந்து ஓடாமல், போலீசாருக்கு சவால் விட்டவர் ஸ்டாலின்' என்று, தி.மு.க.,வினரால் அப்போது பெருமிதம் பேசப்பட்டது.ஆனால், சில நாள் இடைவெளியிலேயே, இந்த குற்றச்சாட்டை சுமத்தியவரோடு பேரம் பேசி, அவருக்கு கோடிக்கணக்கில் தொகை வழங்கி, ஸ்டாலின் சமாதானம் செய்து கொண்டார். பொய் வழக்கு என்றால், சட்டப்படி சந்தித்து நிரபராதி என, ஸ்டாலின் நிரூபித்து இருக்க வேண்டியது தானே என்ற கேள்வியை எழுப்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.இதேபோல் தான், வழக்கு பாய்ந்த பல "மாஜி'க்கள் பலர் புகார்தாரர்களை சரிக்கட்டி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், "தில்'லாக சிலர் இருந்ததும், அரசின் தீவிர நடவடிக்கையும், அவர்களை சிறையில் வைத்துள்ளதாக கூறுகின்றனர் அவர்கள்.
கணக்கு சரியா வரலியே...:ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட தி.மு.க.,வில், போராட்டத்தில் ஈடுபட்டு, 2,32,797 பேர் கைதானதாக அறிவிக்கப் பட்டுள்ளது. தி.மு.க.,வின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான, "முரசொலி'யில் இந்த எண்ணிக்கையை வெளியிடுவதிலும், பல்வேறு குழப்பங்கள் இருந்தன.ஜூலை 5ம் தேதியே, "முரசொலி' இதழில், "தென் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் கனிமொழி தலைமையில் நடந்த போராட்டத்தில், 4,000க்கும் மேற்பட்டோர்; கே.கே., நகரில் 820 பேர்; சேப்பாக்கத்தில், 1,000க்கும் மேற்பட்டோர்; தி.நகரில், 850 பேர்; மயிலாப்பூரில், 80க்கும் மேற்பட்டோர் கைதானதாக குறிப்பிடப் பட்டுள்ளது. அதே நாளிதழின் கடைசி பக்கத்தில், தென் சென்னை மாவட்டத்தில், 4,000 பேர் கைதானதாக குறிப்பிடப் பட்டுள்ளது. வட சென்னை மாவட்டத்தில், 50 பேரை மட்டும் கூடுதலாக கூட்டி, 4,050 பேர் கைதானதாக பட்டியல் தரப்பட்டுள்ளது. இதேபோல், பல மாவட்டங்களிலும் கட்சித் தலைமையிடம் பதிவு செய்த எண்ணிக்கை, அப்படியே கைது பட்டியலில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. "இதன் மூலம் கட்சித் தலைமையை ஏமாற்றும் செயலை, பல மாவட்டங்கள் செய்துள்ளன' என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.
பரிசு ஆசைக்கு மயங்காத உடன்பிறப்புகள்:தி.மு.க.,வில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, கிளை, வட்டம் என, கட்சி நிர்வாகிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவைத் தலைவர், செயலர், துணைச் செயலர்கள், பொருளாளர், மாவட்ட பிரதிநிதி என, கட்சி பதவிகள் பிரிக்கப்பட்டுள்ளன.கட்சி நிர்வாகிகளுக்கு இணையாக இளைஞர் அணி, நெசவாளர், தொழிலாளர், விவசாயிகள், தொண்டர், மீனவர், மாணவர், மகளிர், இலக்கிய அணி என, ஏகப்பட்ட அணிகளுக்கு நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் நியமிக்கப் பட்டுள்ளனர். இந்த நிர்வாகிகள் பட்டியலே ஒவ்வொரு மாவட்டத்திலும், சில ஆயிரங்களை தொடும்.
இவர்களோடு தொண்டர்களையும் சேர்த்து பார்த்தால், கைதானோர் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது என, தி.மு.க., தலைமை கவலைப்பட்டதாகக் கூறப்படுகிறது. போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் குறித்த பட்டியலும், தற்போது எடுக்கப்பட்டு வருகிறது. அதிக எண்ணிக்கையில் கைதானோர் பட்டியலில், விழுப்புரம் இடம் பிடிக்க, குறைந்த எண்ணிக்கையிலான எண்ணிக்கையில் நீலகிரி மாவட்டம் இடம் பெற்றுள்ளது. நீலகிரியில், "அதிக கூட்டம் சேர்த்தால் பரிசு' என்று, தொகுதி எம்.பி.,யான, "ஸ்பெக்ட்ரம்' ராஜா அறிவித்தும், எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டசபை தொகுதிகளில் இரண்டில், தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், கைதானோர் வரிசையில் கடைசி இடத்தை நீலகிரி பிடித்தது எப்படி என்ற ஆய்வில் இறங்கியுள்ளது, தி.மு.க., தலைமை.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அரசியலாகட்டும்... கலைத்துறையாகட்டும்... திறமை இருந்தால்தான் மேல வர முடியும். இன்னார் மகன்..மகள் என்பது ஒரு அறிமுகத்துக்கு மட்டுமே பயன்படும். கலைஞரின் பிள்ளைகள் எல்லோருமே திறைமையில் மிளிர்கிறார்கள். திமுக சமீப போராட்ட வெற்றி மூலம் மிளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது. வீரபாண்டி ஆறுமுகத்துக்காக இந்த போராட்டம் நடத்தப்படவில்லை என்பது ஏற்கனவே பலமுறை தெளிவாக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் கையாலாகாத்தனத்தை... ஒழுங்காக வழக்கு கூட பதி செய்யாமல் சட்டத்தை கேலிக்குரியாக்கி அவர்கள் நடத்தும் கூத்தை கண்டித்தே போராட்டம். ஜாமீன் வரக்கூடாது என்னும் கட்டளையை ஏற்றே பிறமாநில சிறை..என்றெல்லாம் பயமுரத்தப்பட்ட பின்னரும் இத்தனை பேர் பங்கேற்றார்கள் என்றால்..அப்படி இல்லாவிட்டால் இன்னும் எத்தனை பேர் பங்கேற்று இருப்பார்கள்..என்பதை நினைத்துப்பார்க்கவும்.
அடடா.. மகாபாரத காலத்தில் இருந்த பஞ்சபாண்டவர்-கௌரவர் பங்காளிச் சண்டைக்குக் கூட ஒரு முடிவு கிடைத்தது. கழகத்தின் பங்காளிப் பஞ்சாயத்துக்கு முடிவே கிடைக்காது போலிருக்கிறது. அழகிரிக்குப் பதவி கிடைக்க ஒரு போராட்டம், கழகம் விரும்பிய அளவுக்கு மந்திரி பதவிகள் கிடைக்க ஒரு போராட்டம், விரும்பிய இலாகாவுக்கு ஒரு போராட்டம், கனிமொழி விடுதலைக்கு ஒரு போராட்டம், குடும்பத்தின் சினிமா உலக ஆதிக்கத்தை நிலைநிறுத்த ஒரு போர், என்று எத்தனை எத்தனை போர்களடா.
தி மு க வை பற்றி எதாவது செய்தி வெளியிட்டால் அது வில்லங்கமகதான் இருக்கிறது. உடனே சிண்டு முடியும் வேலை, வெங்காயம் என்று பிதற்ற வேண்டியது. இனம் என்று உளற வேண்டியது. நாங்கள் இவ்வளவு பேர் தி மு கவையும் அதன் பண கொள்கைகளையும் எதிர்த்து கருத்து போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறோம். குறிப்பிட்ட சிலரை மட்டும் இனம் பிரித்து சுட்டி காட்டுவது பழைய நினைப்பு அரசியல். ஸ்டாலினையோ, கனியையோ, முதலில் திருந்த சொல்லுங்கள். மக்கள் மன்றத்தில் பத்திரிகை உலகில் முதல் இடத்தில இருக்கும் தினமலருக்கு வேலை இல்லாமல் பொய் விடும்
தி மு க என்பது ,தமிழ்நாட்டு மக்களை பொறுத்த வரை முடிந்து போன கட்சி. மிஞ்சி இருப்பவர்கள் இதன் தலைவர்கள் வேறு கட்சியிலும் சேர முடியாத நிலை. சிறை நிரப்பும் போராட்டம் என சொல்லி உள்ளே சென்றவர்கள் ஒரு ஆள் கூட என்னை எதற்காக கைது செய்தேர்களோ அந்த சட்டப்படி என் மீது நடவடிக்கை எடுங்கள் , நாங்கள் சிறை செல்லத்தான் விரும்புகிறோம் சிறையை விட்டு வெளியில் செல்ல மாட்டோம் என சொல்லவோ, கேட்கவோ இல்லை ,
ஜெயலலிதாவின் மேலே திமுக சொத்து குவிப்பு வழக்கு போட்டு, இன்று வரை கோர்ட் கோர்ட் ஆக அலைய வைத்துள்ளது....ஆனால் திமுக தலைமை குடும்பத்தில் ஒரு உறுப்பினர் மீது கூட தற்போதைய ஆளும் கட்சி எதற்கு சொத்து குவிப்பு வழக்கு தொடரவில்லை...?கருணா குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு சம்பாதித்தார்களா? ...இவ்வளவு சொத்து அவர்களிடம் குவிந்தது எப்படி என்று தற்போதைய தமிழக அரசுக்கு கேட்க நாதியில்லாமல் போனது வருத்தத்திலும் மிக பெரிய வருத்தம்.....அல்லது புரியாத புதிர்..... ? வீரபாண்டியும் / நேருவும் குற்றவாளிகள் என்றால், ஸ்டாலினும், அழகிரியும் நலவர்களா?....வீரபாண்டியையும் நேருவையும் கைது பண்ணவா , நாம் அதிமுகவுக்கு ஓட்டு போட்டோம் என்று சாம்னியவன் நினைப்பான் அல்லவா? .. எய்தவனை விட்டு விட்டு , அம்பினை நோவானேன்?.... தற்போதைய அரசின் நடவடிக்கைகள், திமுகவின் கோஷ்டி பூசலை களைவதற்கு தான் உறுதுணையாக உள்ளதே தவிர வேறொன்றும் இல்லை.....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.