தி.மு.க., சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு, மாவட்டவாரியாக, "துண்டு' அணிவித்து கவுரவப்படுத்த, பொருளாளர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். முதல் கட்டமாக, வரும் 13ம் தேதி, கொளத்தூர் தொகுதி உள்ளிட்ட, 4 சட்டசபைத் தொகுதிகளில் கைதான தொண்டர்களுக்கு, துண்டு அணிவிக்கப்படுகிறது.
போராட்டம்:தி.மு.க., ஆட்சியில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடர்பாக, அக்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் பலர் மீது, வழக்கு தொடரப்பட்டது. சேலம், அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரது கைது படலத்தையும், விலைவாசி உயர்வையும் கண்டித்து, தமிழகம் முழுவதும், தி.மு.க., சார்பில் சிறை நிரப்பும் போராட்டம், கடந்த 4ம் தேதி நடந்தது.
இந்தப் போராட்டத்தில், ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்பர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எதிர்பார்த்தார். இருப்பினும், தொண்டர்கள் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என, சில மாவட்டச் செயலர்களுக்கும், தொகுதிவாரியாக தலைமை வகித்த முக்கிய பிரமுகர்களுக்கும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அங்க அடையாளம்:சிறைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்து, போலீஸ் ஸ்டேஷனில், அங்க அடையாளங்களை காட்டி, கையெழுத்திட்ட தொண்டர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. அப்பட்டியலில் இடம்பெற்ற தொண்டர்களுக்கு, தட்டிக் கொடுத்து கட்சிப் பதவியில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. சில தொகுதிகளில், காலையில் பங்கேற்ற தொண்டர்கள், மாலையில் சிறைக்குச் செல்ல பெயர் கொடுக்காமல் ஓடியுள்ளனர். அப்படி ஓடி ஒளிந்த கட்சியினரின் பட்டியலையும், அந்தந்த ஒன்றிய, நகர, பகுதி, மாவட்டச் செயலர்கள் மூலமாக கணக்கெடுக்கும் பணியும் துவங்கியுள்ளது. இவர்கள், கட்டம் கட்டப்படுவார்கள்.
தொண்டர்களுக்கு துண்டு:கைதான தொண்டர்களை மாவட்டவாரியாக சந்தித்து, போட்டோ எடுத்துக் கொள்ள, ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், முதல் கட்டமாக, கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க., நகர், பெரம்பூர் ஆகிய தொகுதிகளில் கைதான தொண்டர்களுக்கு, ஸ்டாலின் துண்டு அணிவித்து கவுரவப்படுத்துகிறார். இந்நிகழ்ச்சி, வரும் 13ம் தேதி, கொளத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.