சென்னை அண்ணா பல்கலை, நெல்லை மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலை உட்பட, ஆறு பல்கலைக்கழகங்களில், துணை வேந்தர் பதவி காலியாக உள்ளது. இந்தப் பதவியை பிடிக்க, பலரும் போட்டா போட்டி போடுகின்றனர். சிலர், தினமும் கோட்டைக்கு படையெடுத்து, அதிகாரத்தில் உள்ளவர்களை சந்தித்து வருகின்றனர்.
நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை, கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலை, வேலூர் திருவள்ளுவர் பல்கலை ஆகிய, ஐந்து பல்கலைகளில் பல மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருக்கின்றன. இந்தப் பட்டியலில், சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலையும் இணைந்தது.
ஓராண்டு ஆகிறது:
இந்த பல்கலைகளில், புதிய துணை வேந்தர்களை நியமனம் செய்வதற்காக, தேர்வுக் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்குழு, துணை வேந்தர் பதவிக்கு தகுதி வாய்ந்த மூன்று பேரின் பெயர்களை தேர்வு செய்து, அந்தப் பட்டியலை, கவர்னர் ரோசய்யாவுக்கு அனுப்பி வைப்பர். அந்த மூன்று பேரில் இருந்து ஒருவரை, கவர்னர் தேர்வு செய்வார். சென்னை அண்ணா பல்கலை தவிர, மற்ற ஐந்து பல்கலைகளுக்கும் தேர்வுக் குழு அமைத்து, ஒரு ஆண்டுக்கும் மேலாகிறது. எனினும், இதுவரை துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை.அண்ணா பல்கலையில், தற்போதைக்கு, தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் ரமேஷ் சந்த் மீனா தலைமையில், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, பல்கலையை நிர்வாகம் செய்ய, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து, சமீபத்தில் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பனிடம் நிருபர்கள் கேட்டதற்கு, ""தேர்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. விரைவில் புதிய துணை வேந்தர் நியமிக்கப் படுவார்,'' என தெரிவித்தார். இந்நிலையில், புதிய துணை வேந்தர்களை நியமனம் செய்யும் பணி, வேகம் எடுத்துள்ளதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், துணை வேந்தர் பதவியை பிடிக்க, ஆளாளுக்கு கோட்டைக்கு படையெடுக்கத் துவங்கியுள்ளனர்.
போட்டா போட்டி:
* சென்னை பல்கலையின் முன்னாள் பேராசிரியர் ஒருவர், தான் தீவிர அ.தி.மு.க., விசிறி என்றும், எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்திலேயே அண்ணாதுரை பெயரில் தனி துறையை ஏற்படுத்தியதாகவும் கூறி, அமைச்சர் அலுவலகம், செயலர் அலுவலகம் என, ஒவ்வொரு அலுவலகமாக ஏறி இறங்கி வருகிறார்.
* அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஒருவரும், போட்டி பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவரையும், அடிக்கடி செயலர் அலுவலகத்தில் காண முடிகிறது.
* கொங்கு மண்டலத்தில் உள்ள ஒரு பல்கலையின் துணை வேந்தராக இருப்பவரும், அதே மண்டலத்தில் ஏற்கனவே துணை வேந்தர் பதவியை வகித்து, சர்ச்சையில் சிக்கி பதவியை இழந்தவரும், பதவியைப் பெற தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.இதேபோல், பல பேர், கோட்டையை வலம் வந்தபடி உள்ளனர். இந்த ஆட்சி வந்தபின், மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தராக கல்யாணி மற்றும் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற துணைத் தலைவராக சிந்தியா பாண்டியனும் நியமிக்கப் பட்டனர். இருவருமே, அ.தி.மு.க., பின்னணியைக் கொண்டவர்கள். கல்யாணி, நெடுஞ்செழியனின் மருமகள். சிந்தியா பாண்டியன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியனின் மனைவி.தற்போது, ஆறு பல்கலைக் கழகங்களில் யார் துணை வேந்தர் என்ற பரபரப்பு பெரிதாகப் பேசப்படுகிறது
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.