ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் சரத்பவார் தரத் துவங்கியிருக்கும் குடைச்சல், எதில் போய் முடியுமோ என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவருக்கும், காங்கிரசுக்கும் இடையிலான பனிப்போர், தீவிரமடையத் துவங்கியுள்ளதால், மத்திய அரசியலில் மாற்றம் ஏதும் ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கூட்டணியை விட்டு வெளியேறப் போவதில்லை என்று அறிவித்து விட்ட நிலையில், அமைச்சரவையை விட்டு, தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியேறுமா என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க, அந்தக் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், டில்லியில் நாளை நடக்கவுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், திரிணமுல் காங்கிரஸ், தி.மு.க.,வை அடுத்து, மூன்றாவது பெரிய கட்சி தேசியவாத காங்கிரஸ். இந்த கட்சியின் தலைவரான மத்திய விவசாய அமைச்சர் சரத்பவாரும், இதே கட்சியைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான பிரபுல் படேலும், சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்கவில்லை. அத்துடன் அலுவலகத்திற்கும் செல்லாமல் உள்ளனர்.
ராஜினாமா கடிதமா? பிரதமர் மன்மோகனிடம், சரத்பவார் ராஜினாமா கடிதம் அளித்துள்ளதாக செய்திகள் வந்தாலும், அது நிஜமாகவே ராஜினாமா கடிதம்தானா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ராஜினாமா செய்வதாக இருந்தால், அதைச் சுருக்கமாக எழுதி அனுப்புவதே வழக்கம். சரத்பவாரோ, தனக்குள்ள அனைத்து பிரச்னைகளையும் விரிவாக எழுதி, இத்தனை காரணங்களினால் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்போவதாகக் கூறியுள்ளார். இது ராஜினாமாவுக்கு ஒப்பானது அல்ல. எனவே, இதை ராஜினாமா கடிதமாக காங்கிரசும், மத்திய அரசும் எடுத்துக் கொள்ளவில்லை.
சீனியாரிட்டி: கட்சியிலும், ஆட்சியிலும் ராகுலுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப் போவது உறுதியாகிவிட்டது. நிச்சயம் ஆட்சியில், இரண்டாம் இடத்திற்கு அவர் உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது. சரத்பவாரோ, இந்திரா காலத்து அரசியல்வாதி. ராஜிவ், சோனியா என, பலருடன் பணியாற்றி விட்டு, இப்போது ராகுலுடன் பணியாற்றுவதில் சிரமம் இருக்கலாம் என்றும், தன் சீனியாரிட்டி பாதிக்கப்படலாம் என்றும் கருதுகிறார்.
ஷிண்டே விவகாரம்: பிரணாப் முகர்ஜி, ஜனாதிபதி பதவிக்கு தேர்வாகவுள்ளதால், மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழவுள்ளது. அதில், சிதம்பரத்திடம் நிதி இலாகா ஒப்படைக்கப்பட்டு, மத்திய மின் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயை, உள்துறை அமைச்சராக்குவதற்கு காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. ஷிண்டேயை மகாராஷ்டிர மாநில அரசியலுக்குள் கொண்டு வந்ததே, சரத்பவார் தான். எனவே, உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷிண்டேயின் கீழும் பணியாற்றுவது, தன்னால் இயலாத காரியம் என்றும், பவார் நினைக்கிறார். மேலும், ஏ.கே.அந்தோணி, லோக்சபாவில் அவை முன்னவராக்கப்படலாம் என்ற செய்தியும், பவாரை யோசிக்க வைத்துள்ளது. அந்தோணிக்கு ஆட்சியில் இரண்டாம் இடம் அளிக்கப்பட்டு, அவருக்கு அடுத்தபடியாக தான் இருப்பதை, கவுரவ குறைவாகப் பார்க்கிறார் சரத்பவார்.
சிபாரிசு மறுப்பு: சரத்பவார் செய்யும் சிபாரிசுகள் பலவற்றையும், காங்கிரசும், மத்திய அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. கவர்னர் பதவிகளுக்கு மூன்று பெயர்களை, சரத்பவார் சிபாரிசு செய்துள்ளார். அவை கண்டுகொள்ளப்படவில்லை. மூன்று பேருமே, மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இந்த சிபாரிசுகள் ஏற்கப்படாமல் போனதில், சரத்பவாருக்கு பெரும் வருத்தம்.
உள்ளடி வேலைகள்: மேலும், மகாராஷ்டிராவிலும் சரத்பவாரின் செல்வாக்கை குறைக்கும் வகையில், நிறைய உள்ளடி வேலைகளை, காங்கிரஸ் செய்து வருகிறது. குறிப்பாக, கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நியமனத்தில், தேசியவாத காங்கிரசின் ஆட்கள் நிறையவே பாதிக்கப்படுவதாக, பவாருக்கு புகார் வருகின்றன. அம்மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான், எந்த விஷயம் என்றாலும், காங்கிரஸ் தலைமையை ஆலோசிக்காமல் செய்யமாட்டார். எனவே, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரசுக்கு அளிக்கப்படும் நெருக்கடிகள் எல்லாமே, காங்கிரஸ் தலைமையின் ஆசியுடன் நடத்தப்படுபவை என, பவார் எண்ணுகிறார்.
செயற்குழு கூட்டம்: இந்நிலையில், சரத்பவார், நாளை தன் கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார். "கூட்டணியை விட்டு வெளியேற மாட்டோம்' என, ஏற்கனவே அறிவித்துஉள்ளார். அமைச்சரவையை விட்டு வெளியேறுவதா, வேண்டாமா என்ற முடிவு, இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தன் வருத்தங்களுக்காக, காங்கிரசுக்கு ஒரு நெருக்கடியை உண்டாக்க நினைக்கிறாரே தவிர, அமைச்சரவையை விட்டு வெளியேறுவதற்கு வாய்ப்புகள் குறைவே என்றும் கூறப்படுகிறது.
பிருத்விராஜ் காரணமா? மகாராஷ்டிர முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான பிருத்விராஜ் சவான் மீது, தேசியவாத காங்., கட்சியினர், கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இரு கட்சிகளுக்கு இடையேயான மோதலுக்கு, சவான் தான், முக்கிய காரணம் என்றும், மகாராஷ்டிராவில் பேச்சு எழுந்துள்ளது. மகாராஷ்டிராவில், நீர்ப்பாசனத் துறை அமைச்சராக, தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த சுனில் தட்காரே உள்ளார். நீர்ப்பாசனத் துறையின் செயல்பாடு திருப்திகரமாக இல்லையென கூறி, நீர்ப்பாசனத் துறை திட்டங்கள் குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுவது என, முதல்வர் சவான் முடிவு செய்துள்ளார். மேலும், தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்தவரும், பொதுப் பணித் துறை அமைச்சருமான புஜ்பால் மீதும், ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியிலும், சவான்இருப்பதாக, தேசியவாத காங்., கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையே, முதல்வர் பிருத்விராஜ் சவான், நேற்று டில்லி செல்வதாக இருந்தது. கடைசி நேரத்தில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
ஒருங்கிணைப்பு இல்லை: பிரபுல் புகார்: காங்கிரசுடனான மோதல் முற்றியுள்ளதை அடுத்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், தன் கட்சியின் மூத்தத் தலைவர்களான, அஜித் பவார், மதுக்கர் பிச்சாத், ஆர்.ஆர்.பாட்டீல் ஆகியோரிடம், நேற்று தீவிர ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய அமைச்சரும், தேசியவாத காங்., மூத்தத் தலைவருமான பிரபுல் படேலும் கலந்து கொண்டார்.
இதுகுறித்து, பிரபுல் படேல் கூறியதாவது: நாங்கள், ஐ.மு., கூட்டணியில், தொடர்ந்து அங்கம் வகிக்கிறோம். எதிர்காலத்திலும், இந்த கூட்டணியில் நீடிப்பதை விரும்புகிறோம். மத்திய அரசுக்கு, நாங்கள் நெருக்கடி கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. அதேநேரத்தில், மத்திய அரசிலும் சரி, மகாராஷ்டிர மாநில அரசிலும் சரி. எங்களின் கருத்துக்கு, காங்கிரசார் மதிப்பளிப்பது இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பில் குறைபாடு உள்ளது. முக்கியமான விஷயங்கள், கொள்கைகள் குறித்து, கூட்டணி கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். அப்படி செயல்பட்டால், அரசை சிறப்பாக நடத்துவதற்கு, நாங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்போம். ஒருங்கிணைப்பு இல்லாததால் தான், முடிவு எடுப்பதில் தாமதமாகிறது. மகாராஷ்டிராவை பொறுத்தவரை, கூட்டணி கட்சியின் கருத்தை கேட்பதற்காக, அவ்வப்போது கூட்டம் நடத்தப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த ஒரு கூட்டமும், இதுவரை நடத்தப்படவில்லை. இவ்வாறு பிரபுல் படேல் கூறினார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்திய அரசியல் மீண்டும் 1996 ஐ நோக்கி போய் கொண்டு இருக்கின்றது. மாநில கட்சிகள் எனும் நாய்கள் இந்தியா எனும் குழந்தையை கடித்து குதற சின்னாபின்னமாக்க காத்து கிடக்கின்றன. ஆனால் இது மக்களுக்கு நல்லதல்ல. அதனால் மக்கள் அடுத்த 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் அல்லது பிஜபிக்கு வோட்டு போட்டு அவர்களை ஆள்வதற்கு வழி விட வேண்டும். இதை விடுத்து கூட்டணியில் நன்றாக அனுபவித்து விட்டு இப்போது கை கழுவும் கட்சிகளுக்கு வோட்டு போடக்கூடாது. இதை பொது மக்கள் நன்றாக உணர வேண்டும்.
எல்லா முக்கிய கருத்துக் கணிப்புக்களும் காங்கிரசின் படுதோல்வியைப் பறை சாற்றுகின்றன. இப்போதே பெரிய மாநிலங்களில் எதிலும் காங் ஆட்சியில் இல்லை (ஆந்திரா கூட கையை விட்டுப் போய்க் கொண்டிருக்கிறது) இது காங் செயற்குழுக் கூட்டத்திலேயே அதிர்வலைகளை உருவாக்கிவிட்டது. இனியும் காங் கட்சியோடு ஒட்டிக் கொண்டிருந்தாள் அடுத்த தேர்தலில் தாமும் காணாமற் போய்விடுவோம் என்ற பயம்தான் இவரை ஆட்டிப் படைக்கிறது. போதாததற்கு ராகுலும் மகாராஷ்டிரா பிரசாரத்துக்கு வந்து குடியைக் கெடுத்துவிட்டால்? தான் சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுதான் என்பதை விளங்கிக்கொள்ள பாவாருக்கு இத்தனை நாள் ஆனது வியப்பே
சரவணா, உதாரணங்கள் சொல்லும்போது சரியான உதரணமாக பார்த்து சொல்லவேண்டும். காங்கிரஸ் என்பது மாளிகையே அல்ல அது ஒரு சிறைக்கூடம். அதிலிருந்து யாரும் எளிதில் தாப்பிவிட முடியாது. அப்படி தப்ப நினைபவர்களை சி பி ஐ என்ற காவல்காரனை வைத்து மீண்டும் உள்ளே போட்டு விடுவார்கள். அதனால் தானே நம்முடைய தானை தலைவர்கூட முன்னுக்குப்பின் முரணாக பேசி தன்னுடைய ஜாலரா சத்தத்தை ஓசைபடாமல் எழுப்புகிறார்?...
Who is better in central to rule? Do you want Mamta, Yadav, Jeya , etc etc to be PM on short term basis like Devea Gowda. Please think for the nation and do not make your circle on political party basis. There is no doubt Congress govt has not met the peoples expectations but do you want to defeat them so that third grad leaders will become PM. Come on ... let us be objective.....
மத்திய அரசில் மதிப்பின்றி காலம் தள்ளுவதை விட, மாநில அரசில் ஈடுபட்டு மாநில முதல்வர் பதவியை பிடிக்கலாம் என்று கணக்கு போடுகிறார் போல இருக்கிறது. சிவசேனையும் கொஞ்சம்கொஞ்சமாக பா ஜ க வை விட்டு ஒதுங்க ஆரம்பித்திருகிறது. எங்கு பார்த்தாலும் மாநில கட்சிகள் தலை எடுக்க காரம்பித்திருகிண்டறன. இந்த நேரத்தில் பவாரும் தானுடைய பவரை காட்ட நினைக்கிறார்....
சோனி அம்மா இதுக்கெல்லாம் போய் பயபடாதீங்க. அதிகாரம் பதவி உங்களுக்கும் உங்க கூட்டணிக்கும் பங்கீட்டு முறைல தேவை. இருக்க நாள் வரை இவனுக இப்படி சுரண்டிகிட்டே இருப்பானுக. நீங்க உங்க எண்ண படி ராகுல ஜனாதிபதி பிரதமர் என இரண்டு போஸ்டும் பார்க்கிற மாதிரி பண்ணிடுங்க. தம்பி வேற எதுக்கும் தயார்னு சொல்லிக்கிட்டு இருக்கார்ல. பிரசின பண்ணுரவனுகளையும் என்ன நடந்தாலும் அமைதி காப்பவர்களையும் தம்பிக்கு உதவியாளரக்கிவிடால் பிரசின தீர்ந்தது போங்க.
பவாருக்கு ஒரு பதவி போதாது என்பதால்தானே..கிரிக்கட் வாரியா பதவிக்கு கீழ்த்தரமாய் வேலை செய்து சம்பாதித்தார். கருணாவும் இவரும் ஒன்றுதான்..என்ன..இவர் நடக்கின்றார்..அவ்ளோதான் விஷயம்..இவரை போன்றோரை வைத்துதான் இந்தியா வல்லரசாக போகின்றதாம். பீஸ் போன பல்பு..தூக்கி கடாசுவதை விட்டுவிட்டு..காங்கிரசின் விதி இதுதான்..

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.