தமிழகத்தில் கட்டுமான பணிகளுக்கான சிமென்ட் ஒரு மூட்டை விலை, 350 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் சிமென்ட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, கட்டுமானத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கட்டுமான பணிகளுக்கு அத்தியாவசிய தேவையான சிமென்ட் விலை, கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது அதிகரித்து வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு, 180 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை படிப்படியாக அதிகரித்து வந்தது.
நடவடிக்கை: சிமென்ட் உற்பத்தியாளர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, வேண்டுமென்றே சிமென்ட் விலையை அவ்வப்போது உயர்த்தி வருவதாக பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்து வந்தனர். இது குறித்து, இந்திய கட்டுநர் வல்லுனர் சங்கம் (பி.ஏ.ஐ.,) சார்பில், இந்திய சந்தை போட்டி கட்டுப்பாட்டு ஆணையத்தில் (சி.சி.ஐ.,) புகார் செய்யப்பட்டது. இப்புகாரை விசாரித்த ஆணையம், கடந்த 2009, 2010ம் ஆண்டுகளில், சிமென்ட் நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, உற்பத்தியை குறைத்து விலையை உயர்த்தியதை உறுதி செய்தன. சந்தை போட்டி விதிகளுக்கு எதிரான இந்த செயல்பாட்டுக்காக, 11 சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் லாபத்தில், 0.5 சதவீதத்தை அதாவது, 6,300 கோடி ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என, கடந்த மாதம் உத்தரவிட்டது. இவர்களுடன் சேர்த்து, சிமென்ட் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
மீண்டும் விலை உயர்வு: இந்த நடவடிக்கைக்கு பிறகும் சிமென்ட் நிறுவனங்கள், தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதாக இல்லை. தொடர்ந்து விலையை உயர்த்துவதிலேயே குறியாக செயல்பட்டு வருவதாக பல்வேறு தரப்பினரும் புகார் கூறுகின்றனர். இதில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு, இப்பகுதிக்கு மட்டும் என, தனியாக ஒரு சிமென்ட் விலையை நிர்ணயிப்பதாக கட்டுமானத் துறையினர் புகார் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த மாத துவக்கத்தில், 310 ரூபாயாக இருந்த ஒரு மூட்டை சிமென்ட் விலை, இப்போது, 350 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ""மின்சாரம் மற்றும் போக்குவரத்துக்கான செலவுகள் அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணம்'' என, உற்பத்தியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கூடுதல் செலவு: இந்த விலை உயர்வால், குறைந்த பரப்பளவில் வீடு கட்டும் நடுத்தர மக்கள், சிமென்ட் வாங்குவதற்காக ஏற்கனவே திட்டமிட்டதைவிட கூடுதலாக, 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை கூடுதலாக செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நடுத்தர, குறைந்த வருவாய் பிரிவினர் உட்பட அனைத்து தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு, சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என, கட்டுமானத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறக்குமதி செய்தால்...: தமிழகத்திலேயே உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்திலேயே விற்கப்படும் சிமென்ட் விலைதான் இப்போது உயர்ந்துள்ளது. இதில், ஆந்திராவில் இருந்து வரும் சிமென்ட் விலை, இதைவிட மூட்டைக்கு 15 முதல் 20 ரூபாய் குறைவாக உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தால், அனைத்து செலவுகளையும் சேர்த்து, ஒரு மூட்டையின் விலை 200 ரூபாய் தான் வருகிறது. இதற்காக, பங்களாதேஷ், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, 45 நிறுவனங்களை இந்திய தரநிர்ணய அமைப்பு சான்றளித்துள்ளது. மும்பை, கொச்சின் துறைமுகங்களில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதால், இவற்றை சார்ந்துள்ள மாநிலங்களில் சிமென்ட் விலை குறைவாக உள்ளது. தமிழகத்திலும் இறக்குமதி செய்தால், விலை குறைய வாய்ப்புள்ளதாக கட்டுமானத்துறையினர் தெரிவித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் சிமென்ட் விலை குறையும் என்று எதிர் பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது ஏனென்றால் கடந்த முறை ஜெயா ஆட்சியில், அதற்கு முந்தைய திமுக ஆட்சியில் இருந்த சிமென்ட் விலையை பெருமளவு குறைத்தார்.அது, மூட்டைக்கு 150 ரூபாயிலிருந்து 180 குள்ளேயே இருந்தது. திமுக ஆட்சியில் சிமென்ட்விலை உயரும் அது உண்மைதான். ஆனால் அதைவிட ஆதிமுக ஆட்சியில் சிமெண்டின் விலை ரெக்கை கட்டி பறப்பதை பார்த்தால் பயமாக இருக்கிறது, எங்கே வீடு என்பது வெறும் கனவாகி விடுமோ என்று ஏழை, பணக்காரன், நடுத்தரவாதி என்றில்லாமல் பொது மனித வாழ்க்கையில் அனைவருக்கும் உள்ள ஒரே "கனவு" வீடு. கட்டுமான பொருட்களின் விலை இப்படியே தொடர்நதால் அது உண்மையில் வெறும் கனவாகவே வாய்ப்புள்ளது. கவனிக்க வேண்டியவர்களை கவனித்து, மக்களைப்பற்றி சிந்திக்காமல், அதிக லாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு , தங்களுக்குள்ளேயே கூடிப்பேசி விலையேற்றம் செய்யும் இதுபோன்ற பணப்"பூனை"களுக்கு யாராவது மணி கட்டுங்களேன்ப்ளீஸ்
நாமே நேரடியாக ஒரு குழுவாக சேர்ந்து இறக்குமதி செய்வோம் இறக்குமதி செய்தால் ஒரு மூட்டை சிமெண்ட் 280 ரூபாய்க்கு மிகாது. உள்நாட்டில் விளயைக்குரைக்க வில்லை என்றால் மதிய அரசு இன்னும் இறக்குமதி வரி (29 %)யை குறைத்தால் உள்நாட்டு கொம்பனிகள் தானாக விலையை குறைக்க போகிறார்கள். எலாம் லஞ்சம் படுத்தும் பாடு. லஞ்சம் கொடுத்தால் வரியை குறைக்க மாட்டார்கள். நண்பர்களாக சேர்ந்து இறக்குமதி செய்து பணத்தை மிச்சப்படுத்தலாம்,
விவசாய விளை பொருட்களுக்கு உற்பத்தி் செய்த விவசாயி விலை நிர்ணயம் செய்ய முடிவதி்ல்லை.நுகர்வோருக்கும் உற்பத்தி்யாளனுக்கும் இடையில் இடைத்தரகன் நிர்ணயிக்கிறான்.
ஆனால் விவசாயத்தி்ற்கு தேவையான இடுபொருட்களுக்கு உற்பத்தி்யாளன் விலை நிர்ணயம் செய்கிறான்.
விவசாயியால் அரசியல் கட்சிகளுக்கு ஒரு லாபமும் கிடையாது.கார்பரேட் முதலாளி தான் கோடிகளில் அரசியல் கட்சிகளுக்கு அள்ளிக்கொடுக்கிறான்.
அந்த பணத்தி்ல் தேர்தல் சமயத்தி்ல் ஒரு ரொட்டித்துண்டை வீசினால் ஓட்டுப்போட தயாராக மக்கள் இருக்கும் போது இதைப்ற்றி அரசியல் வாதி்களுக்கு என்ன கவலை.
்
விக்குற விலைவாசியை பாக்கும் போது இனிமே கனவுலதான் வீடு கட்ட முடியும் ,தாறுமாறாக எகிறிக்கொண்டு இருக்கும் உணவுப்பொருட்களின் விலையை பார்க்கும் போது இனிமே கனவுலதான் மூன்று வேளையும் நல்லா சாப்பிடமுடியும் போல் இருக்கு நிஜத்துல முடியவே முடியாது .கனவுகளில் தான் இனி மக்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்ட வேண்டும்:.நனவுகளில் எதுவும் சாத்தியமல்ல என்பதுதான் நிதர்சனமான மற்றும் கசப்பான உண்மை

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.