மத்திய அரசுடனான தற்போதைய உறவு மற்றும் உட்கட்சி விவகாரங்களை கருத்தில் கொண்டு, விரைவில் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம் பெறாமல் தவிர்ப்பது என, தி.மு.க., தலைமை திடீர் முடிவெடுத்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதில்கள் பலவிதம்: பிரணாப் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அவர் வகித்து வந்த நிதியமைச்சர் பதவியை, தி.மு.க., கேட்குமா என்று நிருபர்கள் கேட்டபோது, "காலியாகப் போகும் நிதியை யாராவது கேட்பார்களா' என்று, தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்தார் கருணாநிதி. ராகுலின் அரசியல் பிரவேச அறிவிப்பு வெளியானபின், மத்திய அமைச்சரவையில் உறுதியாக மாற்றம் இருக்கும் என்ற நிலை ஏற்பட்ட போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியிடம், "அமைச்சரவை விரிவாக்கத்தில், தி.மு.க., இடம் பெறுமா?' என்ற கேள்வியை நிருபர்கள் கேட்டபோது, "அதைப்பற்றி உங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலை கூட, எனக்கு ஏற்படவில்லை. அதனால், வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்' என, தனது ஆதங்கத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினார்.
பயண வரலாறு: தமிழக முதல்வர் பதவியில் இருந்தபோது, தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளுக்கு கூட, நேரடியாக டில்லி சென்று வலியுறுத்தாத, தி.மு.க., தலைவர், மத்திய அமைச்சரவையில் அதிக அமைச்சர்களையும், நல்ல இலாகாக்களை கேட்டு பெறவும், டில்லிக்கு பயணமானது பழைய வரலாறு. தி.மு.க.,வுக்கு என ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இரு கேபினட் அமைச்சர் பதவி காலியாக இருக்கும் இந்த நிலையில், அந்த பதவிகளை வலியுறுத்தாமல் கருணாநிதி விலகிச் செல்வது, காங்கிரஸ் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்தா பட்டியல்: தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று மத்திய இணை அமைச்சர்களின் செயல்பாடுகள் மீது, அவர்களின் கேபினட் அமைச்சர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, விரைவில் நடக்கவுள்ள மத்திய அமைச்சரவை மாற்றத்தில், அவர்களுக்கு "கல்தா' கொடுக்க வேண்டுமென, பிரதமர் விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதை தெரிந்து கொண்ட அமைச்சர்கள், தி.மு.க.,வின் அதிகார மையங்களை வலுவாக பிடித்துக் கொண்டு, கட்சித் தலைமையுடனேயே அரசியல் நடத்தத் துவங்கியுள்ளனராம். 2004ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் கோலோச்சிய டி.ஆர்.பாலு, மீண்டும் மத்திய அமைச்சர் பதவியை பெறுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதில், காங்கிரஸ் மேலிடம் முட்டுக்கட்டையாக உள்ளது. மத்திய அமைச்சர் நெப்போலியனை அமைச்சர் பதவியிலிருந்து எடுக்கக் கூடாது என, அவருக்கு மத்திய அமைச்சர் அழகிரி ஆதரவு கரம் நீட்டுகிறார்.
புது சிக்கல்: ஒரு பக்கம் மத்திய அரசின் அரசியல் விவகாரமும், மற்றொரு பக்கம் ஜாதி ரீதியான பிரச்னையும், புதுக்குழப்பத்தை உருவாக்கியுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்விக்கு பின், நாடார் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் தரவில்லை; முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு பின், ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்கவில்லை என்ற குறைகளை நீக்கும் வகையில், புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது. "உட்கட்சி பிரச்னையோடு, மத்திய அரசின் தற்போதைய சூழலும் சரியாக இல்லாததால், கட்சித்தலைமை அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் பெற தயக்கம் காட்டுகிறது' என்று குறிப்பிட்ட, தி.மு.க., பிரமுகர் ஒருவர், தொடர்ந்து கூறியதாவது: சரத்பவார், மம்தா, முலாயம் சிங், தலைமையில் உள்ள மாநிலக் கட்சிகள், மத்திய அரசை ஒவ்வொரு பிரச்னைக்கும் மிரட்டிக் கொண்டு வருகிறது. எனவே, ஐ.மு., கூட்டணியை விட்டு, மாநிலக் கட்சிகள் வெளியேறும் சூழ்நிலை உருவாகினால், மத்திய அரசு கவிழும் வாய்ப்பு உள்ளது. எனவே தான் தற்போது, "உள்ளே' செல்ல தி.மு.க., தயக்கம் காட்டுகிறது.
நெருக்கடி:புதிய அமைச்சரவையில், தி.மு.க., இடம் பெற்றால், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி ஆகியோரின் ஆதரவாளர்கள் இடம் பெற வேண்டும் என்ற நெருக்கடியும், தி.மு.க., தலைமைக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு வாரிசின் ஆதரவாளர் இடம் பெற்று, மற்றொரு வாரிசின் ஆதரவாளர் இடம் பெறவில்லை என்றால், அவர்கள் இருவரும் அதிருப்தி அடைவர். குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். மேலும், மத்திய அமைச்சர்களை பெறுவதற்காகத்தான், "டெசோ' மாநாடு நடத்தப்படுகிறது என்ற வீண் பழிச்சொல்லையும், தமிழ் ஈழத்தை ஆதரிக்கும் சில கட்சிகள் பிரகடனப்படுத்தும். இதை தவிர்க்கும் வண்ணமும், வரும் லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு அதிக சீட்டுகளை வழங்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்படாமல் இருப்பதற்காகவும், அமைச்சரவை விரிவாக்கத்தில் தி.மு.க., இடம் பெறும் திட்டத்தை, தற்காலிகமாக தள்ளி வைக்கும் முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
"டார்ச்சர்' கொடுக்காதீர்கள்: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழி குற்றம் சாட்டப்பட்டுள்ளாரே தவிர, அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், கட்சியில் துணைப் பொதுச் செயலர் பதவியாவது வழங்க வேண்டும் என, கருணாநிதிக்கு, துணைவி ராஜாத்தி நெருக்கடி கொடுத்ததாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால், கனிமொழியோ, ""அப்பாவுக்கு டார்ச்சர் கொடுக்காதீர்கள். அவர் எப்போது விரும்புகிறாரோ, அப்போது பதவி தரட்டும்,'' எனக் கூறி, ராஜாத்தியின் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கனிமொழிக்கு கட்சியில் துணைப் பொதுச் செயலர் பதவி வழங்கினால், தென்மண்டல அமைப்புச் செயலர் பதவி வகிக்கும் அழகிரி, கனிமொழிக்கு கீழே பணிபுரிய வேண்டிய நிலை ஏற்படும். இதை அழகிரி விரும்ப மாட்டார். எனவே, கனிமொழிக்கு கட்சியில் பதவி கொடுப்பதில் இழுபறி நீடிக்கிறது என்கின்றனர் கனிமொழி ஆதரவாளர்கள்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்பொழுது கருணாநிதிக்கு நெருக்கடி என்பது,நாட்டின் நிலைமையோ,அல்லது பொருளாதார பிரச்சனையோ ,இல்லை பருவமழை பெய்யாததால் விவசாயிகள் கஷ்டபடுவதோ அல்லதன் குடும்ப பிரச்சனைதான்,தி மு க வில் தன் மனைவி,பிள்ளைகள்,மகள்(கனி) பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு தன் கட்சியை வைத்து ஆதாயம் தேடவும்,வழக்கிலிருந்து தப்பிக்கவும்,ஸ்டாலின்,அழகிரி,மற்றும் இருக்கும் சொந்தம் ,பந்தம் ஆகியோருக்கு பதவி தரவுமே நேரம் போதவில்லை.இதில் குடும்பத்தில் குடுமி பிடி சண்டை வேறு.இவருக்கு நாட்டின் பிரச்சனைகளை கையாள தெரிந்த அளவுக்கு குடும்ப பிரச்னையை கையாள தெரிய வில்லை என்பதே . உண்மை.பாவம் அவர் என்னதான் செய்வார்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.