திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு வரும் இந்துக்கள் அல்லாதோர், தாங்கள் வெங்கடாஜலபதி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக, இனி உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும்.
ஆந்திர மாநில அறநிலையத் துறை, இதுதொடர்பாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவின்படி, இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழையும் முன், தாங்கள் வெங்கடாஜலபதி மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக, உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு தர வேண்டும். இந்த விதிமுறை, ஏற்கனவே அமலில் இருந்தாலும், அது பல ஆண்டுகளாக கடுமையாகப் பின்பற்றப்படவில்லை. இனி, அது கடுமையாகப் பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெகனால் சர்ச்சை: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவருமான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, சில நாட்களுக்கு முன், திருமலைக்கு வந்த போது, இதுபோன்ற உறுதி மொழிப் பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்காமல், கோவிலுக்கு சென்றது சர்ச்சையை எழுப்பியது. பிறவி கிறிஸ்துவரான அவரை கோவிலுக்குள் அனுமதித்ததை, பல்வேறு அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் கண்டித்தன. இதையடுத்து, பழைய உத்தரவு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இதுதொடர்பாக, திருமலை திருப்பதி தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், ""இந்துக்கள் அல்லாதோர், கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டிய உறுதி மொழிப் படிவம், கியூ காம்ப்ளக்சில் மட்டுமின்றி, விசாரணை மையம் மற்றும் இணை நிர்வாக அதிகாரி அலுவலகத்திலும் கிடைக்கும். இந்துக்கள் அல்லாதோர், இந்த விதிமுறையை மீறினால், அவர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்,'' என்றார்.
ஆதரவாளர்கள் எதிர்ப்பு: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகனின் விஜயத்தின் போது, அவர் உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட வேண்டும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தாலும், அவர் ஏற்கனவே, 2009ம் ஆண்டில், கோவிலுக்கு வந்த போது, இதுபோன்ற படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளதால், புதிதாக படிவம் தர வேண்டியதில்லை என, அவரின் ஆதரவாளர்கள் கூறியதை அடுத்து, கோவில் நிர்வாகத்தினர் அவர் உள்ளே செல்ல அனுமதித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்து மதம் பிற மதங்களை வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லா மதங்களையும் அனைத்துச் செல்லும் சக்தியைக் கொண்டது. அதுமட்டுமன்றி all religions are supplementary to each other என்ற கோட்பாட்டைக் கொண்டுள்ளது. மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளதாக உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் என்றால், இனிமேல் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் இந்த உறுதி மொழிப் படிவத்தில் கையெழுத்திட்டுக் கொடுப்பார்களா அல்லது இதற்கு மத்திய அரசில் இருக்கும் அரசியல்வாதிகள்தான் இணங்குவார்களா? இறைவன் ஒருவரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை என்பதை இவர்களால் ஏன் உணர முடியவில்லை.
என்னுடைய நண்பர்கள் எல்லோரும் ஹிந்துக்கள் , நான் அவர்களுடன் கோயிலுக்குள் சென்றிருக்கிறேன், அவர்கள் அவர்களுடைய நம்பிகைகாக வணங்கி வரும் வரை நான் கோயிலின் ஒருபுறம் அமைதியாக உட்கார்ந்து இருப்பேன், அவர்களும் என்னோடு மசூதிக்கு வந்து இப்தார் விருந்தில் கலந்து சென்றுள்ளனர், அவர்கள் என்னோடு வந்தது மதம் மாறுவதற்கு அல்ல, எங்களுடைய நட்புகாக.... உங்கள் மதத்தை பற்றி நான் தெரிந்து கொண்டாலும், என்னுடைய மதத்தை பற்றி அவர்கள் தெரிந்து கொண்டாலும், அவரவருள் இருக்கும் பக்தியை யாராலும் அழிக்க முடியாது, விசமிகளை அடையாளம் காண கண்காணிப்பு கேமராக்களை பொருத்துங்க, அரசியல் வாதிகள் மதத்தின் பெயரால் போடும் நாடகங்களை அனுமதிக்காதீர்கள், இவ்வளவு பெரிய இந்தியாவில் இந்துக்கள் அதிகமாக வாழும் ஒரு நாட்டில் இப்படியான தன்னிச்சையான சட்டங்கள் பிளவுகளை ஏற்படுத்துமே அன்றி வேறெதுவுமில்லை.... இதனை என் ஹிந்து நண்பர்களே ஏற்றுக்கொள்ளவில்லை.... காவிக்கொடி இதற்கும் ஒரு பதில் சொல்லட்டுமே.....
இந்து மதத்தில் மத சுதந்திரம் உள்ளது. நம் மதத்தை பற்றியும் ஏன் நம் இறைவனையும் கூட விமர்சனம் செய்ய நம்மால் முடியும்.நம் கோவிலுக்கு போகவும் செய்யலாம் போகாமலும் இருக்கலாம் . நம் மதத்தை பற்றி வீதிகளில் இறங்கி நாம் பிரச்சாரம் செய்வதும் இல்லை.ஆள் சேர்ப்பதும் இல்லை.இங்கு மதம் குறித்து மூளை சலவை செய்யப்படுவதும் இல்லை.ஆனால் இந்து மதம் ,உருவ வழிபாட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டது .உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களை, கோவில் கருவறையில் அனுமதிக்கும் முன்பு உறுதிமொழி பெறுவது சரியான செயலே .
மகாவிஷ்னுவின் அவதாரமாகிய வெங்கடாசலபதி கலியுக நாயகர். அவர் எல்லா ஜீவ ராசிகள் மீதும் சமமாக அன்பு வைத்திருப்பவர். இங்கு மனிதன் அல்லாத ஜீவராசிகள் மீதும் கூட சமமான அன்பு இருக்கும் பொழுது கண்டிப்பாக அவர் மத, இன அடிப்படையில் மனிதர்களிடையில் வித்யாசம் பார்க்கமாட்டார். பின்னர் ஏன் இந்த முட்டாள்த் தனமான நடைமுறை?
ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவருமான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியும் வந்து சென்றதை சொல்லுதீக. ராசபச்சே வந்து போனதா மறந்துப்புட்டீகளே சாமி. அவரு மட்டுமில்ல. நான் போயிருந்தப்போ நிறைய ஜப்பான் காரங்களும் வந்திருந்தாங்க. திருப்பதி ஒரு காலத்துல புத்தர் கோயில்னும் ஒரு கருத்து உண்டு. ராசபக்சே எல்லாம் வந்து கும்பிட்டது அந்தக்கருத்துப்படிதான். எந்தக் கோயில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம் தான். எந்தத் தெய்வம் ஆனால் என்ன கோயில் கோயில் தான்.
உறுதிமொழி தருவது இருக்கட்டும் சென்ற மாதம் குடும்பத்துடன் முன்னூறு ரூபாய் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்யும் போதும் கடைசியில் எல்லோரையும் அடித்து பிடித்துகொண்டு முட்டி மோதி செல்ல வைக்கிறார்கள் குழந்தைகளையும் ,வயாதானவர்களையும் வைத்துகொண்டு நாங்கள் மட்டுமல்ல எல்லோரும் படும் பாட்டை சொல்ல முடியாது ஏதோ போர்களத்தில்,சினிமா தியட்டரில் முதல் நாள் படம் பார்க்க சண்டை போடுவதை போலதான் இருந்தது. தரிசனம் செய்த( செய்யும் சூழ்நிலை இருந்தால்தானே) திருப்தியே இல்லை. முதலில் கோவில் நிர்வாகத்தினர் திருப்பதியில் சன்னிதானத்திற்கு முன்பு தரிசனம் செய்ய பக்தர்களை ஆடு மாடுகளை அவிழ்த்து விடுவதை போல செய்வதை நிறுத்த வேண்டும். ஏன் மற்ற கோயில்களில் இருப்பது போன்று வரிசை எவ்வளவு நீளமாக இருந்தாலும் கடைசி வரை தரிசனம் முடியும்வரை வரிசையில் செல்ல அனுமதிக்க கூடாது? மனிதர்களை காட்டுமிராண்டிகள் போல சண்டை போட்டுகொண்டு ஏன் தரிசனம் செய்ய வைக்கிறார்கள் கோவில் நிர்வாகத்தினர் என்ன காரணம்?. திருப்பதி சென்று வரும் அனைவருமே இந்த முறையை பற்றி தங்களுக்குள் பேசி மிகவும் வருத்தபடுகிறார்கள். 50 வயதை நெருங்கும் நான் முதன் முறையாக சென்ற திருப்பதி தரிசனம் பற்றி (சந்நிதானம் அருகே செயற்கையாக நிர்வாகத்தினரால் உண்டாக்கபடும் அந்த தள்ளுமுள்ளு சூழ்நிலையை) இன்று நினைத்தாலும் மனம் நடுங்குகிறது. தினமலர் போன்ற சமூக நலனில் அக்கறையுள்ள பத்திரிக்கை இது பற்றி விசாரிக்கவேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.