""ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்து வரும், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மூன்று பேரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். இல்லையெனில், இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்தவர்கள் பொறுப்பேற்க வேண்டும்,'' என, டில்லி போலீசார் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, ""எங்களை கட்டாயப்படுத்தி, மருத்துவமனையில் சேர்ப்பதற்கு, மத்திய அரசு முயற்சிக்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,'' என, அரவிந்த் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, மத்திய அரசை எதிர்த்து, அன்னா ஹசாரே குழுவினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். டில்லி ஜந்தர் மந்தரில் அமைக்கப்பட்டுள்ள மேடையில், அன்னா ஹசாரே குழுவின் மிக முக்கிய உறுப்பினரான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த எட்டு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இவருடன், மனீஷ் சிசோடியா, கோபால் ராய் ஆகியோரும் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
போலீஸ் எச்சரிக்கை: இதையடுத்து, டில்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் திரிவேதி சார்பில், அன்னா ஹசாரே குழுவினருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், "அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக, மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, அவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். இல்லையெனில், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே பொறுப்பேற்க வேண்டும். சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதி அளித்து தான், உண்ணாவிரதத்துக்கு ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்' என தெரிவிக்கப் பட்டுள்ளது.
பரிசோதனை: இதற்கிடையே, நேற்று டில்லியில் மழை பெய்தவண்ணம் இருந்தது. ஆனாலும், ஆயிரக்கணக்கான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் உண்ணாவிரத மேடையில் குவிந்திருந்தனர். நேற்று எட்டாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் மிகவும் சோர்வாக காணப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்து இருப்பதையும் காண முடிந்தது.
மேடையில் கெஜ்ரிவால் பேசியதாவது: இரண்டு நாட்களுக்கு முன், ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்தனர். உண்ணாவிரதம் இருக்கும் எனது உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கூறி, பரிசோதித்தனர். ரத்த மாதிரியையும் வாங்கிச் சென்றனர். அதை சோதனை செய்துவிட்டு, இனிமேல் நான் உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என்றும், அவ்வாறு உண்ணாவிரதம் தொடர்ந்தால், உடல்நிலை மிகவும் மோசமடையும் என்றும் தெரிவித்தனர். உடனடியாக உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்றும் வலியுறுத்தினர்.
அனுமதிக்க முடியாது: ராம்மனோகர் லோகியா மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் அரசு ஊழியர்கள். அவர்கள் அவ்வாறு தான் சொல்வார்கள். எனது உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வர யார் நினைத்தாலும் விட மாட்டேன். ஆகவே, இனிமேல் என்னை பரிசோதனை செய்வதற்கு அரசு மருத்துவர்களை அனுமதிக்க மாட்டேன். இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை எப்படியும் முறியடித்து விட வேண்டுமென்று, ரகசியமான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வந்துள்ளன. மத்திய அரசு மிகவும் முனைப்பாக என்னை உண்ணாவிரத பந்தலில் இருந்தே அகற்றுவதற்கு, யோசித்து வருவதாகத் தெரிகிறது.
பொறுப்பு: உண்ணாவிரத பந்தலில் இருந்து என்னை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, மருத்துவமனையில் சேர்த்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வைக்கும் நோக்கில் அரசு உள்ளதாகத் தெரிகிறது. அவ்வாறு என்னை பலவந்தப்படுத்தி தூக்கிச் சென்றால், அதை தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து மீட்டு, மீண்டும் என்னை உண்ணாவிரத மேடையிலேயே கொண்டு வந்து கிடத்த வேண்டும். அதை செய்ய வேண்டியது, இங்கு கூடியுள்ள மக்களின் பொறுப்பு. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
ஹசாரே கேள்வி: உண்ணாவிரத மேடையில் இருந்த, அன்னா ஹசாரே பேசுகையில், "உண்ணாவிரதம் இருப்பது என்பது, தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம். இதை தற்கொலைக்குச் சமம் என பேசுவது சரியல்ல. அரவிந்த் கெஜ்ரிவாலை பலவந்தப்படுத்தி இங்கிருந்து தூக்கிச் செல்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அவ்வாறு செய்வதற்கு அரசுக்கு என்ன உரிமை உள்ளது. ஒருவேளை அவ்வாறு அரசு செய்யுமானால், இதே மேடையில் நான் எனது உண்ணாவிரதத்தை எக்காரணம் கொண்டும் கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்வேன்' என்றார்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இது நிறை வேறாது. ஊழல் என்பது அரசியல் வாதிகளிடம் மட்டும் இல்லை. ஊழல் என்பது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கிறது.... ஒவொருவரும் அவரவர் பதவிகேற்ப, படிப்பிர்கேற்ப... ஒவ்வொரு வகையில் ஊழல் செய்கிறார்கள்.... இது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருக்கிறது.. அனால் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது...... ஒவொருவரும் நான் ஊழல் செய்ய மாட்டேன் என்று உறுதியாகவும், சுய அறிவுடனும் சிந்தித்தல் இது சற்று குறையும்..... காலங்களுடன், நல்ல கல்வி அறிவுடனும் இந்த நிலை மாறலாம்.......
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. முதலில் மக்கள் திருந்தவேண்டும். ஊழல் பணம் மக்களிடமிருந்துதான் செல்கின்றன. ஊழல் செய்தால் தூக்கு என்று சட்டம் கொண்டுவர வேண்டும்...கணக்கில் இல்லாமல் பணம் வந்தால் ஒரு வருடம் சிறை தண்டனை .... மூன்றாம் முறை செய்தால் தூக்கு... என்று சட்டம் கொண்டுவந்தால் தான் நம் நாடு முன்னேறும்...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.