சேலம்: சேலம் மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில், ஐந்து போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். சேலம், வீராணத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் சிவகுமார்,38. அதே பகுதியில், சொந்தமாக போட் டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர், குப்பனூர் செக்-போஸ்ட் பகுதியில், வீட்டிலேயே கிளினிக் நடத்தும் மருத்துவர் ரத்தினவேல்,47, என்பவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.
10ம் வகுப்பு வரை...: நோய் குணமாகாததால்,மருத்துவரிடம் விசாரித்தபோது, அவர் சரிவர பதிலளிக்காததால் சந்தேகம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, ரத்தினவேல், மருத்துவரே இல்லை என்கிற அதிர்ச்சி தகவல், சிவகுமாருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து, வீராணம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ரத்தினவேல் 10ம் வகுப்பு படித்தவர் என்பதும், சேலத்தில், தனியார் மருத்துவமனை ஒன்றில், சிறிது காலம் வேலை பார்த்த அனுபவத்தில், வீட்டில், கடந்த ஆறு மாதமாக மருத்துவர் தொழில் செய்து வந்ததும் தெரிந்தது. அதையடுத்து அவர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தி வந்த மருந்து, மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்டவை அதிரடியாக கைப்பற்றப்பட்டன. வீராணம் போலீசார் வழக்கு பதிவு செய்து, போலி மருத்துவர் ரத்தினவேலுவை கைது செய்தனர்.
9வது படித்தவர் பல் பிடுங்கினார்: சேலம், இரும்பாலை அடுத்த நாயக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சின்னசாமி,48. இவர், பல் மருத்துவர் எனக் கூறி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், இரும்பாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், சின்னசாமி வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், ஒன்பதாம் வகுப்பு படித்த சின்னசாமி, சேலத்தில், தனியார் பல் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக வேலை செய்து வந்ததும், அந்த அனுபவத்தில், பல் சிகிச்சை அளித்து வந்ததும் தெரிந்தது. சோதனையில், மூன்று பல் செட், 12 தனி பல், மருந்துகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சின்னசாமியை கைது செய்தனர்.
பெண் மருத்துவரும் போலி: சேலம், இளம்பிள்ளையைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி ஜம்புகேஸ்வரி,44. இவர், அதே பகுதியில், பூர்ணிமா கிளினிக் என்ற பெயரில், மருத்துவத் தொழில் செய்து வந்தார். இவர், போலி மருத்துவர் என, புகார் வந்ததையடுத்து, மகுடஞ்சாவடி போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில், ஜம்புகேஸ்வரி போலி மருத்துவர் என்பது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஜம்புகேஸ்வரியை கைது செய்தனர். சங்ககிரி, வெள்ளையம்பாளையம், வடக்குத் தெருவைச் சேர்ந்த பெரியண்ணன் மகன் பழனிசாமி,47. இவர், கீர்த்தனா கிளினிக் என்ற பெயரில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரிடம், சிகிச்சை பெற்று, நோய் குணமாகாத, அதே பகுதியைச் சேர்ந்த நைனா கவுண்டர்,49, சங்ககிரி போலீசில் புகார் செய்தார். விசாரணையில், பழனிசாமி, போலி மருத்துவர் என்பது தெரிந்தது. அதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
கிராமம் கிராமமாக ஏமாற்றி...: இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம், கோரணம்பட்டியைச் சேர்ந்த பெரியதம்பி மகன் ரங்கநாதன்,42. இவர், கிராமம்தோறும் சென்று சிகிச்சை அளித்து வந்தார். இவரிடம், சிகிச்சை பெற்றும் குணமாகாத மலங்காடு கிராமத்தைச் சேர்ந்த பாலு மகன் நரசிம்மன்,21, புகார் செய்தார். இடைப்பாடி போலீசார் நடத்திய விசாரணையில், ரங்கநாதன், போலி மருத்துவர் என்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டத்தில், போலி மருத்துவர்களை கைது செய்யும்படி, எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில், மேலும் போலி மருத்துவர்கள் உள்ளனரா என்பது குறித்து, போலீசார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் ஐந்து பேர் கைது: திருப்பூரில் சட்ட விரோதமாக கிளினிக் நடத்தி, சிகிச்சை அளித்து வந்த சுகாதார ஆய்வாளர், போலி டாக்டர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். போலி டாக்டர்களில், ஜமால் அகமது, அவர் மனைவி மொபின் பேகம், ஜோசப், கருப்பையா ஆகியோர் அடங்குவர். கொடுவாய் அரசு ஆரம்ப சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியம், மருந்து வாங்க வருபவர்களுக்கு ஊசி போடுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிறு வயதில் எங்கள் கிராமத்துக்கு ஒரு டாக்டர் தினமும் சைக்கிளில் வருவார். அவரிடம் வைத்தியம் செய்து கொண்டால் தான் அங்குள்ள முக்கால்வாசிப் பேருக்கு நோய் குணமாகும். அவரை கிட்டத்தட்ட தெய்வமாகவே அங்குள்ள மக்கள் பார்த்தார்கள். எவ்வளவு வெயில் அடித்தாலும் மழை பெய்தாலும் மதியம் 12 மணிக்கு வாசலில் வந்து நின்றால் போதும். அவரை பிடித்து விடலாம். எவ்வளவு குறைவாக கொடுத்தாலும் இன்முகத்துடன் வாங்கிக்கொள்வார். ஒரு தவம் போலவே இந்தச் சேவையை செய்து கொடிருந்தார். திடீரென ஒரு நாள் போலி டாக்டர்களை போலீஸ் பிடிக்கிறது என்று செய்திகள் பரவ ஆரம்பித்தவுடன் அவர் எங்கள் ஊருக்கு வருவதை நிறுத்தி விட்டார். நாங்கள் நாதியற்றுப் போனோம். இப்போது எந்த ஒரு சுகவீனத்துக்கும். ஒரு நாள் வேலையை விட்டுவிட்டு டவுன் ஆஸ்பத்திரியில் கிடையாகக் கிடக்க வேண்டியிருக்கிறது. அரசு கண்ணை மூடிக்கொண்டு போடும் இது போன்ற சட்டங்களால் எப்போதும் பாதிக்கப்படுவது ஏழைகள் மட்டுமே. இன்றும் நாங்கள் ஒரு மருத்துவம் படித்த இளைஞனை விட அனுபவசாலியான அவர் மீது மிகவும் நம்பிக்கையும் மரியாதையும் வைத்திருக்கிறோம். அவர் என்ன படித்திருக்கிறார் என்று நாங்கள் இதுவரை கவலைப்பட்டது கூட கிடையாது. அது எங்களுக்குத் தேவையும் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் எங்களால் நிச்சயமாக சொல்ல முடியும். இருபது முப்பது லட்ச ரூபாய் கொடுத்து மெடிக்கல் சீட் வாங்கி அதிலும் தகிடுதத்தம் செய்து பாசாகி மருத்துவம் முடித்து வரும் சில அரசு அங்கீகாரம் பெற்ற கொலைகாரர்களை விட எங்கள் டாக்டர் ஆயிரம் மடங்கு மேலானவர்.
மருத்துவம் படித்த டாக்டர்கள் தங்கள் சேவையை எப்படி புனிதமாக நினைக்கிறார்களோ அதேபோல அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள போலி மருத்துவர்களை அரசாங்கத்துக்கு தெரிவிப்பதும் புனிதம்தான்.பள்ளிக்கூட மாணவி சிறுமி சுருதி மறைவிற்குப்பின் தமிழ்நாட்டில் மனசாட்சி உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பம்பரமாய் சுழன்று எப்படி அனைத்து பள்ளிவாகனங்களையும் ஆய்வுசெய்து வருகிறார்களோ அதேபோல மருத்துவ துறைக்கு மாவட்டம்தோறும் உள்ள (DMO) மருத்துவ அதிகாரிகள் லஞ்சத்தை மறந்து அவர்கள் கடமையற்றவேண்டும்.அதேபோல மெடிக்கல் ஷாப் வைத்துள்ளவர்களும் வைத்தியம் பார்ப்பதையும் பிடிக்கவேண்டும்.மேலும் பொதுமக்களும் இதுபோன்ற போலி டாக்டர்களிடம் செல்வதை நிறுத்தவேண்டும்.அதற்க்கு ஏதுவாக உண்மையான மருத்துவர்கள் வாங்கும் பீசை ஓரளவாவது குறைக்கவேண்டும்.
என்னப்பா செய்ய, மெடிக்கல் சீட் வாங்கனமுன்னா லட்ச லட்சமா செலவு செய்யணும். அதுக்குமேல 5 வருஷம் படிக்கணும். இதெல்லா முடியிற காரியமா?.. அதான் இப்படி கிளம்பிட்டோம். எதோ எங்களால முடிஞ்ச சேவை மக்களுக்கு செய்யறோம். புடிச்சா கிளினிக்கு வாங்க. இல்லன்னா கம்முன்னு போங்க. அதவிட்டுட்டு இப்படி பொழப்ப கெடுக்குறீங்களே..நியாயமா?.
படிப்பறிவில்லாத ஏழைகள் படிப்பறிவில்லாத மருத்துவர்களிடம் தான் செல்வார்கள்.....ஏனெனில் அங்கு தான் விலை குறைவு...... படித்த மருதவர்களிடம் சென்றால் அவர்கள் தீட்டி விடுவார்கள் என்ற பயமே இதற்க்கு முக்கிய காரணம்... போலி மருத்துவர்,போலி காவல்துறையினர்,போலி அதிகாரிகள் வரிசையில் போலி நீதிபதிகள் இருந்தால் நீதி பரிபாலனம் என்ன ஆவது ???????
அரசாங்கத்துக்கு ஒரு வேண்டுகோள் .இந்த மாதிரி போலி டாக்டர்களை எல்லாம் போட்டோ எடுத்து பப்ளிக் இடங்களில் எல்லாம் போஸ்டர் அடித்து ஓட்ட வேண்டும். பஸ்ஸ்டாண்டுகள் ,ஆஸ்பத்திரிகள் ,பள்ளிகூடங்கள், போன்ற பொது இடங்களில் ஒட்டி ஊரு உலகத்துக்கு தெரிய படுத்துங்கள்.அப்போதான் தப்பு பண்றவங்க கொஞ்சமாவது திருந்தணும்னு யோசிப்பாங்க.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.