"அரசியல் கட்சி துவங்குவதற்காக, மக்களின் கருத்தை அறியப் போகிறேன்' என, அன்னா ஹசாரே சொல்லியிருக்கிறார். கட்சி ஆரம்பித்து, 2014 தேர்தலிலோ, அதற்கு முன்னதாகவோ போட்டியிட்டால், மற்ற கட்சிகள் டெபாசிட் இழக்கும் படி, அவரது கட்சி அமோக வெற்றி காணும் என எதிர்பார்க்கலாம். அன்னா ஹசாரே - பிரதமர், கிரன்பேடி - உள்துறை அமைச்சர், கெஜ்ரிவால் - நிதி அமைச்சர், பிரசாந்த் பூஷண் - சட்ட அமைச்சர்! நம் நாட்டில் அமைச்சர்கள் மட்டுமே, லஞ்சம் வாங்கி வந்துள்ளதால், அன்னா ஹசாரே, தன் அமைச்சரவையை அமைந்த உடன், ஊழல் தலைதெறிக்க ஓடிப்போய், இந்து மகா சமுத்திரத்தில் விழுந்து, தற்கொலை செய்துக் கொண்டுவிடும். அன்னா ஹசாரேவுக்கு, புதிய புகழ் வந்தவுடன் கட்சி உடையும்; புதிய கட்சியும் பிறக்கும். சரி, தேசிய அளவில் லஞ்ச ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தவரைக், கிண்டல் செய்யலாமா? நியாயமான கேள்வி. பதில்களை அலசிப் பார்ப்போமே...
திடீரென்று ஒரு நாள், "ஊழலுக்கு எதிராக ஒரு இயக்கம் தேவை' என, அன்னா ஹசாரே உரக்கச் சொல்லி, ஊரைக் கூட்டி, தலைநகரில் உண்ணாவிரதம், பேரணி நடத்தி, மக்களின் கவனத்தைக் கவர்ந்தார்; உண்மைதான். ஊழலை இப்படியே சகித்துக் கொண்டிருக்கக் கூடாது; கொதித்து எழ வேண்டும் என்ற எண்ணம், மக்களிடையே உருவானது; குறிப்பாக, இளைய தலைமுறையினரிடம். இதன் காரணமாக, மத்திய அரசு, தனக்கு பணிந்து, "லோக்பால்' என்ற அமைப்பை, உடனே கொண்டு வந்து விடும். ஊழல்வாதிகள், விசாரிக்கப்படுவர், தண்டிக்கப்படுவர். பார்லிமென்டில் சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்ப்பார்த்ததுடன், சட்டத்தின் ஷரத்துக்கள் இப்படி இருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார் அன்னா ஹசாரே. அதற்காக அரசு, அவருடன் பேச்சு வார்த்தையும் நடத்தியது. பார்லிமென்ட் உறுப்பினர்களும், லோக்பால் பற்றி, விதம் விதமாக பேசி, அந்த எண்ணத்தையே நீர்த்துப் போகச் செய்தனர். கெட்டிக்கார அரசியல்வாதிகள், அப்படித்தான் உறவாடிக் கெடுப்பர்.
இதைப் புரிந்துக் கொண்ட அன்னா ஹசாரே, சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். பிரணாப் முகர்ஜி, வனவாசம் போய் விட்டார்; மன்மோகன், மவுன சாமியாகி விட்டார்; மம்தா பானர்ஜி, சரத்பவார் ஆகியோர், முரண்டு பிடிக்கின்றனர். மத்திய அரசு, மேலும் மேலும், பலவீனமாகி வருகிறது. இது சரியான நேரம். உண்ணாவிரதம் ஆரம்பிக்கலாம் என்று, ஜந்தர் மந்தர் பகுதியில் உண்ணாவிரதம் துவங்கினார் அன்னா ஹசாரே. மக்கள் கூடினர்; பெருந்தலைவர்கள் பேசினர். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும், "லோக்பால்' சட்டம் கொண்டு வராது என்பதால், தான் அரசியல் கட்சி துவங்கப் போவதாக அறிவித்திருக்கிறார் அன்னா ஹசாரே. அதாவது, தமக்கு எதிரான சட்டத்தை, அரசியல்வாதிகளான பார்லிமென்ட் உறுப்பினர்கள் கொண்டு வரமாட்டார்கள் என்பது, அவருக்கு இப்போது தான் புரிந்திருக்கிறது. களத்தில் நுழைந்த போது, அன்னா ஹசாரே, ஒரு கதாநாயகன்; சந்தேகமில்லை. "இரண்டாம் காந்தி' என்று கூட அழைக்கப்பட்டார். வெளிநாட்டு காந்தியான சோனியா, சாம, பேத, தான, தண்ட உபயங்களால், அவரை ஓரம் கட்டினார். அவரது ஏவலில், காவல் துறையும், உளவுத் துறையும் இருக்கும் போது, நினைத்ததைச் செய்ய முடியாமல் போகுமா? ஹசாரே அணியில் உள்ள கிரன்பேடி, விமானப் பயணக் கட்டணத்தில் தில்லு முல்லு செய்தார் என்ற செய்தி பரப்பப்பட்டது. அவரோ, "முதல் வகுப்புக் கட்டணம் தரத் தயாராக இருந்தவர்களிடம், அதை வாங்கினேன். சாதா வகுப்பில் பயணம் செய்தேன். மிச்சப் பணத்தை தானம் செய்தேன்' என்றார். கெஜ்ரிவால், அரசிடமிருந்து பெற்ற முன் பணத்தை தரவில்லை என்ற செய்தி கசிந்தது; அவர், அதைச் சரிசெய்தார். பிரசாந்த் பூஷண், சாந்திபூஷண் மீதும் புழுதி வாரித் தூற்றப்பட்டது. அவர்கள் விளக்கம் தந்தனர். தாம் உத்தமர்கள் தான் என்று சொல்லிக் கொள்ள முடியாத, ஐ.மு., கூட்டணிப் பெருந்தலைவர்கள், அன்னா ஹசாரே குழுவைப் பார்த்து, "நீங்கள் எல்லாரும் உத்தமர்கள் தானா?' என்று கேட்டனர். அவருக்கு ஆதரவு தந்த பாபா ராம்தேவ் , ஓட ஓட விரட்டப்பட்டார். அவர் மீதும் ஊழல் புகார்கள், கறுப்புப்பணம் என்று செய்திகள் வெளிவந்தன.
இதையெல்லாம் பார்த்தார் அன்னா ஹசாரே, "அரசியலுக்கே சக்தி அதிகம். அரசியலில் நுழையாமல், எதுவும் செய்ய முடியாது' என்று புரிந்துக் கொண்டார். இருந்த இடத்திலிருந்தே அரசியல் செய்ய முடியாது என்று நினைத்து, தலைநகரில் உண்ணாவிரதம் இருந்து, பழைய எழுச்சியை ஓரளவுக்காவது உருவாக்க, உண்ணாவிரதம் துவங்கினார். அரசியல் கட்சி துவங்க, மக்களின் கருத்தை அறியப் போவதாக அறிவித்தார். வெளியே இருந்து காரியம் சாதித்துக் கொண்டவர்கள், அரசியலுக்கு வந்ததும், காணாமல் போயினர். தமிழகத்திலேயே, இதற்கு சில உதாரணங்கள் உண்டு.
அன்னா ஹசாரே, அரசியல் கட்சி துவங்க, நினைப்பது எதற்காக? லஞ்சத்திற்கு எதிரானவர்கள் மக்கள் என்பது ஒரு பிரமை. மக்கள், லஞ்சத்திற்கு எதிராக இல்லை. கார்ப்பரேஷன் கவுன்சிலருக்கு குடிநீர்க் குழாய் இணைப்புக்காக லஞ்சம் கொடுப்பவர்களுக்கு, மின்சார இணைப்பு, வியாபார கட்டட அனுமதி, அலைக்கற்றை ஒதுக்கீடு என, எல்லாவற்றிற்கும் லஞ்சம் தருபவர்கள், ஏழைகளாயினும், பணக்காரர்களாயினும் மக்களே! முனகிக் கொண்டே கொடுத்தாலும், "காரியம் நடந்தால் சரி' என்று திருப்திப்படுகின்றனர் மக்கள். லஞ்சம் கொடுத்தும், காரியம் நடக்கவில்லையே என்ற நிலையில் தான், அவர்கள் கோபப்படுகின்றனர்; புகார் கொடுக்கின்றனர். ஆக, லஞ்சம் பற்றி மக்களின் மனப்பாங்கு, அன்னா ஹசாரேவுக்குப் புரியவில்லை."டிவி' சேனல்களின் விளம்பர வெளிச்சத்தில் மயங்கி விட்டார். பத்திரிகைகள் அந்த அளவுக்கு அன்னா ஹசாரேவை பரபரப்பு நாயகனாக்கி விடவில்லை. ஆகவே, லஞ்சத்துக்கு எதிரானவர்கள், ஹசாரேவின் பக்கம் என்ற எதிர்பார்ப்பு, ஒரு மாயையாகி விட்டது. தொழிலதிபர்களை, அமைச்சர்கள் தனியாக அழைத்து, "லஞ்சம் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்வீர்களா அல்லது அன்னா ஹசாரேவின் பின்னால் சென்று, அதீத தாமதத்தைச் சந்தித்து, காரியத்தைக் கெடுத்துக் கொள்வீர்களா?' என்று கேட்டால், "இல்லை... இல்லை அன்னா வழியிலேயே செல்வோம்' என்று சொல்ல, எத்தனை பேர் முன்வருவர்? மேலும், நாட்டில் லஞ்சம் மட்டுமே முக்கிய பிரச்னை இல்லை. தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார பற்றாக்குறை, பயங்கரவாதம், வேலையில்லா திண்டாட்டம், வேலையில் மெத்தனம், கொலை, கொள்ளை என, எத்தனையோ குற்றங்கள், பிரச்னைகள். எல்லாவற்றிற்குமே லஞ்சம் காரணம் என்று சொல்லிவிட முடியாது. ஓரளவுக்கு வேலை நடப்பதற்கு, லஞ்சம் காரணம் என்றால் தவறில்லை. இதற்காக, லஞ்சத்தை நியாயப்படுத்த முடியாது; ஆனால்,யதார்த்தத்தையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஊழலுக்கு எதிராகப் போராட்டம், உண்ணாவிரதம், மக்கள் தொடர்பு, கூட்டம் கூட்டுதல் என்றால், அதற்கும் பணம் செலவாகிறது. எக்கச்சக்கமாகப் பணம் சம்பாதித்து, கறுப்பும், வெள்ளையுமாக பணம் வைத்திருந்த மிகப்பெரிய நடிகர்களே, "வெறும் புகழால் பயனில்லை; அதிகாரமே முக்கியம். அரசியல் அதைத் தரும்' என்று நினைத்து, கட்சி துவங்குகின்றனர். போணியாகவில்லை; காசு தான் கரைந்தது. எல்லா நடிகர்களுமே, என்.டி.ஆர்., - எம்.ஜி.ஆர்.,ஆனதில்லை. அன்னா ஹசாரே, எந்த மூலைக்கு? கட்சிக்கு பணம் திரட்டும் போதே, லஞ்சத்துடன் சம்பந்தப் பட்டவராகி விடுவாரே அன்னா ஹசாரே; அப்புறம் எப்படி லஞ்சத்தை எதிர்ப்பது? இதை அரசியலில் நுழைந்து புரிந்துக் கொள்ளட்டும். பிறகு அவரே லஞ்ச ஜோதியில் கலந்துவிடுவார் என்பதால், அரசியல்கட்சிகள், அவர் கட்சி துவங்குவதை ஆதரிக்கின்றன. எம்.எல்.ஏ., - எம்.பி., வேட்பாளர்களுக்கு எங்கே போவது? நியாயமான நபர்களைத் தேடுவது கஷ்டம். அரசியல், வியாபாரம் என்றாகி விட்ட நிலையில், போட்ட முதலீட்டை எடுப்போம் என்று கொஞ்சமாக லஞ்சம் வாங்குபவர்கள், யோக்கியர்கள் என்று நினைக்க வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அப்பழுக்கற்றவர்களை தேர்ந்தெடுத்தாலும், அவர்களை சக அரசியல்வாதிகளும், ஊழல் அதிகாரிகளும் கெடுத்து விடுவர்.
ஆக, உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டுமெனில், இளைஞர்கள், அதாவது புதிதாக அரசு மற்றும் தனியார் துறையில் வேலைக்குச் சேர்ந்துள்ளவர்கள், கல்லூரிப் படிப்பை நிறைவுச் செய்யும் மாணவ, மாணவியர் போன்றோரை, ஊர் ஊராகச் சந்தித்து, அடிமட்டத்திலிருந்து கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்டு இளைஞர்களின் ஆதரவை ஊழலுக்கு எதிராகவும், நல்லாட்சிக்கு ஆதரவாகவும் திரட்டும் பணியில், அன்னா அணி முழு மூச்சாக ஈடுபடட்டும். அவரது அணியினருக்கும், அதிகார ஆசை வரக் கூடாது. மக்களிடமிருந்து எழும் எதிர்ப்புணர்வே அரசுகளைக் கவிழ்ந்திருக்கின்றன. மேலேயிருந்து வந்த சட்டங்கள், சமுதாயத்தை மேம்படுத்தி விடவில்லை. இதைப் புரிந்து கொள்ளாமல், அன்னா ஹசாரேயும், அவரது அணியினரும், நடந்துக் கொண்டால், ஏற்கனவே, உள்ள கட்சிக் கொடிகளுடன், இன்னொரு கட்சிக் கொடி சேரும். கொடிக் கம்பங்களில் ஒன்று கூடுதலாகும். உதிரிக் கட்சிகளில் ஒன்று உருவாகி, கூட்டணிகள் சேர அங்குமிங்குமாக அலையும். அரசியல்களத்தில், பத்துடன் பதினொன்றாக மாறவா, பாவம், அன்னா ஹசாரே இவ்வளவு அலட்டிக் கொண்டிருக்க வேண்டும்? அவராக முடிவெடுத்திருந்தாலும், அவரை இதற்குத் தள்ளியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் லஞ்சத்திற்கு எதிராக, கூராகச் செல்ல வேண்டிய இயக்கத்தை, முனை மழுங்கச் செய்திருக்கின்றனர் என்பதே உண்மை! Email: hindunatarajan@hotmail.com
- ஆர்.நடராஜன், கட்டுரையாளர், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நல்ல தெளிவான பதிவு. அண்ணா ஹசாரே எதார்த்தத்தை புரிந்து கொள்ளாதுதான் இந்த போராட்டம் தோல்வியில் முடிந்ததற்கு காரணம். நாம் ஒட்டு போட்டு பதவியில் ஒருவரை அமர்த்தி விட்டால் அவர் வைத்தது தான் சட்டம் என்றாகி விடுகிறது. அவரோ தேர்தலில் அவரை ஜெய்க்க வைத்த சக்திகளின் கைகூளியாகி விடுகிறார். பணத்தை வாரி இறைத்து பதவிக்கு வரும் அரசியல் வாதிகள் மக்களின் நன்மைக்காக சேவை செய்வார்கள் என்று எதிர் பார்ப்பது அறியாமை. லஞ்சத்தின் ஆணி வேறை இவர்கள் அளிக்காமல் லஞ்சத்தை ஒழிக்கிறோம் எனபது நடை முறையில் சாத்தியம் இல்லாத வேலை. எப்போது தேர்தல் செலவுகள் கட்டுக்குள் நம்மால் கொண்டு வர முடியுமோ அப்போது தான் லஞ்சம் இல்லாத அரசியல் சாத்தியம். லஞ்சம் கொடுக்க மாட்டோம் என்ற கொள்கையை மக்கள் எப்போது நாம் உணர போகிறோமோ அப்போது தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும். கொரியாவில் இது நடந்தது. லஞ்சத்துக்கு எதிராக மக்கள் தெருவுக்கு வந்தார்கள். அதே நிலைமை நம் நாட்டிலும் வர வேண்டும். கொடுப்பவர்கள் இருக்கும் வரை லஞ்சத்தை ஒழிக்க முடியாது.
ஆம் ஊழல் கேசுகளை நூறு வருடங்கள் நடத்தி ஊழல் செய்தவர் பேரன் இறந்த பிறகு தண்டனை கிடைக்கும் சூழ்நிலை உள்ளது . இதற்கு மாற்று தீர்வு என்ன ? மக்கள் வரி பணத்தை எடுத்து மக்களுக்கே கலர் டிவி லஞ்சம் கொடுத்து ஆட்சியில் அமர்கிறார்கள் . அப்படி காசுக்கு வோட்டை விற்றால் அது எப்படி ஜனநாயகம்? வீடு வாடகை விட பயம் . ஏனென்றால் சட்டம் நம்மை பாதுகாக்காது . மனை வாங்கி விடலாம் என்றால் பயம். ஏனென்றால் சட்டம் நம்மை பாதுகாக்காது. சொத்து பிரச்சினையில் கோர்ட் செல்ல பயம் . சட்டம் தன கடமையை செய்ய நூறு வருடங்கள் எடுத்து கொள்கிறது . அட விவாஹா றது செய்ய பதினைந்து வருடங்கள் தேவை படுகிறது. ஆனால் லஞ்சம் வாங்க பயம் இல்லை , ஏனென்றால் சட்டம் தன கடமையை செய்ய நூறு வருடங்கள் எடுத்து கொள்கிறது .
அன்னா ஹசாரே வின் நோக்கம் சரியானதுதான் ,ஆனால் அவர் ஊழலுக்கு எதிராக போராடுவதும் மத்தியில் உள்ள அரசை எதிர்த்து கேள்வி கேட்பதும்,அவர்களுக்கு பிடிக்கவில்லை அரசியல் கட்சி ஆரம்பித்தால் அனைத்து இந்திய இந்திரா காங்கிரஸ் பி ஜே பி மற்றும் இதர கட்சி களில் இருந்து சிலர் இதில் சேரக்கூடும் ,தற்போதைய சூழலில் .வெறும் உண்ணாவிரதத்தால் எதையும் சாதிக்க முடியாது போல் தெரிகிறது அதை எப்படியாவது நீர்த்து போக செய்துவிடுவார்கள் .எனவே ஊழலுக்கு எதிராக கட்சி ஆரம்பித்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓரளவுக்காவது பயம் ஏற்படும்.
ஜி.எஸ்.ராஜன்
சென்னை
உண்ணாவிரதம் இருந்து போராடுகிற யாருமே அரசியல் கட்சி துவங்க கூடாதா? அப்படி ஒரு புதிய கட்சி உதயமானால் தான் என்ன ? அதனால் நாட்டுக்கு, நாட்டு மக்களுக்கு என்ன பாதிப்பு வந்து விட போகிறது ? இது வரை ஆண்ட ஆட்சியாளர்கள் எல்லாம் பரிசுத்தவான்களா? அவர்களை எல்லாம் விட சிறந்த ஆட்சியை தருவார்கள் என்றால் மக்களுக்கு என்ன கசக்கவா செய்கிறது? அவர்கள் ஆட்சிக்கு வந்து ஐம்பது சதவீத ஊழல் குறைந்து விட்டால் அது வேண்டாம் என்று சொல்வீர்களா? யார் நூறு சதவீத ஊழலையும் ஒழிப்பார்களோ அவர்களுக்கு தான் நீங்கள் ஆதரவு தருவீர்களா? இத்தனை நாட்களாய் லோக்பால் மசோதாவுக்காக போராடி என்ன நடந்தது என்பதை நாடறியும். உங்கள் கூற்றுப்படி சாவது வரை போராட்டம் மட்டுமே இருக்க வேண்டுமா ? ஊழல் செய்தவனிடமே ஊழலை ஒழிக்க சட்டம் கொண்டு வா என்றால் நடக்காது என்பது தெரிந்து விட்டது. இந்த சூழ்நிலையில் அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்றால் அது வரவேற்கத்தக்க ஓன்று தானே..
திரு .நடராஜன் அவர்களே, உங்க கட்டுரை மிக சிறப்பானது என்றாலும், நடைமுறைக்கு சரியான விஷயம் யாராவது ஒருவர் ஊழலை ஒழிக்க வேண்டும்....அது அன்னா ஹசாரே யாக இருந்தால் என்ன தப்பு? ..BJP தான் புனித கட்சியா? அப்படிஎன்றால் கர்நாடாகாவில் ஆளுவது BJP யா அல்லது காங்கிரசா? ... மக்களே ஊழலில் இருந்து வெளி வர வேண்டும் என்று கூறுகிறீர்கள்... லஞ்சம் வாங்காமல் காரியம் சாதிக்க முடியும் என்றால் , லஞ்சத்தை கொடுத்து காரியம் சாதிக்க , மக்கள் என்ன பைத்தியக்காரர்களா?.... லஞ்சம் என்பது இந்திய மக்களின் ஜீன் களிலேயே ஊறி உள்ளது...நான் லஞ்சம் கொடுப்பவர்களை சொல்ல வில்லை....லஞ்சம் வாங்குபவர்களை சொல்கிறேன்... ஒழுங்கீனமும், லஞ்ச பண ஆசையும் ஒவ்வொரு அதிகார வர்க்கத்தினரையும் ஆட்டி படைக்கிறது..... அதை தடுக்க தான் லோக்பால் சட்டம்...லஞ்சம் வாங்கியதாக நிரூபிக்க பட்டால், அடிமட்ட அரசு ஊழியர் முதல் பிரதமர் வரை கூண்டில் ஏறித்தான் ஆகவேண்டும் என்று சொல்கிறது லோக்பால் சட்டம்... அதனை தான் ஹசாரே டீம் முன்வைக்கிறது... இந்தியாவிலேயே முதல் முதலில் , ஒரு கட்சி ஊழலுக்கு எதிராக உதயம் என்றால் , அது ஹசாரே கட்சியாக தான் இருக்க முடியும்.... அதற்க்கு முதலிலேயே முட்டுக்கட்டை போடுவானேன்.... அன்னா நிருபித்து உள்ளார்.... காங்கிரசும், BJP யும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று... ..இரு கட்சிகளினாலும் பிரயோசனம் இல்லை என்பதை ஹசாரே டீம் நன்றாக உணர்ந்துள்ளது தான் அதன் பலம்....இதனால் காங்கிரசுக்கு எதிரான ஓட்டுகள் பிரியுமே என்ற கவலை உள்ளது..அது காங்கிரசுக்கு சாதகமாக முடியாதா என வினவலாம்... ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்... காங்கிரஸ் வேண்டுமானால் அயோக்கிய கட்சியாக இருக்கலாம்...ஆனால் காங்கிரசுக்கு வோட்டு போட்டவர்கள் எல்லாம் அயோக்கியர்கள் அல்ல... அவர்களின் முன் இருந்த கட்சிகளில் SAFE ஆன கட்சி எது என்று பார்த்து தான் காங்கிரசுக்கு வோட்டு போட்டிருக்க கூடும்.... அதனால் காங்கிரஸ் , " BJP யின் வோட்டை தான் அன்னா பிரிப்பார் " என்று நினைக்குமேயானால் , தலை குப்புற கவிழ போகிறார்கள்.... காங்கிரசில் பெரும்பாலானோர் ஹசாரே டீம் க்கு தான் ஆதரவு அளிப்பார்கள் ...... காங்கிரசில் இருந்து 15 % வோட்டையும், BJP யில் இருந்து 15 % வோட்டையும் பிரித்து வந்தாலே போதும்..ஹசாரே டீம் பெரும் வெற்றி பெரும்....ஆனால் ஹசாரே டீம் இன்னும் மெருகேற வேண்டியுள்ளது....அவைகள் 1 . நீங்கள் குறிப்படவாறு ஊழல் மட்டுமே பிரச்சினை என்று கருத கூடாது...2 . காங்கிரசின் கொள்கையான மதசார்பின்மையை கடை பிடித்தால் காங்கிரசின் கணிசமான வோட்டுகளை பிரிக்கலாம்...3 . தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் BJP யின் கொள்கைகளை கடை பிடித்தால் BJP யின் வோட்டுகளை கணிசமாக பிரித்து கொண்டு வரலாம்... 4 . ஊழல் இன்மை, லோக்பால், தீவிரவாத எதிர்ப்பு, மதசார்பின்மை - இந்த நான்கு தூண்களிலும் தனது கட்சியை நிலை நிறுத்தினால் அன்னா டீம் க்கு வெற்றி உறுதி..... போலி மதசார்பின்மை , அதன் மூலம் ஆட்சியை பிடித்து கொள்ளை.....போலி patriotism ..அதன் மூலம் ஆட்சியை பிடித்து கொள்ளை...இது தான் நம் கட்சிகளிடையே நாம் இதுவரை பார்த்தது.... மத சார்பின்மை + patriotism + வலுவான ஊழலுக்கு எதிரான லோக்பால் = அன்னா டீம் கட்சி .....இப்படி - உண்மை / நேர்மையை கடை பிடித்தால் வெற்றி நிச்சயம்......ஆனால் அதே சமயம் அன்னா டீம் வெல்வதற்கும் அல்லது வென்றால் தனது நோக்கங்களை நிறைவேற்ற தடையாக இருக்க கூடியவை...1 . கிராமங்களில் அவர்களுக்கு போதுமான செல்வாக்கு இல்லை, அதற்க்கு அவர்களிடம் உள்ள திட்டங்கள் என்ன?.. 2 . மீடியா பவர் இல்லை...ஆங்கில மீடியாவை மட்டும் நம்பி பிரயோசனம் இல்லை... 3 . தெனிந்தியாவில் கலாம் போன்றவர்களை கூட சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும் என்று இன்னும் முடிவு செய்யாமல் தென்னிந்தியாவில் களம் காண உணர்வு இல்லாமை... 4 . அப்படியே வென்றாலும், லோக்பாலை செயல்படுத்த முடியுமா? மக்கள் அவையில் அன்னா டீம் பெரும்பான்மை பெற்றாலும், மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை இருந்தால் தானே எந்த சட்டமும் செல்லுபடியாகும்...அதற்க்கு மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க வேண்டுமே....மாநிலங்களில் இவர்களுக்கு தலைவர்கள் இருக்கிறார்களா? ....5 . இல்லைஎன்றால் இந்திய அரசியல் சட்டத்தையே மாற்ற வேண்டும்...அதெல்லாம் அன்னா டீம் ஆல் முடியாது என்பது பலவீனம்...... இப்படிப்பட்ட பலவீனங்களை பார்க்கும் போது, நீங்கள் கூறுவது போல , அன்னா டீம் வெளியில் இருந்து அரசியல் கட்சிகளுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பது சரி தான் என்று தோன்றும்....ஆனால் நமது ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளோ விடாகண்டன்கள், கொடாகண்டன்கள்.... இவர்களை வெளியில் இருந்து குடைச்சல் கொடுத்தால் , அப்போ அப்போ வேறு ஏதாவது பிரச்சினையை வைத்து, ஊழல் பிரச்சினையை திசை திருப்பி விடுவார்கள்.... ஆகவே ஹசாரே டீம் ஆட்சியை பிடிக்க முடியா விட்டாலும் குறைந்த பட்சம் நகர் புறங்களில் ஒரு 50 லோக்சபா சீட் களையாவது வெல்ல வேண்டும்....அந்த குழுவின் ஆதரவு இன்றி எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலைமை வந்தால், அது இந்திய ஜனநாயகத்தின் உண்மையான வெற்றியாக மாறும்..... ஊழல் செய்யும் பியூன் முதல் ஊழலை கண்டுக்காமல் இருக்கும் பிரதமர் வரை சட்டத்தின் கூண்டில் நிறுத்தபடும் பொன்னாள் மலர்வதற்கு ஹசாரே டீம் உறுதுணையாக இருக்கும் என்பது பல கோடி மக்களின் ஆவல்....அது என்றாவது ஒருநாள் பூர்த்தியாகும் என்ற நினைப்பில் தான் ஒவ்வொரு நல்ல இந்தியனும் வாழ்கிறான்......
@ சதாசிவன் இந்த நாட்டில் ஊழல் மட்டும்தான் பிரசினை . வேறு எந்த பிரசினையும் இல்லை .நீங்கள் சொல்லும் அனைத்து பிரசினைகளும் ஊழலில் இருந்து பிறந்தவை தான் . ஊழலை சரி செய்தால் , எல்லாம் சரி ஆகி விடும் . லோக்பாலை போலவே , இவரோட இன்னொரு மெயின் டிமாண்ட் electoral reforms . அதில் நீங்கள் சொன்ன ஊழல் ,கிரிமினல் குற்றம் சாட்ட பட்டோருக்கு , தேர்தலில் நிற்க தடை என்ற விதியும் உள்ளது . நீங்கள் சொன்ன கொலை கொள்ளை என்பது போலிஸ் செய்யும் ஊழலில் இருந்து பிறப்பது . வேலை இல்ல திண்டாட்டம் , கார்பரேட் கம்பெனிகள் கொடுக்கும் காசை வாங்கி கொண்டு , மந்திரிகள் லோக்கல் தொழில்கள் வளர விடாமல் தடுப்பதால் வருவது . இன்று ஒரு பள்ளி குழந்தை ப ஓட்டையில் விழுந்து இறந்ததே , அது rto ஊழலால் வந்த சாவு . இப்படி இந்த நாட்டின் ஒவ்வொரு கேட்டுக்கும் காரணம் ஊழல் . அண்ணாவின் முயற்சி ஒரு நல்ல துவக்கம் , நாம் அனைவரும் அதற்கு பங்கு அளிப்போம்
நமது அரசு இயந்திரம், மற்றும் அரசியல் அமைப்பு, மிகவும் பழமையானது, செயல் திறன் அற்றது, மியுசியத்தில் வைக்க வேண்டியது. இது இயங்க வேண்டும் என்றால், சிறிது லஞ்சம் தேவை படுகிறது. ஆகவே மக்களிடம் போய் லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று சொன்னால் எடு படாது. இதனை சரி பண்ணுவது சுதந்திரம் வாங்குவதை விட சிரமமானது. சுதந்திரதிட்கே காந்தி அடிகள் எவ்வளவு போராட்டம் பண்ணினார், சிறை சென்றார். மக்களும் அவர் பின்னால் சென்றார்கள். அன்னா ஹஜாரே, காந்தி அளவு உறுதி ஆனவர் இல்லை. அந்த அளவு மக்கள் ஆதரவும் இல்லை. ஆகவே அவருக்கு எது முடியுமோ அந்த அளவு குறிகோளுடன் அவர் போராட வேண்டும். இல்லை தோல்வியே மிஞ்சும்.
வேண்டுமானால் தேர்தல் சீர் திருத்தம் பற்றி போராடலாம்.
49O வை ஒட்டு இயந்திரத்தில் வைக்க சொல்லி போராடலாம். 490 வை விட குறைந்த வாக்கு பெறுபவர்கள், கட்சிகளை 5 அல்லது 10 வருடங்களுக்கு தடை சொல்ல போராடலாம்.
சின்னதாக, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காத வகையில் சீர் திருத்தங்களை கொண்டு வரலாம்.
அப்புறம் அரசு ஊழியர்களின் தேர்வு முறை பற்றி போராடலாம். (2 வருடம் ராணுவத்தில் இருந்தால்தான் அரசு வேலை என்று சொல்லலாம்.)
இப்படி சின்னதாக அரசியல் வாதிகளுடன் நேரடியாக மோதாமல், அதே நேரத்தில் மக்களுக்கு பயனுள்ளதாக போராடினால் நன்று.
வூழலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் உண்ணாவிரதங்கள் நடத்தி எதிர்பார்புக்ளிடையே பல எதிர்புகளோடு களம் காணும் ஒருவரை வாழ்த்தி வரவேற்போம். குழந்தை பெறுவதற்கு முன்பே எப்படி வளரும் என்று நினைக்காமல் நல்லவருக்கு பிறக்கும் நல்ல குழந்தை நல்ல விதமாகவே வளரும் என்று நம்புவோம்.,,ஆட்சி அமைத்தால் கட்சி உடையலாம் உடையாமல் போகவும் போகலாம். ,,வூழலில் வுளுத்து போன கட்ச்ய்களுகிடையே இற்றைய நிலையில் ஒரு புதிய கட்சி தேவை. விஜயகாந்த கட்சி ஆட்ச்சிக்கு வந்தாலும் வூழல் இருக்கும் என்பது தான் பலரது யூகம்.இருந்தாலும் புதியவர் ஒருவருக்கு வாய்ப்பளித்து பார்க்கலாமே என்று தான். ...மக்களும் லஞ்சம் கொடுத்தும வாகளிப்புகு பணம் வாங்கியும் பழக்கப்பட்டு போனதால் ....இந்த போட்டியில் அன்ன ஹசாரே வெல்லுவார என்பதும் சந்தேகமே...பிஜேபி வரலாம்...அன்ன ஹசாரே கட்சி வர வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.