சென்னை:தமிழகத்தில், கிரானைட் குவாரி முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகளுடன், முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்தியுள்ளார். விரைவில், இதுகுறித்த அதிரடி அறிவிப்பு வரும் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு கனிம நிறுவனமான டாமினிடம் இருந்து, கிரானைட் வெட்டி எடுப்பதற்கான குத்தகை பெற்ற தனியார் நிறுவனங்கள், ஒதுக்கிய அளவை விட, அதிகளவில் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது மட்டுமல்லாமல், அரசு புறம்போக்கு நிலங்களையும் காலி செய்து விட்ட விவரம், மதுரையில் கலெக்டராக இருந்த சகாயம் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
இதன்மூலம், அரசுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, அறிக்கை ஒன்றை தயாரித்த சகாயம், கடந்த மே மாதம், தமிழக தொழில் துறை செயலரான சுந்தரதேவனுக்கு அனுப்பினார்.அறிக்கையை ரகசியமாக வைத்திருந்த தொழில் துறை, அத்தகவல் ஊடகங்கள் மூலம் வெளியானதால், உடனடி நடவடிக்கையில் இறங்கியது. மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ராவும், தனிப்படைகளை அமைத்து ஆய்வில் இறங்கினார்.
20 பேர் கைது:கடந்த எட்டு நாட்களாக நடந்து வரும் இந்த ஆய்வில், சகாயம் தன் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டிருந்த, மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த கீழவளவு பகுதியில் அமைந்துள்ள, பி.ஆர்.பி., சிந்து மற்றும் ஒலிம்பஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.முறைகேடுகளை தடுக்காமல் இருந்ததற்காக, வி.ஏ.ஓ.,க்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பவம் தொடர்பாக, கிரானைட் நிறுவன ஊழியர்கள் 20க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.தொடர்ந்து, மதுரை மட்டுமல்லாமல், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில், கிரானைட் குவாரிகளில், தற்போது ஆய்வு நடந்து வருகின்றன.
கிரானைட் குவாரி முறைகேடுகளின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக, கடந்த இரு தினங்களுக்கு முன், தலைமைச் செயலகத்தில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிரானைட் குவாரிகள் மீதான, "சீல்' வைப்பு நடவடிக்கை துவங்கியது.மீண்டும் ஆலோசனைஇந்த நிலையில், நேற்று பகல், 2.15 மணியளவில், தலை மைச் செயலகத்திற்கு முதல்வர் வந்தார். அமைச்சர் சிவபதி, நீதிபதி வெங்கட்ராமன், திருவண்ணாமலை எஸ்.பி., உள்ளிட்டோர், முதல்வரை சந்தித்தனர். இதையடுத்து, கிரானைட் குவாரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில், நிதியமைச்சர் பன்னீர்செல்வம், ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் முனுசாமி, மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம், தொழில்துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, தொழில்துறை முதன்மை செயலர் சுந்தரதேவன், தமிழக டி.ஜி.பி., ராமானுஜம், அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், முதல்கட்டமாக, கிரானைட் குவாரிகள் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இழப்பு எவ்வளவு:கிரானைட் குவாரிகளை, அரசே எடுத்து நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள்; விதிமுறைகளை மீறி, அதிகளவில் கிரானைட் எடுத்துள்ள நிறுவனங்கள் மீதான நடவடிக்கைகள்; இதுவரை ஆய்வு செய்யப்பட்டுள்ள கிரானைட் குவாரிகளில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்டுள்ள கிரானைட்டின் அளவு, வருவாய் இழப்பு, அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. டெசோ மாநாடு தொடர்பாகவும், பள்ளி வாகனங்களுக்கான புதிய விதிமுறைகள் குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகள், முதல்வருடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஆய்வுக் கூட்டம், 90 நிமிடம் நீடித்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
கனிமவளங்கள் அனைத்தையும் அரசே ஏற்று நடத்தவேண்டும்.அதை வைத்து நலத்திட்டங்கள் நிறைவேற்ற வேண்டும்.மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த உத்தேசித்துள்ளதாக வாரபத்திரிக்கை ஒன்றில் செய்தி வந்துள்ளது. அதை மட்டும் முதல்வர் அவர்கள் நிறைவேற்றினால் என்னுடைய "முதல் நன்றி"யை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகமே இதைதான் எதிர்பார்கிறது.கண்டிப்பாக முதல்வர் அவர்கள் சுதந்திர தின உரையில் இதை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்போம்.
குவாரிக்கும் முதலமைச்சருக்கும் என்ன சம்பந்தம்? அதிகாரிகள் போதாதா? யோக்கியமான அதிகாரிகள் தமிழகத்தில் இல்லையா? கேட்கவே கேவலமாக இருக்கிறது. எல்லா விசயத்துக்கும் முதலமைச்சர்தான் வரவேண்டும் என்றால் அதிகாரிகளுக்கு அதிகாரமே கிடையாதா? அல்லது அமைச்சர்களால் வேலையே யோக்கியமாக செய்யாத அதிகாரிகளுக்கு கல்தா கொடுக்க முடியாதா? அல்லது கமிசன் வேண்டும் என்பதற்கு ஒரு நாடகமா?
இன்றைக்கு முதல்நாள் என்பதால் இந்த பயிற்சி. நாளைக்கு கையை மேலே உயர்த்தியபடியே 90 நிமிடம் குப்புற கிடக்கணும். நாளன்னைக்கு காருக்கு முன் காருக்கு பின் என்ற புது பயிற்சி சொல்லிதரப்படும், அதிகபட்சம் நேரம் மூச்சப்புடுச்சி தம்புடிச்சி அமைதியாக ஆடுபோல் இருப்பவர்களுக்கு மாண்புமிகு ஆடு என்ற பட்டம் தரப்படும் ( குறிப்பு இது விலையில்லா ஆடு என்று யாரும் பிடித்து செல்லக்கூடாது )
எப்ப பார்த்தாலும் ஆலோசனை நடத்தினாங்க, நடவடிக்கை எடுக்க போறாங்கன்னு சொல்றத விட இதில ஈடுபட்ட பலரில் இருவரை மேலே அனுப்புவிட்டு மீதி இருக்கரவங்கள்ட்ட இருக்கிற எல்லாத்தையும் உருவிட்டு அதை அரசு கஜானாவில் சேர்த்தால் மாநில வளர்சிக்காவது உதவும்.... இயற்கையை நாசபடுத்தாமல் இருக்க, குவாரி,மணல் அள்ளுவது,சட்டத்திற்கு புறம்பாக நீர்வளத்தை சுரண்டுவது போன்றவற்றை நிரந்தரமாக தமிழகத்தில் தடை செய்து அதற்க்கு மாற்று வழியை கண்டுபிடிக்கலாம்.....உதாரணத்திற்கு மணலுக்கு மாற்றாக உலர் சாம்பலையும் (dry ash),சுண்ணாம்பு கல்லையும் உபயோகிப்பதை கட்டாய படுத்த வேண்டும்......செய்யுமா தமிழக அரசு?????
இதை போல இந்த ஜல்லி கிரசர் தொழில் கொஞ்சம் கவனிக்கலாம், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் மண் அணை உள்ளது, இதை சுற்றி அனுமதிக்கா படாத பல கல் குவாரிகள் உள்ளது, இங்கு கல்லை உடைக்க வைக்க படும் வெடி காரணமாக பல விரிசல் வந்து தற்சமயம் அணைக்கட்டு உடையும் அபாயம் உள்ளது, ஒரு வேளை அணை கட்டு உடைந்தால் சுமார் நாலு முதல் ஆறு மாவட்டம் பாதிக்க படும், பெரிய உயிர் இழப்பு மற்றும் தேசிய பேர் இழப்பு வரும், அரசு கண்டு கொள்ளுமா,,

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.