சென்னை:""டெசோ' மாநாட்டில் இலங்கைத் தமிழர்களுக்காக மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறு என்ன செய்ய வேண்டும்?'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பினார்.
சென்னையில் நேற்று நடந்த, "டெசோ' மாநாட்டில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் என்னால் தான் ஏற்படும் என்று, இங்கே பேசினார்கள். பல தலைவர்கள் இருக்கும்போது, யாராலும் முடியாதது, உங்களால் முடியும் என்று பேசியது, என்னை உற்சாகப்படுத்துவதாக இருந்தாலும், எல்லாரும் சேர்ந்து தான், அதை நிறைவேற்ற முடியும்.இலங்கைத் தமிழர்கள் அனாதைகளாக விடப்பட்டுள்ளனர். ஒரு தாய் பிள்ளைக்கு செய்யும் கடமையைப் போல, அவர்களுக்கான உரிமையை பெற்றுத் தர, தமிழக மக்களை தயார்படுத்த வேண்டும். அந்த கடமையை நிறைவேற்ற, "டெசோ' அமைப்பின் சார்பில், 10 நாட்கள் தமிழகம் முழுவதும் தொடர் பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதில், ஈழத்தமிழரின் அவல நிலை, அவர்களுக்கு தர வேண்டிய பாதுகாப்பு, நீட்ட வேண்டிய உதவிக்கரம் குறித்து பேசி, தமிழக மக்களின் பேராதரவை பெற்றுத் தர வேண்டும்.
இலங்கை பிரச்னையில், இந்திய அரசு தனது அழுத்தத்தை தர வேண்டும் என, இங்கு பேசிய பலரும் எடுத்துரைத்தனர். அண்டை நாடான இலங்கையில் அமைதி, சமத்துவம் நிலவுவதற்கான கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. பல்வேறு தேசிய இனம், மதம், மொழி உள்ளடக்கிய நம் நாட்டின் மத்திய அரசும், கண்டும் காணாமல் இருக்கிறது. தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை மாறி, ஈழத்தமிழ் மக்கள், அரசியல், பொருளாதாரம், பண்பாட்டை மீட்டெடுத்து, சமத்துவம் பெற, மத்திய அரசு முழு மூச்சோடு செயல்பட வேண்டும். இலங்கைத் தமிழ் மக்கள் தாங்கள் விரும்பும் அரசியல் தீர்வை, தாங்களே முடிவு செய்யும் வகையில், அவர்களுக்கு முழு உரிமை வழங்க, மத்திய அரசு ஐ.நா., மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, மாநாட்டில் தீர்மானத்தில் நிறைவேற்றியுள்ளோம். இதை தவிர, வேறு என்ன அழுத்தம் வேண்டுமென்று எனக்கு தெரியவில்லை.
மாநாட்டின் வெற்றி என்பது எவ்வளவு பேர் கூடினர்; எத்தனை நாள் நடந்தது; எவ்வளவு மணி நேரம் நடந்தது என்பதல்ல. நாம் நிறைவேற்றும் தீர்மானம் மூலம், தமிழ் ஆர்வம் கொண்ட அத்தனை பேரும், அழுத்தம் கொடுத்து, இந்த தீர்மானத்தை வலுப்பெறச் செய்தால், நாம் காணுகின்ற கனவு நிச்சயம் நிறைவேறும்; இலங்கைத் தமிழர்களின் அல்லல் உடனடியாக தீரும்."ஏன் ஈழ நாடு உடனடியாகப் பெறவில்லை' என்று கேட்கிறார். காயமுற்றவர்களுக்கு, முதலுதவி செய்வதை போல, "டெசோ' மூலம் தேவையான முதல் உதவியை, இலங்கை சகோதரர்களுக்கு நாம் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து, அடிக்கடி சொல்வதை போல், நான் என் வாழ்நாளில், நான் கண்டு கொண்டிருக்கிற நிறைவேறாத கனவு நிறைவேற, நிச்சயமாக போராடுவேன்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்தியாவை இலங்கை அரசு ஏமாற்றியது: கருணாநிதி குற்றச்சாட்டு: சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டலில், "டெசோ' அமைப்பு சார்பில், "ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு' ஆய்வரங்கம் நேற்று நடந்தது.
ஆய்வரங்கத்தை துவக்கி வைத்து, கருணாநிதி பேசியதாவது:கடந்த 25 ஆண்டுகளாக, எரிந்து கொண்டிருக்கிற, ஈழத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில், அதிகப்படியான தாமதம் செய்வது, மேலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அங்கு, மொழி, கலாச்சாரம் என்ற அடிப்படையில், அடக்கு முறைகள் நடைபெற அனுமதிக்கக் கூடாது. சிறுபான்மை மக்கள், பெரும்பான்மையான மக்களின் அடக்கு முறைக்கு ஆளாகக் கூடாது.ஈழ தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமான ஆதரவை, தி.மு.க., அளித்து வருகிறது. இனிமேலும், தொடர்ந்து அவர்களுக்கு, எப்போதும் உறுதுணையாக இருப்போம். தமிழகத்தில் 25 ஆண்டுகளாக அகதிகளாக இருக்கும், இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வேண்டும்.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக, இரண்டு முறை ஆட்சியை இழந்தோம்; மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினோம். இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரின் போது, அங்கு ரத்தம் சிந்துவதை தடுக்கவும், இந்தியா தலையிடக் கோரியும், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நான் மேற்கொண்டேன்.
இலங்கை அரசு மற்றும் இந்திய வெளியுறவுத் துறை உத்தரவாதம் அளித்த பின், அதன் நகல் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போர் முடிவுக்கு வந்ததாக நினைத்து, உண்ணாவிரதத்தை நான் முடித்துக் கொண்டேன். இந்த விஷயத்தில், இலங்கை அரசு, இந்தியாவை ஏமாற்றி விட்டது.இலங்கையில் போருக்கு முன்பும், பின்பும் தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். அவர்களுக்கு சட்ட உரிமைகள் மறுக்கப்படுகின்றன. தமிழர்களின் இருப்பிடங்களில், அவசர நிலையை பிரகடனப்படுத்தியது போல, ஒரு நிலையை இலங்கை ராணுவம் உருவாக்கி வருவது, வேதனை அளிக்கத்தக்கது. சமீபத்தில், ஜெனீவாவில் இயற்றப்பட்ட தீர்மானத்தின்படி, போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, மறு குடியமர்த்தல், நிவாரணம், புனர்வாழ்வு ஆகியவற்றில் அவசர தீர்வு காணப்பட வேண்டும். இடைக்கால தீர்வாக, உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, தமிழர்கள் நிம்மதியாக வாழ, வழிவகை செய்ய வேண்டும். சொத்துரிமை, கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். நிரந்த தீர்வாக, நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வரும், அரசியல் தீர்வு காண வேண்டும்.இவ்வாறு கருணாநிதி பேசினார்
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் எம்.பி., சமாஜ்வாதி எம்.பி., ராம்கோபால் வர்மா, தேசிய மாநாடுக் கட்சியின் பொதுச்செயலர் ஷாரிக் எம்.பி., தேசியவாத காங்கிரஸ் நிர்வாகி கோவிந்தராவ் அடிக், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் அழகிரி, ராஜ்யசபா எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கை தமிழ் எம்.பி.,க்கள் புறக்கணிப்பு:"டெசோ' மாநாடு ஆய்வரங்கத்தில், பங்கேற்று, தங்களுடைய கருத்துக்களை வலியுறுத்துவார்கள் என எதிர்பார்த்த, இலங்கையை சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.,க்கள் மற்றும் அதன் தலைவர்கள், ஆய்வரங்கை புறக்கணித்தனர். "டெசோ' மாநாட்டில் நிறைவேற்றும் தீர்மானங்கள் குறித்து, ஆலோசனை நடத்துவதற்காக, ஆய்வரங்கம் நேற்று காலையில் நடந்தது. இதில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த மாவை சேனாதிராஜா எம்.பி., யோகேஸ்வரன் எம்.பி., சுமந்திரன் எம்.பி., சரவணபவன் எம்.பி., மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வருவர் என்றும், அவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, சில ஆலோசனைகளை கூறுவர் என, தி.மு.க., தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், அவர்களில் ஒருவர் கூட, நேற்று நடந்த ஆய்வரங்கத்திற்கு வரவில்லை. இதனால், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் "டெசோ' மாநாடு குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2 G - வழக்கில் ........ சிறையில் இருந்து விடுதலையான ...... சிறை பறவை (கனி) ......சிறையில் பூத்த சின்ன ரோஜா ........ மற்றும் ...... சித்தப்பு .......(ஆ.ராசா) ....... விடுதலையான சந்தோசத்தை ........ 2 G - தலைவர்களுடன் ... கொண்டாடவே ... மஞ்ச துண்டு ........ செய்த தடா புடல் விருந்து ....... டெசோ மாநாடு ............
சோனியாவுக்கு தலை வலித்தால் iodex எடுத்துக்கொண்டு ஓடும் நீங்கள் - தமிழர்கள் லட்சம் பேர் கொல்லப்பட்டபோது நீங்கள் என்ன எந்த தோட்டத்தில் பூ பரித்துக்கொண்டு இருந்தீர்கள். உங்கள் மகளுக்கோ மகனுக்கோ ஒரு சொக்கா எடுக்கணும்நா எங்க செலவுலே டெல்லிக்கு போவீங்க - உங்களுக்கு ஒரு மாநாடு வேறு - நீங்கள் சாதித்ததை விட சாகடித்தது அதிகம். ஜெய் ஹிந்த்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.