உலக அளவில், பிரபலமான மாநகரம் சென்னை. அதில், எங்கு நோக்கிலும் சுகாதாரப் பிரச்னை. நடைபாதைகள் கூட, மக்கள் பாதுகாப்பாக நடந்து செல்லும் நிலையில் இல்லை.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் அல்ல, வெளிமா நிலங்களில் இருந்தும், தினமும், ஆயிரக்கணக்கான மக்கள், வேலை தேடியும், பணி நிமித்தமாகவும் சென்னைக்கு வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கட்டமைப்பு வசதிகள் இல்லை.
ஒரு தெருவில், 40 வீடுகள் இருந்த நிலை மாறி, தற்போது, 400 வீடுகள் வந்து விட்டன. விதிமீறல் கட்டடங்களும் அதிகம். ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து விட்டன. காலத்திற்கேற்ப, சாலை விரிவாக்க திட்டங்கள் செயல்படுத்தப் படாததால், நெரிசல் நிறைந்த நகரமாகி விட்டது. மாநகரை இதற்கு முன் நிர்வகித்தவர்கள், அதன் வளர்ச்சியில் அக்கறை காட்டாததை தான், தற்போதைய சென்னை, நமக்கு காட்டுகிறது.
இந்த சிக்கல்கள் எல்லாம் தீர்ந்த ஒரு நகரம் வேண்டும்; சுத்தமான, நெரிசல் இல்லாத, பசுமை நிறைந்த, புதிய மாற்றங்கள் நிறைந்த சென்னையை தான் மக்கள் விரும்புகின்றனர்; முதல்வரும் அதையே விரும்புவதால், புதிய மாற்றங்களை கொண்டு வர <உத்தரவிட்டுள்ளார்.
* குப்பை பிரச்னைக்கு, முதலில் தீர்வு காண வேண்டும். தெருவில் குப்பை இருக்கக் கூடாது. கிடங்குகளில், பிளாஸ்டிக், இரும்பு பொறுக்கி பிழைப்பு நடத்துவோர், குப்பையை கொளுத்தி விடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பைக் கிடங்குகளே இல்லாத நிலை வேண்டும். இதை கருத்தில் கொண்டே, குப்பை மாற்று திட்டத்தை செயல்படுத்த, உலகளாவிய ஒப்பந்தம் கோரி, பணிகள் நடந்து வருகின்றன. இந்த திட்டம், விரைவில் நடைமுறைக்கு வரும். அப்போது, வீட்டுக்கு வீடு குப்பை சேகரிக்கப்படும். சேகரமாகும் குப்பை, நேரடியாக தொழிற்சாலைக்கு சென்று விடும் என்பதால், குப்பை பிரச்னை அறவே தீரும்.
* வீடு கட்ட கடைக்கால் போடும்போதே, திட்ட வரைமுறைப்படி கட்டுமானப் பணிகள் துவங்குகிறதா, விதிமீறல் இருக்கிறதா என, ஆரம்ப நிலையிலேயே கண்காணிப்பது அவசியம். அவ்வாறு செய்தால், விதிமீறல் கட்டடங்களைத் தடுக்க முடியும்.
* அடுத்தது, போக்குவரத்து நெரிசல். இதற்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சாலையோர ஆக்கிரமிப்புகளை அறவே அகற்ற வேண்டும். தேவைக்கேற்ப சாலை விரிவாக்கம் அவசியம். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையில், நடைபாதை வசதி, சைக்கிள் செல்ல தனி பாதை வேண்டும். நீண்ட காலம் உழைக்கும் தரமான சாலை வேண்டும்.
முதற்கட்டமாக, 60 முக்கிய சாலைகள், அனைத்து வசதிகளுடன் உலகத்தரத்திற்கு மாற்றவும், 1,084 சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக மாற்றவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. விரிவாக்கப் பகுதிகளில், ஒருங்கிணைந்த சாலை பணி நடந்து வருகிறது.
நீண்ட காலம் தாக்குப்பிடிக்க, பிளாஸ்டிக் கலந்து, சாலைகள் அமைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நடைபாதைகள், "ஸ்கைவாக்' அளவில், நவீனமாக்கப்பட உள்ளன. பல இடங்களில், மேம்பாலங்கள், சுரங்கப் பாதைகள் புதிதாக கட்டப்பட உள்ளன. தேவையான மாநகர பஸ்கள் உள்ளன. மோனோ ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட, ரயில் சேவைகளும் வருவதால், போக்குவரத்து நெரிசல் குறையும்.
* அரசியல் கட்சிகள், பொதுக் கூட்டங்கள், விழாக்கள் என, சாலையை கண்டபடி தோண்டுவதையும், சாலையோரத்திலும், மைய தடுப்பிலும் தோரணங்கள், கொடிகள் கட்டுவதையும், அவை அறுந்து விழுந்து, போக்குவரத்துக்கு சவால் விடும் நிலையையும் மாற்ற வேண்டும். சுவர்களில் போஸ்டர் ஒட்டுவதால், அருவருப்பான நிலை வருகிறது. இதற்கு, விடிவு வேண்டும்.
இதை உணர்ந்து, மாநகராட்சி பல்வேறு, கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை கொண்டு வருகிறது. தீர்மானம் நிறைவேற்றி, அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது. விரைவில் அமலுக்கு வரும். அப்போது, இந்த சிக்கல்கள் தீரும்.
* சென்னை மக்களுக்கு, மெரீனா தவிர, வேறு சரியான பொழுதுபோக்கு இடங்கள் இல்லை. அதற்கேற்ப, பூங்காக்கள் அமைப்பது அவசியம். விரிவாக்கப் பகுதியில், அனைத்து வசதிகளுடன் கூடிய, 100 பூங்காக்கள், 30 கோடி ரூபாயில் உருவாகின்றன. ஏற்கனவே உள்ள பூங்காக்களை மேம்படுத்த, "மக்களோடு மாநகராட்சி' எனும் திட்டத்தில், தனியாரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். திறந்தவெளி நிலங்களும், பூங்கா, விளையாட்டுத் திடல் என, சிறப்பு கவனம் செலுத்துவதால், சென்னை, பசுமை நகராக மாறும்.
* மழை நீர் கால்வாய் அரைகுறையாக நிற்பது உண்மை தான். மழைக்காலத்தில், பெரும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப் படாத நிலை வேண்டும். மழை நீர் கால்வாய் பணியை விரைவில் முடிப்பதோடு, கால்வாயோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் அவசியம். ஆக்கிரமிப்பு குடிசைகளை கணக்கெடுக்கும் பணி துவங்கியுள்ளது. மற்ற பணிகளும் முடுக்கிவிடப் பட்டுள்ளன.
* பொது கழிப்பிடங்கள் நோய் பரப்பும் இடமாக இருக்கக் கூடாது; நவீன முறைக்கு மாற வேண்டும். அதற்காக, கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் முறையில், ஐந்தாயிரம் இடங்களில், நவீன கழிப்பிடங்கள் அமைக்கப்பட உள்ளன.
* பாதுகாக்கப்பட்ட குடி நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஏற்கனவே, மெட்ரோ குடி நீர் கிடைக்கிறது. அதில், "குளோரின்' அளவு உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் இடங்களில், தரமான அடக்க விலை உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன.
* சென்னை மாநகரை மேம்படுத்த, பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு தேவை; அதற்கேற்ப, மாதம் தோறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டி, பல்வேறு தீர்வுகளுக்கு முயற்சி மேற்கொள்ளப் படுகிறது.
* பாதுகாப்பு கருதி, வணிக வளாகங்கள், கடைகள் அனைத்திலும், கண்காணிப்பு கேமரா கட்டாயமாக்கப்படுகிறது.
* தெரு விளக்குகள் அனைத்தும் செயல்படும் நிலை வேண்டும். அவை அனைத்தும், மின் சிக்கன விளக்குகளாக மாற்றும் பணி துவங்கி உள்ளது.
* கூவம், தேம்ஸ் நதி போல் மாற வேண்டும்; பக்கிங்காம் கால்வாயை, சீரமைக்க வேண்டும். இதில், முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். நிச்சயம் மாற்றம் வரும்.
சென்னை மாநகரம், மக்கள் நிம்மதியாக வாழும் நிலையில் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை, ஒரேயடியாக நான் மறுப்பதற்கில்லை. முதல்வர் ஆலோசனை, உத்தரவுப்படி, மாநகர மேம்பாட்டிற்காக பல்வேறு சிறப்புத் திட்டங்கள் துவங்கப்பட்டு உள்ளன. இதன் பயன், முழுமையாக கிடைக்க, ஓரிரண்டு ஆண்டுகள் ஆகும்.
நான் சென்னை வாசி என்பதோடு, மாநகர மேயராக இருப்பதால், மாநகர மேம்பாட்டில் எனக்கும் மிகுந்த அக்கறை உண்டு. குப்பை பிரச்னை; நெரிசல் பிரச்னை இல்லாத, சுத்தமான, மக்கள் விரும்பும் மாநகராக, சென்னை மாறும். மக்கள் வியக்கும் நிலை வரும்.
கட்டுரையாளர், சென்னை மாநகராட்சியின் மேயர்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
ஒவ்வொரு தனி மனிதனும் தன் சுற்றுப்புறத்தின் மீது அக்கறை காட்டினால் ஒழிய எழில்மிகு சென்னை சாத்தியம் இல்லை. தனது வீட்டுக்குள்ளே சந்தனத்தையும் ஜவ்வாதுவையும் போட்டு மணக்கச் செய்துவிட்டு , கழிவு நீரை தெருவில் ஓடவிடும் எத்தனையோ மனிதர்களை நான் நேரிலேயே பார்த்திருக்கிறேன். சுயநலம் போற்றும் இவர்கள் மனம் திருந்த வேண்டும். ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்கள். பொது சுகாதாரம் இல்லாத நிலையில் நீங்கள் மட்டும் சுகமாக வாழ்வது சாத்தியமில்லை. தேவைக்கு அதிகமாக சொத்து இருந்தாலும் கூட நம் அன்றாட வாழ்க்கை எல்லா தரப்பினரையும் சார்ந்தே உள்ளது. நீங்கள் மட்டுமே நலமுடன் வாழ்வது சாத்தியமில்லை. பொதுநலம் போற்றுங்கள். நிம்மதியாக வாழுங்கள்.
சியாமளா வெங்கடராமன் சென்னை
சிங்கப்பூர் , யு கே , போன்ற நாடுகளை போல் பாரபட்சமின்றி குப்பை போடுபவர்களையும் , ரோடுகளை ஆக்கிரமிப்பவர்களையும் தளத்திலேயே அபராதம் விதித்தால் நாளடைவில் அனைவரும் பயத்தினால்
திருந்துவர் .சென்னையும் அழகாக மாறும் .சென்ற அம்மா ஆட்சியில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை
அமுல் படுத்தியதை போல் கட்டாயமாக்க அனைத்து வார்டு கவுன்சிலர்களுக்கும் ஆணை பிறப்பித்தால்
மக்கள் பயந்து கொண்டு செயல்படுத்துவார்கள்
நடைபாதை வாசிகளை அப்புறப்படுத்துங்க முதலில். பாதி சென்னை சுத்தம் ஆகும். நடைபாதை கடைகளை அகற்றுங்கள் ,நாட்டுப்புரத்துலே பிளைக்கவளி இல்லீன்னு சென்னை வராங்க. அவுக தான் மேக்சிமம் குப்பை சேர்க்கிராக , அழகாண சென்னை அலங்கோலமானதுக்கு இவுகளும் குடிகாரங்களும் அரசியல் வாதிகளுமே முக்கிய காரணம். ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு roudi kuuttaththaiye வச்சுருக்காக சினிமா பானிலே. இதெல்லாம் ஒழிஞ்சாலே போரும் சென்னை நன்னா இருக்கும்
எல்லாம் சரி ஆனால் நடைமுறைக்கு சாத்தியமா, துணிச்சல் இருந்து___ பணம் அப்பொறும் என்கிற மனம் இருந்தால் நிச்சயமாக் எதையும் செய்து முடிக்கலாம், ஆனால் இன்றைய அரசியலில் அது முடியாது, இவருக்கு செய்யவேணும் என்கிற ஆசை இருக்கு ஆனால் முடியாது. மேயர் நினைத்தால் நடத்தி காட்டலாம். தலைமை செயலகம் அருகில் இருக்கும் குடிசைகளால் காலையில் அந்த ரோடு ஒரு பெரிய toilet மாதிரி ஆயிடும், அங்கு வசிக்கும் மக்களும் தமிழர்கள் எல்லோரும் தங்களது குழந்தைகளை ரோட்டிலேயே மலம் கழிக்க விடுகிறார்கள், பிறகு வழில வெத்தலை போட்டு மேன்னுகொண்டு ஓரிரண்டு பெண்கள் கையில் துடபதை ஆட்டிக்கொண்டு மெதுவாக அந்த பக்கம் ஒரு ரவுண்டு வந்து ஒரு மதிரிய முகடஹி சுளிக்கிகொண்டு, தேய்வில் நாஸ்தி பண்ணி இருக்கும் மலஜலன் galai பெருக்கி தள்ளி ஒரு கூடையிலே போட்டு அல்லது தள்ளு வண்டிலே போட்டு அப்புற படுத்துவர். இந்த கொடுமை எந்த நாட்டிலயும் கண்ணால பாக்க முடியாது, ஏன் அங்க தான தலைமை செயலகம் இருக்கிறது, அது வழியாகதானே முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளும் சொகுசு கார்களில் வேகமாக போகிறார்களே, அவர்களை விட கொடுமை நீதி அரசர்கள் அந்த வழியாகத்தான் போகவேண்டும் போகிறார்கள் அதே வழில தான். செல்லும் சுழலும் சிகப்பு விளக்கு பொருத்திய இ ஆ பா அதிகாரிகளுக்கு பஞ்சம் இல்லை. இவர்கள் கண் முன்னால் இந்த கொடுமை,, சுகாதார கேடு இன்றைக்கும் இருக்கு, இதை முதலில் சரி செயட்டும் பார்க்கலாம், இவர்களது செல்வாக்கு என்ன ன்று தெரியும் , ந வ ரமணன்.. CA US
சைதை துரை அவர்களே இங்கே தினமலர் வாசகர்கள் கூறி இருக்கும் அனைத்து குறை களையும் ஆலோசனைகளையும் தயவு செய்து இதற்கான நேரம் ஒதுக்கி பொறுமையாக படிக்கவும். அநேக நண்பர்கள் நல்ல ஆலோசனைகளை முன் வைத்து இருக்கிறார்கள். குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் இல்லை. குற்றங்களை மறந்து நடந்தவைகளையும் மறந்து இனியாவது நல்லது செய்ய நினைத்து அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டுகிறோம். தமிழகத்தின் முன்னேற்றத்திலும் சென்னையின் வளர்சிப்பனியிலும் உண்மையிலேயே அக்கறை இருப்பின் மக்களின் இந்த கமெண்ட் களை படித்து ஆவன செய்யவும். எடுப்பீர்கள் என்கிற நம்பிக்கை இல்லை எனினும் வரும் நாடாளு மன்ற தேர்தலை மனதில் வைத்து நடந்து கொள்ளவும். இல்லையேல் தோல்வி நிச்சயம்.40 க்கு 40 இல்லை. 40 க்கு 4 கிடைப்பதே அரிதாகிவிடும்.... உசாரய்யா உசார்......
எங்கள் திருச்சி மாநகராட்சிதான் மோசமான நிர்வாகம் உள்ளது என்று நினைத்தால் வாசகர்களின் கருத்துகளில் இருந்து திருச்சி பரவாயில்லை என்று தோன்றுகிறது. பொதுவாக அனைத்து மா நகராட்சிகளிலும் இதுதான் நிலைமையாக இருக்கும்.அடிப்படை வசதிகள் எப்பொழுது சரி செய்யபடுகிறதோ அப்பொழுதே பிரச்சினைகளின் தாக்கம் வெகுவாக குறையும் என்பதை உணர்ந்து அரசு இனிமேலாவது மாநகராட்சிகளின் செயல்பாட்டில் கவனம் செலுத்தினால் மட்டுமே மக்களின் ஆதரவை பெற முடியும்....

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.