நான் புதுக்கோட்டை ஆளு. சினிமா டைரக்டராகணும்கற கனவோடு, 1995ல் சென்னைக்கு வந்தேன். அதுவொரு அடை மழைக்காலமா இருந்ததால, தெருவெல்லாம் நச நசன்னு சேறும் - சகதியமா இருந்துச்சு. அக்கம் பக்கத்துல யாருமே முகம் கொடுத்துப் பேசல. எல்லாருமே ஏதோவொரு அவசரத்துல இருந்தாங்க. நான் கற்பனை செய்து வைத்திருந்ததை போல இல்லாம வேற மாதிரி இருந்ததாலே "சே...என்ன ஊரு இது...'ன்னு வெறுத்துப் போய் சொந்த ஊருக்கே கிளம்பலான்னு இருந்தேன். ஆனா சினிமாவுல ஜெயிக்கணுமேங்கிற வைராக்கியம் என்னை கட்டி போட்டிருச்சு.
இங்க, எல்லாருமே "இதயம் சுமக்கும்' எந்திரமா மாறிப்போயிருக்காங்க. எல்லாத்துக்குமே அவசரம். ஆம்புலன்ஸ் பின்னாடியே "பைக்'ல பறக்குறாங்க. கொஞ்சம் கவனம் பிசகினா அதே ஆம்புலன்சுல அந்த இளைஞன் போக வேண்டியதாயிடும்.
போக்குவரத்து விதிகளை மதிக்கணும்:
நாம போக்குவரத்து விதிகளை மதிக்கணும். சீனாவுல சைக்கிளை அதிகமா பயன்படுத்தறாங்க, குறிப்பிட்ட ஏரியாவில் உள்ள பாதையில எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும், சைக்கிள்ல தான் பயணம் செய்தாகணும். சைக்கிளை பயன்படுத்தறது மூலமா ஊளைச்சதை குறையும். நல்ல உடற்பயிற்சியாகவும் இருக்கும். துபாய்ல "ரூட் மேப் பிளான்' வச்சிருக்கறதால "டிராபிக் ஜாம்'கற பேச்சுக்கே இடமில்லை. அதே மாதிரி இங்கேயும் வந்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் இருக்காது.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில திடீர்னு "குழி'யை வெட்டி வச்சிடறாங்க. பாதாள சாக்கடையை மூடாம போய்டறாங்க. இதனால குழந்தைகள், வயதானவங்களுக்கு பெரும் அவஸ்தையா போயிருது. பள்ளிகளும் - கோவில்களும் இருக்குற இடத்துல தான் மதுபான கடைகள் இருக்கு. இதெல்லாம் என்னோட மனச பிசையுற விஷயமா இருக்கு. இதெல்லாம் மாறினா எழில்மிகு சென்னையை பார்க்க முடியும்.
"மழைநீர் சேகரிப்பு திட்டம்':
நான் சென்னை நகரத்துக்கு வந்த புதுசுல தான் தண்ணீர் பாக்கெட் அறிமுகமாச்சு. "இங்க தண்ணியவே காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு...!' ன்னு எங்க அம்மாவுக்கு கடிதம் எழுதினேன். கோடை காலத்துல தண்ணீர் பிரச்னை பெரும் தலைவலியா இருக்கு. கடந்த முறை அ.தி.மு.க., ஆட்சியில "மழைநீர் சேகரிப்பு திட்டம்' கொண்டு வந்தாங்க. அதனால, ஓரளவுக்கு தண்ணீர் தட்டுப்பாடு கட்டுக்குள்ள வந்துச்சு. அந்த அருமையான திட்டத்தை மறுபடியும் அரசாங்கம் கொண்டு வரலாம்கறது என்னோட அபிப்ராயம்.
சென்னை நகரத்துல என்னதான் பல அசவுகரியங்கள் இருந்தாலும் அதை நான் நேசிக்கிறேன். ஏன்னா, நான் பார்த்து பிரமிச்ச பல திரையுலக பிரம்மாக்கள், என்னோட "பசங்க, மெரினா' படங்களை பார்த்து பிரமிச்சு போய் என்னை பாராட்டினாங்க.
அதுக்கு கைமாறாகத் தான் சென்னை மெரினா கடற்கரையில் வாழும் சிறுவர்களின் வாழ்க்கையை "மெரினா' படத்தில் பதிவு செஞ்சேன். அத்துடன் "வணக்கம் வாழ வைக்கும் சென்னை...' என்கிற ஒரு பாடலையும் அதில் வச்சேன். மெரினா பீச், காந்தி மண்டபம், வள்ளுவர் கோட்டம், ஏ.வி.எம்., பிரசாத் ஸ்டுடியோ, நட்சத்திர ஓட்டல்கள்; மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள், மெகா மால்கள்ன்னு எத்தனையோ பொக்கிஷங்கள் இங்கே இருக்கு. அந்த பொக்கிஷங்கள நாம பொத்தி பாதுகாக்கணும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.