திருச்சி: செப்டம்பர், 3ம் தேதி, முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கும் அரசு விழாவுக்காக, ஸ்ரீரங்கத்தில் நேற்று, வாஸ்து நாளில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஜெயலலிதா முதல் முறை பங்கேற்ற, அரசு விழா மேடை அமைந்த, அதே ஸ்ரீரங்கம் மேலச்சித்திரை வீதியில், திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் மனோகரன், நேற்று காலை, 10 மணியளவில் பந்தலின் அடிக்கல் நட்டு வைத்தார். நிகழ்ச்சியில், கலெக்டர் ஜெயஸ்ரீ, மேயர் ஜெயா, எம்.எல்.ஏ.,க்கள் பரஞ்ஜோதி, பூனாட்சி, சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பந்தலின் அடிக்கல் நட்ட கையோடு, மேடை அமைக்கும் பணி உடனடியாக துவங்கியது.
நித்ய அன்னதானம்: கடந்த, அ.திமு.க., ஆட்சியில், 360 கோவில்களில் மதிய அன்னதானத் திட்டம் துவங்கியது. தி.மு.க., ஆட்சியில், கூடுதலாக இரண்டு கோவில்களில் மட்டும் விரிவுபடுத்தப்பட்டது. மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், 106 கோவில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, மொத்தம், 468 கோவில்களில் அன்னதானம் நடக்கிறது. வரும் நிதியாண்டில், மேலும், 50 கோவில்களில் அன்னதானத் திட்டத்தை, விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், காலை, 8 முதல் இரவு, 10 மணி வரை தொடர்ந்து, 14 மணி நேரம் அன்னதானம் வழங்கும், "நித்ய அன்னதான' திட்டத்தை, ஸ்ரீரங்கத்தில் நடக்கும் அரசு விழாவில், முதல்வர் துவக்கி வைக்கிறார். ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாளச் சாக்கடைத் திட்டத்தையும் துவக்கி வைக்கிறார். பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பயனாளிகளுக்கு வழங்கவிருக்கிறார்.
திடீர் துவக்கம் ஏன்? ஆவணி மாதம், நல்ல நேரத்தில் வாஸ்து நாளில் வீட்டுமனை உள்ளிட்ட கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டுவது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆவணி மாதம் என்றாலும், பஞ்சாங்கத்தின்படி நேற்று வாஸ்து நாள் என்பதால், அடிக்கல் நாட்டப்பட்டதாக, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரின்றி...: கடந்த, 19ம் தேதி இரவு, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்திலிங்கம், சிவபதி, மாநகர் மாவட்டச் செயலர் மனோகரன் உள்ளிட்டோர், விழா மேடை அமைக்கப்பட உள்ள இடங்களை பார்வையிட்டனர். அன்றிரவே, விழா குறித்த முதல்வரின் ஆலோசனையை கேட்க, அனைவரும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றனர். உள்ளூர் அமைச்சரும், ஸ்ரீரங்கம் தொகுதிப் பொறுப்பாளருமான சிவபதி, சென்னையிலேயே உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவு, அவசர அவசரமாக திரும்பிய மாவட்டச் செயலர் மனோகரன், நேற்று பந்தலின் அடிக்கல் நாட்டிய சம்பவம், திருச்சி அ.தி.மு.க.,வினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.