சென்னை: காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்டுவதுடன், குறுவை சாகுபடியை மேற்கொள்ள தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவை அறிவுறுத்த வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார்.
முதல்வர் எழுதியுள்ள கடித விவரம்:
காவிரி நதிநீர் ஆணையத்தை அவசரமாக கூட்டி, தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவாதிக்க வேண்டும் என, கடந்த மே, 18ம் தேதி கடிதம் எழுதினேன்; ஆனால், என் கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை. ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக, கடந்த ஜூலையில், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த 13ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி நதிநீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதுதொடர்பாக, மத்திய அரசு தன் பதிலை தெரிவிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் விதிகளின்படி, மூன்று உறுப்பினர்கள் அடங்கிய கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டப்படாவிட்டால், முடிவெடுக்கும் உரிமை, ஆணையத் தலைவருக்கு உண்டு என்பதால், அந்த விஷயம், தலைவரிடம் ஒப்படைக்கப்படும். பிரதமரே காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவராக இருப்பதால், அவரே இதுதொடர்பாக முடிவெடுக்கலாம் என, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிலேயே கூறப்பட்டு உள்ளது. எனவே, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு காத்திருக்காமல், காவிரி நதிநீர் ஆணையத்தை பிரதமர் உடனடியாக கூட்டி, இடர்ப்பாடு கால நதிநீர் பங்கீட்டு விதிமுறையை பயன்படுத்தி, தற்போதுள்ள பிரச்னையை தீர்க்கலாம்.
தண்ணீர் தரவில்லை:
கர்நாடக அரசு, 2012-13ம் ஆண்டிற்கான நீர்ப்பாசனத்திற்கு, தண்ணீர் தரவே இல்லை. ஆனால், கர்நாடகாவில் விவசாயத்திற்கு, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தேவையான தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விடாததால், மேட்டூர் அணையை இதுவரை திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால தீர்ப்பு அமலில் உள்ள நிலையில், இன்றைய (நேற்று) நிலவரப்படி, மேட்டூர் அணையில் இருந்து, 95.480 டி.எம்.சி., நீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 9.187 டி.எம்.சி., நீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
குறுவை இழப்பு:
மேலும், தேசிய நதிநீர் ஆணையத்தின், இடர்ப்பாடு கால நதிநீர் பங்கீட்டு விதிமுறைப்படி, 43.837 டி.எம்.சி., நீர், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். காவிரி டெல்டா விவசாயிகள், குறுவை சாகுபடியை இழந்து விட்ட நிலையில், தங்கள் வாழ்வாதாரத்திற்கு, குறைந்தபட்சம் ஒரு போக சம்பா சாகுபடியாவது நிகழ வேண்டும் என, நம்பிக்கை கொண்டுள்ளனர். எனவே, இடர்ப்பாடு கால நதிநீர் பங்கீட்டு விதிகளின்படி, தேவையான அளவு தண்ணீரை திறந்து விட, கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும். உடனடியாக நதிநீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என, மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். மேலும், தமிழகத்தில் குறுவை சாகுபடியை மேற்கொள்ள தண்ணீரை திறந்து விட, கர்நாடக அரசிற்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகம் சுய சார்பு அடைந்த மாநிலமாக மாற்ற தமிழக நதிகளை இணைப்பது அவசியம் மற்றும் கட்டாயம் ....அதை அதை இலக்காக கொண்டு தமிழக அரசு முன்னேறினால் வெற்றி நிச்சயம்......மத்தியில் இருப்பவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தும் அவர்களிடம் கேட்பது நம்மை நாமே ஏமாற்றும் செயல்.....அதே போல் இயற்க்கை வளங்களை அழிப்பதை தடுத்து மழை பெற கட்டாய மரம் நடும் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.....
"குறுவை சாகுபடி பிழைக்க காவிரி நீர் தேவை" அப்படியா? இரு வாரங்களுக்கு முன்னர் நடந்த சுதந்திர தின நாள் உரையில் உங்கள் தகவல் வேறாக அல்லவா இருந்தது? அனைத்து கட்சி கூட்டம் நடத்தி.... பிஜேபி..காங்கிரஸ் கட்சிகள் மூலம் கர்நாடக அரசை அணுகினால் வெற்றி கிடைக்குமே?பெங்களூர் வழக்கின் மீது காட்டும் விருப்பத்தில் பத்து சதவீதம் காட்டினால்கூட நமக்கு தண்ணீர் கிடைத்து விடுமே?உங்களுக்கு வாக்களித்துவிட்டு காவேரி நீருக்காக காத்திருக்கும் டெல்டா மாவட்ட சிறிரங்க தொகுதி மக்களுக்காகவாவது செய்யலாமே?
நீங்க ஏன் கர்நாடக முதல்வரை பார்த்து நேரில் பேச கூடாது? உங்களோட வேலை எப்பவும் கடிதம், அறிக்கையா தான் இருக்கு. நீதி மன்றங்களை நீங்கள் உட்பட யாரும் மதிப்பதாக தெரியவில்லை. சாதாரண கூலி காரன், அடி தட்டு மக்களே நீதி மன்றத்துக்கு பயப்படும் நிலையில் நீதிமன்றத்தின் செயல் பாடுகள் உள்ளன. இந்த நிலையில் யாரையும் பகையாளியாக பார்க்காமல் பங்காளியாக போய் பார்த்து பேசுவதே உகந்ததாக இருக்கும். மக்களின் மேல் அக்கறை இருப்பவர்களுக்கு இது புரியும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.