"நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் இருந்தாலும், அவர்களிடம் இருந்து, தனித்து நின்று, தொழிலாளர்கள், பாட்டாளிகள், விவசாயிகளுக்காக, "குரல்' கொடுப்பதையே, நோக்கமாக கொண்டு செயல்படுபவர்கள் நாங்கள்' என்று மார்தட்டிக் கொள்பவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின், "காம்ரேட்'கள்.
போராட்டமா, பொதுக்கூட்டமா, மாநாடா, பேரணியா... எதுவாக இருந்தாலும், மக்களின் பங்களிப்போடு, அதை நடத்த வேண்டுமென்பதற்காக, உண்டியல் ஏந்தி வசூல் செய்வது, இவர்களின் வாடிக்கை. கட்சியின் முழு நேர ஊழியரில் துவங்கி, எம்.எல்.ஏ., - எம்.பி., என கட்சிப் பணிக்காக, முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வோருக்கு, கட்சி சார்பில், சம்பளம் வழங்கப்படுகிறது. தாங்கள் பெற்ற பதவிகளுக்கு, சம்பளமாக, பெருந்தொகை கிடைத்தாலும், அதை கட்சிக்கு வழங்கிவிட்டு, தங்களின் வாழ்வாதாரத்திற்கு என, கட்சி நிர்ணயிக்கும் தொகையை, பெற்று வாழும், "காம்ரேட்'கள், அரசியல் களத்தில் வித்தியாசமானவர்களாகவே காட்சியளிக் கின்றனர்.
மாற்றத்திற்கு தயார்: பொதுவாழ்வில் எளிமையானவர்களாக, தங்களை அடையாளப்படுத்தி வந்த, "காம்ரேட்'களின் அரசியல் பயணத்தில், தற்போது ஆடம்பரம் ஒட்டிக் கொண்டதால், அவர்களின் செயல்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதர கட்சிகளைப் போல், பிரமாண்டங்களை புகுத்தினால் தான், அரசியல் களத்தில் நிலைக்க முடியும் என்பதாலோ என்னவோ, விமர்சனங்களைத் தாண்டி, இந்த மாற்றங்களை கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏற்கத் தயாராகி விட்டனர். சாதாரண மக்களோடு, பஸ்களில் பயணித்த பல தோழர்கள், தற்போது சொகுசு கார்களில் பயணிக்கத் துவங்கியுள்ளனர். குவாரி உரிமையாளர், நிலச்சுவான்தார்கள் கூட, கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்புகளை பெறும் அளவுக்கு, மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், தமிழக பிரிவு அலுவலகத்தை, நட்சத்திர ஓட்டல் பாணியில், பிரமாண்டமாக எழுப்பி வருகின்றனர் "காம்ரேட்'கள். தொழிலாளர்கள், ஊழியர் சங்கங்களில் கிடைக்கும் சந்தா மற்றும் நன்கொடைகளே கம்யூனிஸ்ட் கட்சியின் வருவாய் என்ற நிலையில், புதிதாக அமையவுள்ள, இந்த பிரமாண்ட அலுவலகம், பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.
ஆறு தளங்கள்: சென்னை தி.நகர் பகுதியில், செவாலியே சிவாஜி சாலை, "பாலன்' இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், மாநில அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த பழைய கட்டடம் தரைமட்டமாக்கப்பட்டு, 33 ஆயிரம் சதுர அடியில், ஆறு தளங்கள் கொண்ட, பிரமாண்ட மாளிகை, அங்கு எழுப்பப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட கட்டடப் பணி, தற்போது முடியும் தறுவாயில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்பற்றும், "மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வணிகத்தில் வரும் வருவாயை, கட்சிப் பணிகளுக்கு பயன்படுத்துவது' என்ற நோக்கைப் பின்பற்றி, இக்கட்டடம் கட்டப்படுவதாக கூறுகின்றனர் "காம்ரேட்'கள். மிகப்பெரிய வணிக வளாகங்களை மிஞ்சும் வகையில், ஒவ்வொரு தளமும் 5,500 சதுர அடி கொண்டதாக கட்டப்படுகிறது. வாகனங்கள் நிறுத்த வசதியாக, தரைத்தளமும் தயாராகி வருகிறது. தமிழகத்தை, "ஆண்ட' கட்சிகளுக்கு கூட, இவ்வளவு வசதியான, "மாடர்ன்' அலுவலகம் இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.
வணிக பயன்பாடு: புதிய அலுவலக கட்டடம் குறித்து, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: புதிய கட்டடத்தின் பட்ஜெட் ஒன்பது கோடி ரூபாய். இதில், இரண்டு கோடி வரை கட்சிப் பணம்; ஏழு கோடிக்கு வங்கிக் கடன் வாங்கியுள்ளோம். வங்கிக் கடனைத் திருப்பி செலுத்துவதற்காகவே, ஆறு தளங்கள் கொண்ட கட்டடத்தில், ஐந்து தளங்களை வணிக பயன்பாட்டுக்கு அளிக்கிறோம். ஒரு தளத்தில், முழுமையாக கட்சியின் மாநில அலுவலகம் இருக்கும். மேலும், கட்சியின் பழமையான நூலகத்தை புதுப்பிக்கப் போகிறோம். இதுதவிர, கூட்ட அரங்கம், மாநில செயலர் மற்றும் துணைச் செயலர், செயற்குழு உறுப்பினர்களுக்கு தனி அறைகள் அமைக்கப்படும். "தாமரை, ஜனசக்தி' பத்திரிகை அலுவலகங்கள் இயங்குவதற்கு தனி அறைகள் ஒதுக்கப்படும். டில்லி, மும்பை போன்ற நகரங்களில், இதுபோன்ற பிரமாண்டமான கட்சி அலுவலகங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதிலுமா போட்டி? தமிழகத்தில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளில், யார் பெரியவர் என்ற போட்டி, பல நேரங்களில் எழுந்துள்ளது. குறிப்பாக, தேர்தல் நேரத்தில் தொகுதி பங்கீட்டில், இந்த, "குஸ்தி' பலமாக இருக்கும். சென்னை தி.நகரில், கடந்த ஆண்டு, மூன்று தளங்கள் கொண்ட புதிய கட்டடத்தை, கட்சி அலுவலகத்திற்காக மார்க்சிஸ்டுகள் கட்டியுள்ளனர். இதில், கட்சியின் மாநில அலுவலகம் மற்றும் கூட்ட அரங்கம், கட்சி நிர்வாகிகள் தங்குவதற்கு தனித்தனி அறைகள் உள்ளன. "மார்க்சிஸ்டுகள் மூன்று அடுக்கு, கட்டடம் கட்டியதற்கு போட்டியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆறு அடுக்கு கட்டடம் கட்டி, தங்களது பலத்தை வெளிப்படுத்தியுள்ளனர்' என்கின்றனர் இதர கட்சியினர்.
- நமது சிறப்பு நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.