புதுடில்லி: எதிர்க்கட்சியினரை, தானே சமாளிக்கும் வகையில், கோபம் காட்டத் துவங்கியுள்ள காங்., தலைவி சோனியாவுக்கு, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தை, "2ஜி' வழக்கில் சேர்க்க தகுந்த முகாந்திரங்கள் இல்லை என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது, பலத்தை அதிகரித்து விட்டது. எனவே, அடுத்த லோக்சபா தேர்தலுக்கு, வியூகம் தயாரிக்கும் பணியில், தீவிரமாக இறங்கி விட்டார்.
அடுத்த லோக்சபா தேர்தல், வரும் 2014ல் நடக்கவுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் துவங்கி, தற்போது கிளம்பியுள்ள நிலக்கரி ஊழல் வரை, அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, திணறிப் போயுள்ளது. அதிலும், நிலக்கரி ஊழலில், பிரதமரின் பதவிக்கே ஆபத்து வந்து விட்டது. இதன் காரணமாக, கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சியினர், பார்லிமென்டையே, முடக்கி விட்டனர்.ஊழல் குற்றச்சாட்டுக்கு தொடர்ந்து ஆளானால், லோக்சபா தேர்தலில் பலத்த தோல்வியை சந் திக்க வேண்டியிருக்குமோ என்ற பயம், காங்., கட்சியினருக்கு ஏற்பட்டது. இதனால், காங்., தலைவி சோனியாவின் செயல்பாடுகளில், அதிக அளவில் மாற்றத்தைக் காண முடிந்தது.
இதுகுறித்து, டில்லி அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் கடும் குற்றச்சாட்டுகளைக் கூறும் போதெல்லாம், அமைச்சர்கள் தான், அவர்களுக்கு பதிலடி கொடுப்பர். காங்கிரஸ் தலைவி சோனியா, அமைதியாக அமர்ந்து, சபையில் நடப்பதை பார்த்துக் கொண்டிருப்பார். அவரது முகத்திலும், எந்த ரியாக்ஷனும் இருக்காது. அவருக்கும், சபையில் நடக்கும் பிரச்னைகளுக்கும், எந்த சம்பந்தமும் இல்லாதது போல் அமர்ந்திருப்பார். இப்போது, அவரது நடவடிக்கைகளில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சீற்றம்:
சில நாட்களுக்கு முன், பா.ஜ., தலைவர் அத்வானி, அசாம் கலவரம் தொடர்பாக, ஆளுங்கட்சி மீது, கடும் குற்றச்சாட்டுகளைக் கூறினார். அப்போது, காங்கிரசின் தேர்தல் வெற்றியையும், கடுமையாக அவர் விமர்சித்தார். யாரும் எதிர்பாராத வகையில், திடீரென சோனியா, பொங்கி எழுந்துவிட்டார்."அத்வானி கூறிய குற்றச்சாட்டுகளை உடனே வாபஸ் வாங்க வேண்டும்' எனக் கூறியதோடு, அத்வானிக்கு பதிலடி கொடுக்கும்படி, காங்கிரஸ் உறுப்பினர்களையும் தூண்டி விட்டார். "நிலக்கரி ஊழல் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும்' என, இரண்டு நாட்களுக்கு முன், பா.ஜ., உறுப்பினர்கள், லோக்சபாவில் அமளியில் ஈடுபட்டபோதும், சோனியா கடும் ஆத்திரம் அடைந்தார்."பிரதமர் பதவி விலக வேண்டும் எனக் கோரும் பா.ஜ.,வினருக்கு பதிலடி கொடுங்கள்' என,முகம் சிவக்கப் பேசினார். சோனியாவின் ஆவேசத்தைப் பார்த்து, காங்., தலைவர்களே அதிர்ந்து விட்டனர். அத்வானி வருத்தம் தெரிவித்ததும் தான், பிரச்னை முடிவுக்கு வந்தது. இதற்கு முன், பார்லிமென்டுக்குள், சோனியா இவ்வளவு ஆவேசம் காட்டியதில்லை.
ராகுலுக்கு பொறுப்பு:
கட்சி தொடர்பான விஷயங்களிலும், அதிரடி காட்டத் துவங்கியுள்ளார், சோனியா. ராகுலுக்கு, கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்பை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை கசிய விட்டதன் பின்னணியிலும், சோனியாவின் தந்திரம் உள்ளதாகக் கூறப்படுகிறது. தன் உடல் நிலை சரியில்லாததால், ராகுலை முன்னிலைப்படுத்துவதற்காக, அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக, கட்சியினர் மத்தியில் பேச்சு உள்ளது.இதேபோல், பிரதமரின் முதன்மைச் செயலராக பூலோக் சட்டர்ஜியை நியமிக்கும் உத்தரவும், சோனியாவிடம் இருந்து தான் வந்ததாகக் கூறுகின்றனர். பிரதமர் அலுவலகத்தின் நிர்வாகத்தை சீரமைப்பதற்கு, பூலோக் சட்டர்ஜி உதவிகரமாக இருப்பார் என, சோனியா விரும்பியதாகவும், இதனால் தான், அவர் நியமிக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது.பிடிவாதம் பிடிக்கும், கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசை வழிக்கு கொண்டு வருவதற்காக, மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுஷில்குமார் ஷிண்டேவுக்கு, உள்துறை அமைச்சர் என்ற முக்கிய பொறுப்பை சோனியா கொடுத்துள்ளார். மகாராஷ்டிர அரசியலை பொறுத்தவரை, சரத் பவாரை விட, சுஷில்குமார் ஜூனியர். சரத் பவாருக்கு மறைமுக நெருக்கடி கொடுப்பதற்காகவே, சுஷில்குமாருக்கு, சோனியா முக்கியத்துவம் அளித்துள்ளார் என்கின்றனர், விஷயம் தெரிந்த அரசியல்வாதிகள்.
ஐ.மு.,கூட்டணியில், தற்போதுள்ள கட்சிகளை, அடுத்த தேர்தல் வரை தக்க வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலும், சோனியா களம் இறங்கியுள்ளார். மேலும், கூட்டணிக்கு வெளியில் உள்ள சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு வலை வீசவும், சோனியா நடவடிக்கை எடுத்து வருகிறார்.
உணவு மசோதா:
அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், மக்களிடம் போய் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக, மக்களுக்கு சாதகமான உணவுப் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட மசோதாக்களை, பொதுத் தேர்தலுக்கு முன், நடைமுறைப்படுத்தி, மக்களிடம் நல்ல பெயர் எடுக்கும் நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டுள்ளார். "மத்திய நிதித் துறை அமைச்சர் சிதம்பரத்தை, "2ஜி' வழக்கில் சேர்க்க தகுந்த முகாந்திரங்கள் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளதும், சோனியாவின் பலத்தை அதிகரித்துள்ளதால், அவர் மேலும் தீவிரமாகச் செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பா.ஜ.க ஜெயிக்கும், நரேந்திரமோடி பிரதமர் ஆவார் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளுங்கள். அது உங்கள் கனவு,நரேந்திர மோடி என்ன சிறுபான்மையினத்தைச் சேர்ந்த வேட்பாளரையா நிறுத்துவாரு, இந்துவைத்தான் வேட்பாளரா நிறுத்துவாரு. குஜராத்தில் என்ன நடக்குதுன்னு இங்கு கருத்து எழுதும் யாருக்காவது தெரியுமா? ஆங்கிலேயர்கள் நம் மீது எந்த அளவுக்கு அடக்குமுறையைக் கையாண்டார்களோ அதுதான் நடக்கிறது. அங்கு சிறுபான்மையினர் அஞ்சி,அடங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனராம்.
அவசியம் நீங்க பேசணும் அன்னையே.. எங்கே வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்ப்புகளின் நேர் மறை அனுதாபத்தில் காங்கிரஸ் ஜெயிதுவிடுமோ என்ற பயம் எனக்கு இருந்தது. இப்போ திருப்தி. உங்க மகனையும் நிறைய பேச சொல்லுங்க. வேணும்னா எங்க கேப்டன் கிட்டே ட்ரைனிங் எடுக்கட்டும். அப்போதான் கை காலை நீட்டி ஸ்டைல் ஆக பேசமுடியும். முடிஞ்சா உங்க மகள் மருமகன் எல்லோரையும் பர்லிமெண்டுக்கு பிக்னிக் கூட்டி வந்து பேச சொல்லுங்க. எங்க மானம் கெட்ட உறுப்பினர்கள் நல்லா கையை தட்டுவார்கள். எங்க தலை எழுத்து அப்படி இருந்தா யார் என்ன பண்ண முடியும்?

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.