சென்னை :""மூன்றே மாதங்களில், மின்வெட்டை சீர் செய்வேன் என்ற வாக்குறுதியை, நான் எந்த நேரத்திலும் அளிக்கவில்லை,'' என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழக மின் நிலைமை குறித்து, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அளித்த விளக்கம்: என், 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில், 3,820 மெகாவாட், மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. தி.மு.க.,வின், 10 ஆண்டு ஆட்சியில், 767 மெகாவாட் மட்டுமே கூடுதல் மின் நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டில், மின் மிகை மாநிலமாக தமிழகம் விளங்கியது. மின் நிலையங்களை பராமரிக்காதது, மின் நிறுவு திறனை அதிகரிக்காததால், 2008ல் மின் குறை மாநிலமாகிவிட்டது. தி.மு.க., ஆட்சியில், நீண்ட கால அடிப்படையில், மின்சாரத்தை கொள்முதல் செய்திருந்தால், மிகக் குறைந்த விலையிலேயே மின்சாரத்தை பெற்றிருக்க முடியும்.
மின் கடத்தும் வழித்தடத்தில் நெருக்கடி ஏற்பட்டதால், நீண்ட கால அடிப்படையில், கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்கள் போட்ட மாநிலங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால், தற்போது பிற மாநிலங்களில் இருந்து, 1,100 மெகாவாட் மின்சாரம் பெற ஒப்பந்தங்கள் போட்டும், 85 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. மத்திய தொகுப்பில் இருந்து, 1,000 மெகாவாட்டிற்கு பதில், 100 மெகாவாட்டை மத்திய அரசு அளித்தாலும், அதிலும், 78 மெகாவாட் மட்டுமே கிடைக்கிறது. டில்லி அரசால் ஒப்படைக்கப்பட்ட, 1,721 மெகாவாட் மற்றும் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும், 1,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என, நான் பிரதமருக்கு கடிதம் எழுதியும் சாதகமான பதில் இல்லை.
நீண்ட கால அடிப்படையில் ஒப்பந்தம் போட்டால், மலிவான விலையில் கணிசமான மின்சாரம் கொள்முதல் செய்ய முடியும் என்பதால், புதிய ஒப்பந்த புள்ளிகள் கோருவதற்கான அனுமதி வேண்டி, தமிழ்நாடு மின் ஒழுங்கு முறை ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற பின், ஒப்பந்தம் கோரப்படும்.
புதிய மின் நிலையங்கள் அமைப்பதிலும், மத்திய அரசு இடர்ப்பாடுகளை ஏற்படுத்தி வருகிறது. புதிய மின் நிலையங்களுக்கு, நிலக்கரியை தருவதற்கான, "எரிபொருள் வழங்கல் ஒப்பந்தம்' செய்ய மறுத்து வருவதுடன், ஏற்கனவே உள்ள மின் நிலையங்களுக்கும், 80 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிலும், 70 சதவீதத்திற்கும் குறைவாகவே, இந்திய நிலக்கரி நிறுவனம் அளித்து வருகிறது. இது மட்டுமின்றி, புதிய திட்டங்களுக்கான அனுமதியை, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காலவரையின்றி தாமதப்படுத்துகிறது. பல்வேறு மின் திட்டங்களின் மூலம், 2014 வரை, 7,798 மெகாவாட் மின்சாரம் கிடைப்பதற்கு, முந்தைய, தி.மு.க., அரசு வழி செய்ததாக, கருணாநிதி கூறியிருப்பது வெறும் கற்பனைக் கதை.
கடந்தாண்டு, சட்டசபை பொதுத் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது, தமிழகத்தின் மின் வெட்டு நிலைமையை மூன்றே மாதங்களில் சீர் செய்வேன் என, நான் வாக்குறுதி கொடுத்ததாக, தவறான தகவல்களை கருணாநிதியும், இன்னும் சிலரும் பரப்பி வருகின்றனர்.
முந்தைய தி.மு.க., ஆட்சியில் மின்வெட்டு, மிகவும் மோசமடைந்து, மக்களுக்கு எப்போது மின்சாரம் கிடைக்கும் என்பதே தெரியாத நிலையில், மின்வெட்டை மூன்றே மாதங்களில் சீர் செய்வேன் என்ற வாக்குறுதியை, நான் எப்படி கொடுத்திருக்க முடியும்? இந்த வாக்குறுதியை, நான் எந்த நேரத்திலும் அளிக்கவில்லை.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் மின் பற்றாக்குறைக்கு, முந்தைய தி.மு.க., அரசும், மத்திய அரசும் தான் காரணம். அ.தி.மு.க., ஆட்சி பதவி ஏற்ற பின், புதிய மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர், வல்லூர், வடசென்னை உள்ளிட்ட அனல் மின் திட்டங்கள், கூடங்குளம், நெய்வேலி திட்டங்கள் மூலம், அடுத்தாண்டு இறுதியில், 4,385 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகக் கிடைக்கும்.
இது மட்டுமின்றி, புதிய மின் திட்டங்கள் துவங்கவும், அரசு ஏற்பாடு செய்துள்ளது. புதிய மின் திட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக, முழுத் திறனுடன் இயக்கத்திற்கு வரவிருப்பதால், இனி வரும் மாதங்களில், மின் தடையின் தாக்கம் படிப்படியாகக் குறையும். அடுத்தாண்டு இறுதிக்குள், தமிழகத்தில் மின் தடை அறவே நீக்கப்படும்.
பொதுமக்கள், அடுத்த ஜூன் மாதம் வரை பொறுத்திருக்க வேண்டும்; பொறுமை காட்ட வேண்டும். படிப்படியாக, விரைவில் மின் நிலைமை சீரடையும். அடுத்த ஆண்டு இறுதிக்குள், மின் வெட்டு நிலைமை அறவே நீக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இந்த மாதிரி நேரிடையாக, தெளிவாக உங்களிடம் இருந்து வரும் அறிக்கையை விரும்புகிறோம், வரவேற்கிறோம். உங்களது நிர்வாகத் திறனிலும், அடிப்படையில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்கு உள்ள முனைப்பிலும் எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பொறுத்திருக்கிறோம் சொன்னவாறே நிலைமையை சீராக்கி மின்வெட்டை ஒரு கெட்ட கனவாக ஆக்கிட உங்களால் முடியும். இன்று தூற்றுபவர்களை வாயடைக்க செய்திட வாழ்த்துக்கள்
மின்வெட்டு நாயகன் ஆர்க்காடு வீராசாமி 2007 இல் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக இருப்பதால் தேவைக்கதிகமாக உள்ள மின்சாரத்தை மகாராஷ்டிராவுக்கு விற்கிறோம் எனப் பெருமையுடன் கூறினார். முந்தைய ஆட்சியில் மின்தடை இல்லாமலிருந்ததை அவரே ஒப்புக் கொண்டார். ஆனால் அவர் பதவியைவிட்டு விலகும்போதோ பல மணிநேர மின்வெட்டு.இதனை சரி செய்ய பல காலம் ஆகும். வாக்கு வங்கிகக்காகப் பொய் சொல்வது ஏற்றுக்கொண்ட ஒன்றாகிவிட்டதே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.