தமிழகத்தில், தென் மாவட்டங்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் உயிர் நாடியான, விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை திட்டம், தமிழக அரசின் அலட்சியத்தால், பெரும் பின்னடைவில் உள்ளது. ரயில்வே ஆணையம் கோரியுள்ள, குவாரி உரிமங்களை தராமல் இழுத்தடிப்பதாலும், நிலம் ஒதுக்கி தருவதில் மந்தமாக செயல்படுவதாலும், மிக முக்கிய ரயில் பாதை திட்டம், அந்தரத்தில் தொங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கட்டமைப்பு வசதி இல்லை:
இதுதொடர்பாக, டில்லியில், ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:தொழிற்துறையில், தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மிகவும் பின் தங்கியுள்ளன. அரசு மற்றும் தனியார் தொழில் முதலீடுகள் எல்லாமே, சென்னையை சுற்றியே உள்ளன. சென்னையை சுற்றியே தொழில் முதலீடுகள் அதிகரிப்பதற்கு, தென் மாவட்டங்களில் போதுமான கட்டமைப்பு வசதி இல்லை என்பதே காரணம். குறிப்பாக, ரயில் பாதை திட்டங்கள், சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை.
தென் மாவட்டங்களுக்கு, இன்னும் ஒற்றை பாதையிலேயே, ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் - திண்டுக்கல் அகல ரயில் பாதை திட்டம், பெரும் போராட்டத்திற்கு பின், ஒரு வழியாக கிடைத்து, அதை ரயில்வே துறையின், ஆர்.வி.என்.எல்., நிறுவனம் நிறைவேற்றி வருகிறது. இந்த திட்டத்திற்கு தேவையான நிதி அனைத்தும், தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது.இந்நிலையில், மிக முக்கியமான, இந்த இரட்டை ரயில் பாதை திட்டமானது, தமிழக அரசின் அலட்சியம் காரணமாக மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க உள்ளது.
ஏழு உரிமங்கள்:
ரயில் பாதை அமைப்பதற்கு கற்கள் தேவை. இத்திட்டத்திற்கு, மொத்தம், 54 லட்சம் கன மீட்டர் அளவுக்கு கற்கள் தேவைப்படுகின்றன. இதற்காக தங்களுக்கு, ஏழு குவாரி உரிமங்களை அளிக்க வேண்டும் என்று, தமிழக அரசிடம் ஆர்.வி.என்.எல்., நிறுவனம் கோரிக்கை விடுத்தது. ஓராண்டாகியும் இந்த கோரிக்கை மீது, தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்தி வருகிறது. ஏழு உரிமங்கள் கேட்டதற்கு, ஒரு உரிமம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, தமிழக அரசின் தலைமை செயலரை, தென்னக ரயில்வே மேலாளர், ஐந்து முறை சந்தித்து பேசியும் பலனில்லை.குவாரி கிடைத்தால் மட்டுமே, இந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முடியும். குவாரி உரிமம் தருவதில், மாநில அரசு தாமதம் காட்டுவதால், திட்டமிட்ட காலத்தையும் தாண்டி, மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு திட்டம் தாமதமாகும் நிலை உருவாகியுள்ளது.
இதுதவிர, இந்த ரயில் பாதை திட்டத்திற்கு மொத்தம், 750 கோடி ரூபாய் தேவை. நிலம் கையகப்படுத்துவதிலும், நிறைய சிக்கல்கள் நீடிக்கின்றன. தமிழக அரசு அதிகாரிகளிடம் இருந்து, ஒத்துழைப்பு என்பதே இல்லை.
சுற்றும் பைல்கள்:
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பைல்கள் அனைத்துமே, திருச்சி கலெக்டர், விழுப்புரம் கலெக்டர் மற்றும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, நில நிர்வாக துறை சயலர் என, மூன்று பேரிடையே மாறி மாறி
சுற்றிக் கொண்டிருக்கின்றன.இந்த ரயில் பாதை திட்டம், மிக முக்கியமானது என்பதால், ஆர்.வி.என்.எல்., வசம் கொடுத்து, பணிகள் அனைத்தும், எல் அன்ட் டி நிறுவனத்திடமும் அளிக்கப்பட்டு, மளமளவென பணிகள் நடைபெற்றன. ஆனால், இப்போது குவாரி உரிமம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னையில், இந்த திட்டம் நிற்கிறது.
இந்த விஷயத்தில், மத்திய அரசை குறை கூறவோ அல்லது நிதி தரவில்லை என, கூறவோ இடமில்லை. தமிழக முதல்வரின் திருவரங்கம் தொகுதிக்குள்ளும், இந்த திட்டம் வருகிறது. எனவே, விரைந்து முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தும் அதிகாரிகளை, முதல்வர் சரி செய்ய வேண்டும்.இந்த திட்டம் தொடர்பாக ஆலோசிக்க, தமிழக எம்.பி.,க்கள் அனைவருக்கும் சில தினங்களுக்கு முன், தென்னக ரயில்வே சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பல எம்.பி.,க்கள், இந்த கூட்டத்திற்கு வரவே இல்லை.
இதுவரை, 360 கோடி ரூபாய், இந்தத் திட்டத்திற்கு செலவாகியுள்ளது. குவாரி உரிமம் மற்றும் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளுக்கு, தீர்வு காணப்பட்டால், 2015ம் ஆண்டுக்குள், விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதையை முடித்து சாதனை படைப்போம்.இந்த திட்டம் வேகமெடுக்க வேண்டுமா, மந்த நிலையை அடைய வேண்டுமா என்பது, இனி தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது.இவ்வாறு, ரயில்வே துறை உயர் அதிகாரிகள் கூறினர்.
நடந்துள்ள பணிகள்என்னென்ன?:
விழுப்புரம் - திண்டுக்கல் இரட்டை ரயில் பாதை திட்டம், பகுதி பகுதியாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதுவரையிலும், வாலடி (லால்குடி) - கல்லகுடி - பழங்காநத்தம் இடையில், 25 கி.மீ., தூரத்துக்கு வேலை முடிந்துள்ளது. கல்லகுடி - அரியலூர் இடையே, 25 கி.மீ., தூர பணிகள், 2013 மார்ச்சுக்குள் முடியும்.விழுப்புரம் - விருத்தாசலம் பணிகளுக்காக, 168 கோடி ரூபாயும், விருத்தாசலம் - அரியலூர் பணிகளுக்காக, 165 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. மணப்பாறை - திண்டுக்கல் பணிகளுக்கு, 156 கோடி ரூபாய் ஒதுக்கி, டெண்டர் விடும் பணிகள் ஆரம்பமாக உள்ளன.இவ்வாறு, ரயில்வே துறை அதிகாரிகள் கூறினர்.
- நமது டில்லி நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
திண்டுக்கல் - குமுளி ரயில்வே வேலைக்கு MP JM ஆரூன் முயற்சியில் மத்திய நிதி தயாரில் இருக்கு. நிலத்தை கையக படுத்தி ரெயில்வேயிக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ அரசுக்கு உண்டு. நிலத்திற்குண்டான விலையை ரயில்வே கொடுக்க போகிறது. குவாரி உரிமம் மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தில் உள்ளது. செய்வார்களா?????
திமுக ஆட்சி புரிந்த காலங்களில் மத்திய அரசின் ஒத்துழைப்பு அதற்கு இருந்தது. ஆனால் அந்த கால கட்டங்களில் கூட ரயில்வே பணிகள் மிகவும் மந்தமாகத்தான் நடைபெற்றன .ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் ஆட்சி நடத்துகின்ற வேளைகளில் மத்தியில் "சத்ரு" போல அமர்ந்து பல்வேறு மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதே சிலரின் முக்கிய வேலையாக உள்ளது.அதை மக்களும் நன்கு அறிவர் .
தமிழகத்தின் ரயில்வே பாதைகள் பல ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டவைகளே. மீட்டர்கேஜ் பாதைகளை எடுத்துவிட்டு பிராட் கேஜ் பாதைகளாக மாற்றியது தற்போதைய ரயில்வேதுறை . கிட்டத்தட்ட தமிழகத்தில் எண்பத்தி அஞ்சு சதவீதம் ஒரு வழிப்பாதையாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதை வாசகர்களும் மக்களும் நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும் .
சிறப்பான கட்டுரை. விழுப்புரம்-மதுரை இரட்டைபாதை அமைப்பதில் தமிழக அரசில் ஒத்துழைப்பு குறைவாக இருப்பது நிஜம் தான், இது மட்டுமல்ல தமிழகத்தின் எந்த புதிய ரயில்வே திட்டங்களிலும் தமிழக அரசுகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இந்த இரட்டை பாதையை பொறுத்தவரை ரயில் விகாஸ் நிகாம் நிறுவனம் பணிகளை செய்கிறது. இந்த நிறுவனம் தான் மயிலாடுதுறை-விழுப்புரம் அகலப்பாதை பணிகளை ஆமை வேகத்தில் செய்து அவசர கோலத்தில் முடித்தது. இந்த பெரிய திட்டத்திற்கு பணி ஒப்பந்தங்களை சரியான ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்கினால் மட்டுமே பணிகள் விரைவாக முடியும்
சேலம் ரயில்வே டிவிஷன் ஆரம்பிச்சு அஞ்சு வருஷம் ஆகா போகுது,ஆனால் மத்திய ரெயில் பவன் அதை மாற்றாந்தாய் மனத்துடன் தான் பார்க்கிறது,எந்த முன்னேற்றமும் இல்லை.ஆனால் பல ரெயிகள் கேரளாவுக்கு சாதகமாக இயக்க படுகின்றன.இதற்க்கு என்ன செய்ய போகிறார் சிறப்பு நிரூபர்..எல்லாவற்றிலும் அரசியல் விளையாடும் பொது தமிழக அரசு செய்வதை மட்டும் சொல்லக்கூடாது...உண்மைகளை உள்ளபடி எழுத வேண்டும்.
டில்லி அரசு திருப்பியுள்ள உபரி மின்சாரத்தை, தமிழகத்திற்கு தர வேண்டும் என்ற மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பிலிருந்து, அட்டர்னி ஜெனரல் ஆஜரானார். "தமிழக மின்சார பற்றாக்குறைக்கு தமிழகமே காரணம் டில்லி அரசின் உபரி மின்சாரத்தை தர முடியாது&39 என்று, ஒரே போடாக போட்டார் அட்டர்னி ஜெனரல்.இதை பற்றி மத்திய அரசுக்கு யாரும் கண்டனம் தெரிவிப்பது இல்லையே

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.