மும்பை: "பால் தாக்கரே குறித்து, "பேஸ்புக்'கில், கருத்து வெளியிட்டதற்காக, மன்னிப்பு கோருகிறோம்; தாக்கரே, மிகச் சிறந்த மனிதர். ஆனால், கருத்து வெளியிட்ட குற்றத்திற்காக, எங்களை கைது செய்தது, நியாயமற்ற நடவடிக்கை' என, கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளிவந்த, இரண்டு இளம் பெண்களும் கூறினர்.சிவசேனா தலைவர் பால் தாக்கரே, 17ம் தேதி, காலமானார். அடுத்த நாள், அவரது இறுதிச் சடங்குகள் நடந்தன. இதற்காக, மும்பை முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, மும்பையைச் சேர்ந்த, ரேணு, ஷகீன் தாதா என்ற, இரண்டு இளம் பெண்கள், சமூக வலைத் தளமான, "பேஸ்புக்'கில் கருத்து தெரிவித்திருந்தனர்.அதில், அவர்கள் கூறியிருந்ததாவது:
உலகில், தினமும், ஏராளமானோர் இறக்கின்றனர். அவர்களின் மறைவுக்காக, கடைகள் அடைக்கப்படுவது இல்லை. தாக்கரே மறைவுக்கு மட்டும், ஏன் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.மரியாதை என்பது, தானாக கிடைக்க வேண்டும்; கட்டாயப்படுத்தி பெறக் கூடாது. தாக்கரே மீது உள்ள, மரியாதை காரணமாக, மும்பையில் கடைகள் அடைக்கப்பட்டதாக கூறுவது, தவறு; பயம் காரணமாகவே, கடைகளை அடைத்துள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்திருந்தனர்.இந்த விவகாரம், மகாராஷ்டிராவில், பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. சிவசேனா கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில், இரண்டு பெண்களையும், நேற்று முன்தினம், மும்பை போலீசார் கைது செய்தனர்.இவர்கள் மீது, மக்களின் உணர்வுகளை புண்படுத்தியது உள்ளிட்ட, பல்வேறு பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், இருவருக்கும், அதிகபட்சமாக, மூன்று ஆண்டு வரை, சிறைத் தண்டனை கிடைக்கும்.கைதான இரண்டு பேரையும், 14 நாட்கள், காவலில் வைக்க உத்தரவிட்ட, மும்பை கோர்ட், பின், அவர்களுக்கு ஜாமின் அளித்தது. ஜாமினில் வெளிவந்தாலும், இரண்டு பேரும், இன்னும் பீதி விலகாத நிலையில் தான் உள்ளனர். முகத்தை முழுவதுமாக மூடிய நிலையில், இரண்டு பேரும், பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:தாக்கரே மறைவுக்காக, கடைகள் அடைக்கப்பட்டது குறித்து, நாங்கள் தெரிவித்த கருத்துக்களை வாபஸ் பெறுகிறோம். இதற்காக, மன்னிப்பு கோருகிறோம். தாக்கரே மிகச் சிறந்த தலைவர் தான்; இதில், எந்த சந்தேகமும் இல்லை.வலைத் தளத்தில் தெரிவித்த கருத்துக்காக; எங்களை கைது செய்தது, நியாயமற்ற நடவடிக்கை. மூன்று நாட்களாக, பெரும், மன உளைச்சலிலும், பீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.ஷாகீன் கூறுகையில், ""இனிமேல், "பேஸ்புக்'உள்ளிட்ட, சமூக வலைத் தளங்களின் பக்கமே, தலை வைத்து படுக்க மாட்டேன்,''என்றார். ரேணு கூறுகையில், ""பேஸ்புக்கில், இனிமேல் கருத்துக்களை தெரிவிக்கும்போது, பலமுறை யோசித்து தான், தெரிவிப்பேன்,''என்றார்.இந்த இரண்டு பெண்களில், ஒருவரின் உறவினர், மும்பையில் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையின் மீது, சில மர்ம நபர்கள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். அங்கு இருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதற்கிடையே, "சமூக வலைத் தளத்தில் தெரிவித்த கருத்துக்காக, பெண்களை கைது செய்தது சரியான நடவடிக்கை அல்ல' என, சமூக ஆர்வலர்கள் பலரும், கருத்து தெரிவித்து உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.