அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்
கொடுக்கப்பட்டது.
அம்மாவிடம் சொல்லிடுங்க! கசாப்பின் கடைசி வார்த்தைகள்
புதுடில்லி: ""எனக்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட விவரத்தை, என் தாயிடம் சொல்லிடுங்க; இது தான் என் கடைசி ஆசை,'' என, பயங்கரவாதி கசாப் தெரிவித்துள்ளான்.புனே நகரின், எரவாடா சிறையில் நேற்று தூக்கிலிடப்பட்ட, பாகிஸ்தான் பயங்கரவாதி, கசாப்பிடம், நேற்று முன்தினம், "கடைசி ஆசை என்ன?' என, கேட்கப்பட்டது."எனக்கு பெரிதாக எந்த ஆசையும் இல்லை; என் தாய், நூரி லாய் இடம், எனக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை மட்டும் சொல்லிடுங்க' என்று, அதிகாரிகளிடம், கசாப் தெரிவித்துள்ளான்.அதன்படி, நேற்று முன்தினம், தூக்கிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதும், மத்திய உள்துறை செயலர், ஆர்.கே.சிங், கடிதம் ஒன்றை எழுதி, வெளியுறவுத் துறை செயலர், ரஞ்சன் மத்தாயிடம் கொடுத்து, கசாப் தாயிடம் வழங்குமாறு கொடுத்தார்.அந்த கடிதம், உடனடியாக, கூரியர் மூலம், பாகிஸ்தானில் உள்ள, கசாப்பின் தாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டது.அந்த கடிதம், நூரி லாய் வசம் சென்றடைந்தது குறித்து தகவல் இல்லை.
எத்தனை பேருக்கு தூக்கு
1983ம் ஆண்டு முதல், மிகவும் அரிதான குற்றங்களுக்கு மட்டுமே சுப்ரீம் கோர்ட், தூக்கு தண்டனை விதிக்கிறது. பயங்கரவாத செயல்கள், குற்றங்களில் இருந்து தப்பிக்க கொலை செய்வது, கொள்ளையடிப்பதற்காக கொலை செய்வது, தற்கொலைக்கு உடந்தையாக இருப்பது, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது, நாட்டிற்கு எதிராகச் செயல்படுவது, போதை பொருள் கடத்தல் போன்றவற்றிற்காகவும் தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது.சுதந்திரத்திற்குப் பின், இந்தியாவில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. சுதந்திரத்திற்கு பின், நாட்டில் இதுவரை 52 பேர் தூக்கிலிடப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
1975க்கும், 1991க்கும் இடையே 40 பேர் தூக்கிலிடப்பட்டனர். 2007ல் 100 பேருக்கும், 2006ல் 40 பேருக்கும், 2005ல் 77 பேருக்கும், 2002ல் 23 பேருக்கும், 2001ல் 33 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டும், இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.தூக்கிலிடப்பட்ட முக்கிய குற்றவாளிகள்
* 2012 நவ., 21ல் பயங்கரவாதி அஜ்மல் கசாப், புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
* 2005 ஏப்., 27ல் கடத்தல், கற்பழிப்பு, கொலையில் ஈடுபட்டதற்காக சேலம் சிறையில் ஆட்டோ சங்கர் தூக்கிலிடப்பட்டான்.
* 2004 ஆக., 14ல் பாலியல் குற்றத்திற்காக தனஞ்செய் சட்டர்ஜி தூக்கிலிடப்பட்டான்.
கசாப்பிற்கு அமைந்தபுதன் கிழமை
மும்பை: பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் வாழ்வில், புதன் கிழமை, முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.பயங்கரவாதி அஜ்மல் கசாப், 2008, நவம்பர், 26ம் தேதி, மாலையில், கடல் வழியாக, தன் சகாக்களுடன், மும்பைக்குள் ஊடுருவினான். படகு மூலமாக, பாகிஸ்தானிலிருந்து, கடல் வழியாக, மும்பைக்குள், கசாப்பும், அவனது சகாக்களும் ஊடுருவியது, புதன் கிழமை.தற்போது, அதே புதன் கிழமை தான் அஜ்மல் கசாப், தூக்கிலிடப் பட்டுள்ளான். கசாப், மும்பைக்குள் அடி எடுத்து வைத்ததும், தூக்கிலிடப்பட்டதும், புதன் கிழமை என்பதால், அவனது வாழ்வில், புதன் கிழமைக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
தூக்கிலிட்டவருக்கு ரூ.5 ஆயிரம் சம்பளம்
புனே: பயங்கரவாதி, அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டவருக்கு, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தூக்கிலிட்டவர் யார் என்பது பற்றிய தகவல், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதி அஜ்மல் கசாப், தூக்கிலிடப்பட்டது குறித்து, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, எரவாடா சிறை வட்டாரங்கள் கூறியதாவது:கசாப், தூக்கு நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைக்கு, "ஆபரேஷன்-எக்ஸ்' என, பெயரிடப்பட்டிருந்தது. தூக்கிலிடுவதற்காக, கசாப்பை, மும்பையிலிருந்து, புனேக்கு அழைத்து வரப்பட்டது தொடர்பான, தகவல் பரிமாற்றங்களை, மகாராஷ்டிரா போலீசார், ரகசியமாக கையாண்டனர்.எந்த சூழ்நிலையிலும், தங்களின் தகவல் பரிமாற்றத்தின் போது, கசாப்பின் பெயரை, அவர்கள் குறிப்பிடவில்லை. "சி-7096' என்ற எண்ணை, ரகசிய குறியீடாக பயன்படுத்தினர். கசாப்பை, தூக்கிலிட்டவரை பற்றிய விவரங்களும், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தூக்கிலிட்டவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.தூக்கிலிடப்படுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன் தான், "நாம், கசாப்பை தூக்கிலிடப் போகிறோம்' என்பது, சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியும். கசாப்பை தூக்கிலிடுவதற்காக, அவருக்கு, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.மீரட் மத்திய சிறையில், கைதிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொண்டிருந்த மானு சிங் என்பவர், "கசாப்பை தூக்கிலிட, ஆர்வமாக இருக்கிறேன்.
இதற்காக, சம்பளம் எதுவும் வாங்கப் போவது இல்லை' என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை. கடந்தாண்டு, மே மாதம், மானு சிங் இறந்து விட்டார்.அதேபோல், மேலும் பலர், தாங்களாகவே முன் வந்து, கசாப்பை தூக்கிலிட விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, எரவாடா சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடிதத்தை பெற்றுக் கொண்டதுபாகிஸ்தான் அரசு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பயங்கரவாதி, கசாப்புக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்த, இந்தியாவின் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.கசாப்புக்கு நேற்று காலையில், புனேயின், எரவாடா சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட சில நிமிடங்களில், டில்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்த, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, "கசாப்புக்கு தண்டனை நிறைவேற்றிய விவரம் குறித்த கடிதம், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது; ஆனால், அதை பெற்றுக் கொள்ள, பாகிஸ்தான் அதிகாரிகள் மறுத்து விட்டதால், "பேக்ஸ்' செய்யப்பட்டது' என தெரிவித்திருந்தார்.ஆனால், இஸ்லாமாபாத்தில் உள்ள, பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர், நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில், "கசாப்புக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்த, இந்தியாவின் தகவலை பெற்றுக் கொண்டோம்' என, தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பயங்கரவாதத்தை எந்த வடிவிலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். பயங்கரவாதத்தை வேறுடன் அழிக்க, இந்தியா மட்டுமின்றி, எந்த நாடுகளுடனும் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். கடிதத்தை பெற்றுக் கொள்ள மறுத்தோம் என, இந்தியா தரப்பில் கூறப்பட்ட தகவல் தவறானது.இவ்வாறு, அவர் கூறினார்.
கண்டுகொள்ளாத பாக்.,பத்திரிகைகள்
இஸ்லாமாபாத்: அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தியை, பாகிஸ்தானிய பத்திரிகைகள் பெரிதுபடுத்தவில்லை.மும்பை தாக்குதலில் ஈடுபட்ட, ஏழு பயங்கரவாதிகளும் பாகிஸ்தானியர்கள். அதிரடிபடையினரின் பதிலடி தாக்குதலில் மற்ற ஆறு பேர் கொல்லப்பட்டனர்.உயிர் பிழைத்த அஜ்மல் கசாப், நேற்று தூக்கிலிடப்பட்டான். வழக்கமாக இது போன்ற விஷயங்களை பெரிது படுத்தும், பாகிஸ்தானிய ஊடகங்கள், இந்த செய்தியை சாதாரணமாக வெளியிட்டன.பாகிஸ்தானின் ஆங்கில பத்திரிகைகளான,டான், தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன் உள்ளிட்ட பத்திரிகைகளும், கருத்து ஏதும் கூறாமல், செய்தியை மட்டும் வெளியிட்டுள்ளன.அந்நாட்டின் அனைத்து ஊடகங்களும், இதை தலைப்பு செய்தியாக்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது. ப்ரைடே டைம்ஸ் என்ற பத்திரிகையின் ஆசிரியர், ரசா ரூமி குறிப்பிடுகையில், "கசாப் தூக்கிலிடப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது; இருப்பினும், இந்த விஷயத்தால், இந்திய-பாகிஸ்தான் உறவு பாதிக்காது' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.