சென்னை:சூரிய சக்தி மூலம், 1,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான ஒப்பந்தப்புள்ளி, ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளது.சூரிய சக்தி மூலம், மின் உற்பத்தியைப் பெருக்க, அக்டோபர், 20ம் தேதி, புதிய சூரிய சக்தி கொள்கையை, தமிழக அரசு வெளியிட்டது. சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயித்துள்ளது.
உயரழுத்த மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நுகர்வோர், தங்கள் மொத்த பயன்பாட்டில், 6 சதவீதத்தை, சூரிய சக்தியில் உற்பத்தியாகும், மின்சாரத்தில் இருந்து பெறுவது கட்டாயமாக்கப் பட்டது.மேலும், வீடுகளில் மின்சார உற்பத்தியை ஊக்குவிக்க, உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும், சூரிய சக்தி கொள்கையில் குறிப்பிட்டிருந்தது. சூரிய சக்தி மூலம், முதல் ஆண்டில், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தப்புள்ளி குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், நேற்று, முன் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தியது.
இதில், சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிலையங்களை நிறுவும், 600க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர். முதல் ஆண்டில், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, அரசு வெளியிடவுள்ள ஒப்பந்தப்புள்ளி குறித்து, தமிழக மின் வாரிய தலைவர் ஞானதேசிகன், முதலீட்டாளர்களுக்கு விளக்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:தமிழக சூரிய சக்தி கொள்கை, அக்டோபர் 20ம் தேதி வெளியிடப் பட்டது. முதல் ஆண்டில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய, ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குள், ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படும்.
தற்போது, தமிழகத்தில், 8,000 உயரழுத்த மின் உபயோகிப்பாளர்களும், லட்சக்கணக்கான குறைந்தழுத்த மின் உபயோகிப்பவர்களும் உள்ளனர். முதல் ஆண்டில், 1,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான ஒப்பந்தத்தில், ஒரு நபர் குறைந்தபட்சம், ஒரு மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய வேண்டும்.
தொழில்நுட்ப தகுதி புள்ளி, விலை புள்ளி ஆகியவை பெறப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி திறக்கப்படும். இறுதியில், குறைந்த பட்ச விலை ஏற்றுக் கொள்ளப்படும். ஒப்பந்த காலம், 20 ஆண்டுகள். சூரிய சக்தி மின் உற்பத்திக்கான, நிலம் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றை, உற்பத்தியாளர்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் வழித்தட திறன், மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. உற்பத்தி அதிகரித்தாலும், மின்சாரத்தை எடுத்துச் செல்லத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
அவதியில் முதலீட்டாளர்கள்:சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுடன் ஒப்பந்தப்புள்ளி குறித்த, முன் கலந்தாய்வு கூட்டம், தமிழக மின் வாரிய தலைமை அலுவலக, 10வது மாடியில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட அரங்கத்தில், அதிகபட்சமாக, 300 முதல் 350 பேர் மட்டுமே அமர முடியும்.
எதிர்பார்த்ததை விட, 650க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு வந்ததால், அரங்கம் நிரம்பி வழிந்தது. இதை சற்றும் எதிர்பாராததால், மின் வாரிய அதிகாரிகள் திணறினர். இதையடுத்து, இரண்டு கட்டமாக கூட்டத்தை நடத்தினர்.கூட்ட அரங்கில் நெருக்கடி அதிகமானதால், போதிய இருக்கை வசதியில்லாமல், பெரும்பாலான முதலீட்டாளர்கள் நின்று கொண்டே, ஒப்பந்தப்புள்ளி குறித்த விவரங்களை கேட்டறிந்தனர். போதிய வசதிகள் மேற்கொள்ளப்படாததால், எரிச்சலடைந்த ஒரு சில முதலீட்டாளர்கள், கூட்டத்தை புறக்கணித்து விட்டு சென்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.